அத்தியாயம் – 4

இருள் சூழ்ந்திருந்த வெட்டவெளியில் தன் முன்னால் அமைக்கப்பட்டிருந்த ஓமக்குண்டத்தில் இருந்து ஜீவாலை வெம்மையாய் வீசிக்கொண்டு இருக்க அதை குளிர்விக்க போராடிக் கொண்டு இருந்தது காற்று. காற்றின் பசப்பு வார்த்தைக்கு மயங்காமல் மேல்நோக்கி எரிந்த ஓமக்குண்டத்தில் நெய்யை வார்த்தான். அந்த மயானத்தின் வாசலில் கண்ணாடிப் பாட்டிலின் திரவத்தை வயிற்றுக்குத் தாரைவார்த்த காவலாளி நாற்காலியியே மல்லாந்திருக்க இரண்டு பட்டன்களின் உபயத்தில் திறந்திருந்த மார்ப்புக் கூட்டிற்குள் சில துளிகள் ரத்தத்தை ருசிபார்த்து உண்டு கொழுத்து வெளிவந்து ,எங்கோ மறைந்து போனது கொசு ஒன்று.

நெற்றியில் குங்குமப்பொட்டு, ரத்தச்சிவப்பில் இடுங்கிய கண்கள் ,நீண்ட ஜடாமுடி, கழுத்து கொள்ளா உத்திராட்ச மாலைகள், கறுப்பு வேட்டியும் மேல்துண்டும் அணிந்திருந்தான் பாலா .இவன் ஒரு டாக்டர் என்று சத்தியம் பண்ணி சொன்னாலும் அந்த வேடத்தில் அவனைப் பார்க்கும் யாரும் ஏன் அம்மயானத்தில் நித்திரையில் ஆழ்ந்திருந்த பிணங்கள் கூட நம்பாது. அத்ததை கணகச்சிதமாய் அடித்தொண்டையில் இருந்து ஏதேதோ மந்திரங்களை உபதேசித்தான்.

அருகே இருந்த மரத்தின் மேல் ஆந்தை ஒன்ரறு  அதை ரசித்து கேட்டுக் கொண்டு இருந்தது. கால்களை கட்டியபடி படுத்திருந்த அந்த பருத்த கோழியின் கழுத்துப்புறம் பாலாவின் கூர்நீண்ட பற்களால் கடித்து பீச்சியபடிக்கப்பட்ட திரவம் ஓமக்குண்டத்தில் விழ நெருப்பு ஆறடிக்கு உயரமாய் ! அவன் முகத்தில் ஒரு கர்வச்சிரிப்பு கைகளை ஓங்கினான். அருகே வெட்டப்பட்டிருந்த குழியின் மேல் மூடி தானாக திறந்தது. அதன் உள்ளே ரோஸ்ட்டட் சிக்கனின் வடிவில் பலூன்கள் கட்டப்பட்டு இருந்தது. குழிக்குள் சில மணி நேரங்களுக்கு முன்பு புதைக்கபட்டு இருந்த பிணம்….! கண்களை மூடி இருக்க, சிப்பாய்களைப் போல் நின்று கொண்டு இருந்த அந்த சிக்கன் வடிவ பலூன்கள் அந்த உயிர் எச்சமான உடலை துளைத்து மீண்டு தலைப்பக்கமாக வந்து பள்ளத்தில் இருந்து வெளியே குதித்தன .முற்றிலும் தன் வயிற்றில் காற்றிற்கு பதில் ரத்தத்தை நிரப்பியபடி,

மயானக் காட்டிற்குள் பாலாவின் சிரிப்பு அண்டமே அதிரும்படி கேட்கிறது. அண்ணாந்து வானத்தைப் பார்த்த அவன் முகத்தில் சில்லிப்பான தண்ணீர் தெளிக்கப்பட்டு இருக்க, “பாலா பாலா எழுந்திரு ஏன் இப்படி தூக்கத்திலே சிரிக்கிறே?!” என்று தட்டி எழுப்பினாள் துளசி.

மலங்க மலங்க விழித்திபடியே எழுந்த அவன் துளசியை ஒரு அந்நியப்பார்வை பார்த்துவிட்டு தன்னையே ஏறயிறங்க பார்த்தேன். “நான்… எப்படி…?!”

“மக்கு” தலையிலேயே ஒரு குட்டு வைத்தாள் .

