சென்னையில் உள்ள நீர்நிலைகளைப் பராமரிக்காமல், சுற்றுச்சூழலுக்கும், பொதுச் சுகாதாரத்திற்கும் கேடு ஏற்படுத்தியதாகக் கூறி தமிழக அரசுக்கு ரூ.100 கோடி  அபராதம் விதித்துள்ளது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.

 

நிலுவையில் இருந்த வழக்கு

சென்னை அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றில் அதிகளவு பிளாஸ்டிக் போன்ற கழிவுகளைக் கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாகவும், நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும் ஜவஹர்லால் சண்முகம் என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இதே மாதிரியான கோரிக்கையுடன் முத்துமீனா, எட்வின் வில்சன் ஆகியோரும் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணை நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயில் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் நாகின் நந்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு கடந்த 13ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றை அகலப்படுத்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நீர்வெளியேற்று நிலையங்கள் அமைத்தல் போன்றவை குறித்து தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையைப் படித்த நீதிபதிகள், அரசு அதிகாரிகளின் நடவடிக்கை மந்தமாக உள்ளதாக அதிருப்தி தெரிவித்தனர்.

 

 

ரூ.100 கோடி அபராதம்

நல்ல சுற்றுச்சூழலை குடிமக்களுக்கு அளிக்கும் கடமை அரசுக்கு இருப்பதாகக் கூறிய நீதிபதி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க தமிழக அரசு தவறி விட்டது என்பதை அடையாறு, கூவம், பங்கிங்ஹாம் கால்வாய் விவகாரங்கள் மூலமாக தெளிவாக தெரிகிறதாகக் கூறினார்கள். இதுதொடர்பாக கால வரையறைக்குட்பட்ட செயல் திட்டத்தை பொதுப்பணித்துறை வகுக்க வேண்டும் என்றும், நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்படுவதாகத் தெரிவித்த நீதிபதிகள், அபராத தொகையை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். மேலும், ஏப்ரல் 23ஆம் தேதி தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராயவும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் சிறப்பு குழுவை நியமித்த நீதிபதிகள், ஆய்வறிக்கையை 3 மாத காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.