சர்வதேச கால்பந்து சம்மேளனம்(FIFA) சார்பில் பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்த இந்தியாவுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.

FIFA சார்பில் 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலகக் கோப்பை போட்டிகள் 2008 முதல் நடத்தபட்டு வருகின்றது. அடுத்த ஆண்டு (2020) நடக்கவிருக்கும் 17 வயதுக்குட்பட்ட போட்டியை நடத்த பல்வேறு நாடுகள் விண்ணப்பித்திருந்த நிலையில், நேற்று(மார்ச்,15) மியாமியில் நடந்த சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஆலோசனை கூட்டத்தில் இத்தொடரை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு வழங்க முடிவு எடுத்துள்ளது.

இதனையடுத்து ‘2020ல் 17 வயதுக்குப்பட்ட பெண்களுக்கான உலகக்கோப்பையை இந்திய கால்பந்து சங்கம் நடத்த உள்ளது’ என FIFA தனது டுவிட்டரில் தகவல் வெளியிட்டது. இதனை இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பிரபுல் படேலும் உறுதிச் செய்தார்.

இந்நிலையில் நேபாளத்தில் நடைபெற்று வரும் தெற்காசிய சம்பியன்ஷிப் போட்டியில் விளையாடிவரும் இந்திய தேசிய மகளிர் அணியானது மாலத்தீவு  அணியை 6-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது. இதற்குமுன்னர் தெற்காசிய போட்டிகளில் இந்திய அணி 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு 17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை போட்டியை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது குறிப்பிடத்தக்கது.