“அப்பா வர்றாங்கன்னு அடிச்சிபிடிச்சி ஓடி வர்றேன் .நேத்தே சொன்னேனே. இப்படி தூங்கிகிட்டு கனவு வேற? அதென்னடா ராட்சசன் மாதிரி ஒரு சிரிப்பு.” அவனின் படுக்கைப் பக்கத்தில் இருந்த மயான மந்திரவாதி என்ற புத்தகத்தைப் பார்த்தாள்.

“இந்தமாதிரி புக்கெல்லாம் படிக்காதேன்னு எத்தனை தடவை சொல்றேன். கண்டதையும் படிச்சிட்டு கனவுலே பைத்தியம் மாதிரி சிரிக்கவேண்டியது. நானே உன்னை மெண்டல் ஆஸ்பிட்டல்ல பிடிச்சிக் கொடுத்திடறேன் இரு.” அவள் திட்டியபடியே அவனை பிடித்து டவலுடன் பாத்ரூமிற்குள் தள்ளினாள். இன்னும் பத்து நிமிஷம்தான் டயம் டக்குன்னு வெளியேவர்றே அப்பா வந்து போனத்துக்கப்பறம் நல்லா குளிச்சிக்கோ….?!” அவள் அறையை ஒழுங்குப்படுத்த துவங்கினாள்.

குளித்து முடித்து ஹாலுக்கு வந்தபோது சூடான தேநீரோடு துளசியின் தந்தையும் காத்திருந்தார். குசலவிசாரிப்புகள் முடிந்ததும்,

“தம்பி துளசி உங்க இரண்டு பேர் விஷயமும் சொல்லிச்சு எனக்கு சம்மதம். நீங்க உங்க வீட்டுப் பெரியவங்ககிட்டே பேசிட்டு சொன்னா சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சிடலாம்.” என்று பட்டென்று விஷயத்திற்கு வந்துவிட்டார் அவர்.

பாலா துளசியின் முகத்தைப் பார்த்தார். “அப்பாவுக்கு எப்பவும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுதான். நான் ஏற்கனவே துளசியைப் பற்றி சொல்லிட்டேன் சார் அவங்களுக்கும் சம்மதம்தான். இந்தவருடம் விளைச்சல் முடிஞ்சதும் தை மாதம் திருமண விஷயம் பற்றி பேச சென்னைக்கு வருவதாக அப்பா சொல்லியிருக்கிறார்.”

“அப்பறம் என்ன சாரு மோருன்னுட்டு மாமான்னு கூப்பிடுங்க,” என்று சந்தோஷித்தார் அவர். “நமக்கு பிள்ளைங்க வாழ்க்கைதான்னு முக்கியமின்னு நினைக்கிற பெத்தவங்க நாங்க வேற எப்படி முடிவெடுப்போம் அப்போ நான் கிளம்பறேன் தம்பி ஒரு வேலை விஷயமா வந்திருக்கேன் முடிச்சிட்டு ராத்திரி ரயில்லேயே கோயம்புத்தூர் கிளம்பணும்.” வெளியே காத்திருந்த அலுவலக காரில் அவர் கிளம்ப தந்தையை வழியனுப்பிவிட்டு துளசி வந்தாள் பாலாவிடம்.

அவன் முகத்தில் சந்தோஷத்தைத்தாண்டி ஒரு அயர்ச்சியும் குழப்பமும் இருந்தது.

“என்ன பாலா முகத்தில் சுரத்தேயில்லாமல் இருக்கே என்னாச்சு?”

“குழப்பம்தான் அந்த விபத்துலே அடிப்பட்ட பொண்ணோட பாடி சட்டுன்னு எப்படி எரிந்து போகும்?! அதிலும் அவளுடம்பில் இருந்த எலும்புகள் எங்கே எதையும் கண்டுபிடிக்க முடியாதபடி பாடி தீப்பற்றியிருக்கு பாரான்சிக் லெவல்லேயும் சில தகவல்களை தருவதாக சொல்லியிருக்காங்க. இந்த விஷயம் இன்னைக் காலையிலே பேப்பரில் ஒரு கட்டத்தில் வரும் என்ன பதில் சொல்லப்போறேன்னு தெரியலை.”

