காவல்துறையில் வருகைப் பதிவேட்டில் தமிழில் கையெழுத்திடவும் குறிப்பாணைகள், கடிதத் தொடர்புகளைத் தமிழில் மேற்கொள்ளவும் தமிழக டி.ஜி.பி ஜே.கே. திரிபாதி உத்தரவிட்டுள்ளார். தமிழகக் காவல்துறையில் அனைத்து தகவல் தொடர்புகளும் தமிழில் இருக்க வேண்டும் என்று அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தமிழக டி.ஜி.பி திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ”தமிழ் வளர்ச்சித் துறை இயக்ககம் நவ. 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சி ஆட்சிமொழி திட்டச் செயலாக்க ஆய்வு மேற்கொண்டது.

இது தொடர்பாகத் தமிழ் வளர்ச்சித் துறை பணியாளர்களைத் தங்கள் இருக்கையில் பராமரிக்கும் தன் பதிவேடு, முன் கொணர்வு பதிவேடு மற்றும் அனைத்துப் பதிவுகளையும் தமிழ் மொழியில் பராமரிக்க வேண்டும்.

வருகைப் பதிவேட்டில் தமிழில் கையொப்பம் இட வேண்டும். அனைத்து வரைவு கடிதத் தொடர்புகளும், குறிப்புகளும் தமிழில் எழுதப்பட வேண்டும். மேலும் அனைத்து காவல் வாகனங்களுக்கும் தமிழில் காவல் என்று இடம் பெற்றிருக்க வேண்டும். அனைத்து அலுவலக முத்திரைகளும் மற்றும் பெயர்ப் பலகையும் தமிழில் மாற்றப்பட வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளனர்.

மேற்கண்ட பொருள் தொடர்பாகத் தலைமை அலுவலக அனைத்துப் பணியாளர்களுக்கும், பிற காவல் அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கும் உரிய அறிவுரை வழங்கச் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கைக்கு அனைத்து தரப்பு மக்களும் அரசியல் தலைவர்களும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.