“எனக்கும் அதே குழப்பம்தான் பாலா, சரி பயங்கரமா பசிக்குது வரும்போபோதே பார்சல் வாங்கியாச்சு சாப்பிடலாமா?” என்று டயனிங் டேபிள் மேல் கற்போடு இருந்த கவரைக் காட்டினாள். பார்சல் தன் கன்னித்தன்மையை இழக்க ஆரம்பித்தது. நினைவிற்கு வந்தவனைப் போல

“நீயேன் யூனிபார்ம்லே இல்லை துளசி” என்றான் பாலா

“கமிஷனர் கூட ஒரு அபிஷியல் மீட்டிங்க இருக்கு என்ன காரணமின்னு தெரியலை பார்மல்ஸ்லே அவர் வீட்டுக்கு வரச்சொல்லியிருக்கார் அதான் இந்த டிரஸ். நீ ஆஸ்பிட்டல் போறேயில்லை.”

“ம்… சுரத்தில்லாமல் வந்தது .அவன் பதில் நேத்து இரண்டு கேஸ் முடிச்சாச்சு, மத்தது ட்யூட்டி டாக்டர்ஸ்கிட்டே விட்டுட்டு வந்தேன். போய் பார்க்கணும். இன்னைக்கு மெடிக்கல் காலேஜ் ஸ்டூடன்ஸ்க்கு அனாடமி கிளாஸ் இருக்கு பிராக்டிக்கல்.” அவன் கைகளை சுத்தப்படுத்திட குழாயின் உதவியை நாடினான்.

துளசியின் கைப்பேசி அடித்தது. பாரன்ஸிக் பிரிவில் இருந்து நான்சி பேசினாள். காலை வணக்கத்தை அவள் சாக்லேட் குரலில் தந்தபின், “மேடம் நேற்று திடும்மென்று தீப்பிடித்து எரிந்து போனதாய் கொண்டு வந்த மிச்சத்தில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து இருக்கிறது. தனியாத்தானே இருக்கீங்க பேசலாமா?”

“சொல்லுங்க நான்சி…” குரலைத் தழைத்துக் கொண்டாள்.

“மேடம் நாங்க பாடியை கைப்பற்றும்போது எரிந்து கொண்டிருந்த அதன் மேல் நெருப்பை அணைக்க நீரை ஊற்றியிருக்காங்க ஆனா அந்த நீர் நெருப்பை கொஞ்சம் கூட தடுக்கலை அந்த நெருப்பு ஒரு வாட்டர் ப்ரூப்.”

“புரியலை உங்களுக்கு பிலும்மினி வகை தீக்குச்சிகள் பற்றித் தெரியுமா? 25 நொறுக்கப்பட்ட கண்ணாடித் துகள்கள், 50 சிவப்பு பாஸ்பரஸ் 4 கார்பன் துகள் 5 வேதிப்பொள்ளகள் 16 ஒட்டும் பசை இதை வைத்து தயாரிக்கப்படும் ஒரு வெடி பொருள் சுரங்கத்தில் மனி இணைப்புகளால் தூண்டப்பட்டு நெருப்பு பற்றிக் கொள்ளும் விசேஷகுணம் கொண்டவை அந்த கலவைதான் இறந்து போன பிணத்தின் மேல் தூவப்பட்டு இருக்கு, அடர் குளிர் நிலையில் இதன் ஆதிக்கம் அதிகம் இருக்காது. ஆனா தன்னைத்தானே ஒரு க்ரியாஊக்கியாக தூவப்பட்ட சிலமணிநேரங்களில் தீப்பற்றிக்கொள்ள வைக்கும் திறன் கொண்டது இந்தக் கலவை அதைத்தான் பிணத்தின் மேல் தூவியிருக்காங்க.”

“மை காட்…..!”

“இருங்க இன்னும் முழுசா சொல்லி முடிக்கலை ஏற்கனவே போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சிபோன பாடிதானே அது. சாதாரணமா மனித எலும்புகள் பிறக்கும்போது 270 இருக்கும் வயசாசக வயசாக சில வகை நோய்களினால் கூட தாக்கப்படும் எலும்பு முதிய நிலையில் 206தான் இருக்கும் நெருப்பில் குறுஎலும்புகள் அழிந்திருந்தாலும், அந்த உடலில் முக்கியபகுதியான இடுப்பு தொடைப்பகுதிகள் முதுகெலும்பு இவையெல்லாம் சுத்தமாக இல்லை, அது அந்த உடலில் இருந்ததற்கான அறிகுறியும் இல்லை அது வெறும் ஒரு சதைக்கோளம்.”

“அப்படின்னா….?”

“ஏதோ பெரிய தப்பு நடக்குது?! சீக்கிரம் தலைவலியாகுவதற்கு முன்னாடி கண்டுபிடியுங்க. ரிப்போர்ட்டோட காத்திருக்கிறேன் சீக்கிரம் வாங்க.” என்று நான்சி போனை வைக்க?! தன் எதிரில் இருந்த பாலாவிடம்,

“நேத்து ஒரு பொண்ணோட பாடி ஈமக்கிரியைக் கொண்டு போன இடத்தில தீப்பற்றிக்கொண்டதாக சொன்னேனே பாலா நினைவிருக்கா? அது உங்க மருத்துவமனையில போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட உடல்தானே?”

“ஆமாம் துளசி நான்தான் போஸ்ட்மார்ட்டம் செய்தேன் எப்படி தீப்பிடிச்சதாம் பாரன்சிக் நான்சிதானே பேசினா என்ன சொன்னா?”

“ரிப்போர்ட் தயாராயிருக்குன்னு வாங்கிக்கச் சொன்னா?!”

“ஓஹோ அந்த ஒருவார்த்தையை பத்து நிமிஷமா பேசினே?” அவனின் குரலில் ஒலித்த வித்தியாசம் துளசியை யோசிக்க வைத்தது. அந்த சிகப்புபாஸ்பரஸ் கலவை அந்த உடலில் எப்படி சேர்க்கப்பட்டு இருக்கும் அதிலும் பாலா போஸ்ட்மார்ட்டம் செய்தேன் என்கிறேன். அப்போதே எலும்புகள் இல்லை என்று ரிப்போர்ட்டில் தெரிவிக்கவில்லையே நேற்று பிணத்தை அந்த பெண்ணின் தந்தையிடம் ஒப்படைக்கும்போது அவள் பிரேத பரிசோதனை அறிக்கைப் பார்த்தாளே அதில் விபத்தில் மரணம் மூளைக்கு போகும் நரம்பு செயலிழந்து விட்டது என்றுதானே போட்டிருந்தது என்ற சந்தேகம் மண்டையைக் குடைய துளசி பாலாவை ஒரு நம்பிக்கையில்லா பார்வையைப் பார்த்தாள். அவன் அவளின் பார்வையைத் தவிர்த்தான் வெகு எச்சரிக்கையாக ! மருத்துவமனையில் அவனின் மேஜையின் உள் மூலையில் பொட்டலாமாய் குவித்து வைக்கப்பட்டிருந்த அந்த சிகப்பு பாஸ்பரஸ் கலவை அடுத்த இரைக்காக காத்திருந்ததை துளசி எப்படி அறிவாள்?!

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. நெருப்புத் தூரிகைகள் - 24 : லதா சரவணன்
  2. நெருப்புத் தூரிகைகள் - 23 : லதா சரவணன்
  3. நெருப்புத் தூரிகைகள் - 22 : லதா சரவணன்
  4. நெருப்புத் தூரிகைகள்-21 : லதா சரவணன்
  5. நெருப்புத் தூரிகைகள்-20 : லதா சரவணன்
  6. நெருப்புத் தூரிகைகள்-19 : லதா சரவணன்
  7. நெருப்புத் தூரிகைகள்-18 - லதா சரவணன்
  8. நெருப்புத் தூரிகைகள்-17 : லதா சரவணன்
  9. நெருப்புத் தூரிகைகள் -16 : லதா சரவணன்
  10. நெருப்புத் தூரிகைகள் -15 : லதா சரவணன்
  11. நெருப்புத் தூரிகைகள் -14 : லதா சரவணன்
  12. நெருப்புத் தூரிகைகள் -13 :லதா சரவணன்
  13. நெருப்புத் தூரிகைகள் -12 : லதா சரவணன்
  14. நெருப்புத் தூரிகைகள் -11 : லதா சரவணன்
  15. நெருப்புத்தூரிகைகள் -10 : லதா சரவணன்
  16. நெருப்புத் தூரிகைகள்-9 : லதா சரவணன்
  17. நெருப்புத் தூரிகைகள் -8- லதா சரவணன்
  18. நெருப்புத் தூரிகைகள் -7- லதா சரவணன்
  19. நெருப்புத் தூரிகைகள் -6: லதா சரவணன்
  20. நெருப்பு தூரிகைகள் -5: லதா சரவணன்
  21. நெருப்பு தூரிகைகள் -3 : லதா சரவணன்
  22. நெருப்பு தூரிகைகள் - 2 : லதா சரவணன்
  23. நெருப்புத் தூரிகைகள்-லதா சரவணன்