5. அ, ஆ, இ தற்கொலை

இதை எழுதுவேன் எனச் சிறிதும் நினைத்திராத நான், ஒரு துணிவான பெண்ணின் தற்கொலை என்னை எழுதவைத்திருக்கிறது,

உணவு. உணவு மனதுக்கு என்ன செய்யும்.. அதை வரிசையாகப் பார்த்து வருகிறோம். இங்கு இன்று தற்கொலைபற்றி மட்டும் பேசப் போகிறோம்.

முதலில் ஏன் தற்கொலை.

உலகில் வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை. இது உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் பொருந்தும்.

முதலில் தற்கொலை எண்ணம் எங்கிருந்து வரும்?

சூழல் பிரச்சினைகள்…. குறிப்பிட்ட சூழல் நம்மை ட்ரிகர் செய்யும்..

குறிப்பிட்ட விஷயம்.. இப்பொழுது உறவு பிரச்சனை என்றால் அதை கொஞ்சம் தள்ளிப்போட்டுவிட்டு வேறு வேலை செய்யலாம். ஊரை விட்டுக்கூட போகலாம். உயிரைவிட எதுவும் பெரிதில்லை.

அதைத்தவிர மனதில் அந்த எண்ணங்கள் வரும் பொழுதே அதைக் கவனிக்க வேண்டும். நிரந்தரமில்லா வாழ்வை ஒரு மானோ, புலியோ இல்லை ஒட்டகச்சிவிங்கியோ கேள்வி கேட்டு அங்கயே தங்கிவிடுவதில்லை, ஆனால் மனிதன்…

காலையில் பல் தேய்க்க தண்ணீர் வராவிடில் ஸ்ட்ரெஸ், டிபன் இல்லாவிடில் அவ்வளவோதான்… இதில் சாவி வேறு தொலையும்.. எல்லா டென்ஷனும் ஏறும்.. இப்படி நம் பொறுப்பின்மையால் வரும் கோவத்தை நாம் முதலில் கட்டுப்படுத்த வேண்டும்.

அதுமட்டுமில்லாம் திடீரென்று வேலை போய்விட்டது, விவாகரத்து ஆகிவிட்டது, கல்வியில் பிரச்சினை, பணம் இல்லை, மனது உடைந்து இருக்கிறது, நோய்மை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது…. இப்படிப் பல பல காரணங்களால் நாம் கவலைப்பட்டுக்கொண்டே இருக்கிறோம்.  நம் சமநிலை குலையும் சமயத்தில் நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத நிலை உருவாகிறது. உலகில் எந்த இனமும் நிரந்தரமின்மையை ஏற்றுக்கொள்ளும். ஆனால் மனிதனுக்கு மட்டும் எல்லாம் சரியாக நடக்க வேண்டும் இல்லையெனில் அவனுக்கு மன அழுத்தம், சோர்வு எல்லாமே வரும். அதனால்தான் மனித இனத்தில் அதிகளவு மனவியல் நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள்.

இந்தநிலையில்தான் உணவின் பங்கு இங்கு மகத்தானது. நான் அளிக்கும் உணவுக்கட்டுப்பாடு கட் ஃப்ளோரா அடிப்படை கொண்டது. அதாவது வயிறு சரியாக இருக்கும் பொழுது செரொடெனின் சரியாகச் சுரக்கும். செரொடெனின் நம்மை நன்றாக உணரச் செய்யும். ஒரு நியூரோ ட்ரான்ஸ்மீட்டர். தூக்கத்தைச் சரி செய்ய வல்லது. தூக்கம் இல்லையெனில் நமது உடலும் மனதும் சரியாகத் செயல்பட முடியாது. மூளை தன்னைப் புதுப்பிக்க முடியாது. அது மட்டுமல்ல கோலைன், காபா போன்றமைக்கும் உணவுகள் சத்துகள் நமது உடலில் சுரந்துகொண்டே இருக்கவேண்டும். நம்மை நாம்  நன்றாக உணர வேண்டுமெனில் சரியான விகிதத்தில் உணவு உட்கொள்ள வேண்டும்.

80% செரொடெனின் நம் சிறுகுடலில்தான் சுரக்கிறது. அதைச் சரி செய்யாமல் மன அழுத்தம், மனச் சோர்வை வெளியில் இருந்து சரி செய்வது கடினம்.

மூட், உணர்வு பெருக்கு இவை எல்லாம் நியுரோ டிரான்ஸ்மீட்டர்களுடன் தொடர்புகொண்டது. நம் கட் ஃப்ளொரா சரி இருந்தால்தான் நியுரோ டிரான்ன்ஸ் மீட்டர்கள் சரியாக வேலை செய்யும்.

அதைத்தவிர ஹார்மோன்களுக்கும் மனதுக்கும் மிக மிக நெருங்கிய தொடர்பு உண்டு. தைராயிட், இன்சுலின் எல்லாம் ஹார்மோன்கள்.. ஏன்? வைட்டமின் டி கூட ஹார்மோன்…

அப்போ, உணவைக் கொடுத்தால் தற்கொலை எண்ணம் சரியாகுமா என கேட்கலாம்..? டயட் 50 %, அடுத்து சிக்கல்கள் 30%.

ஒரு ரப்பர் பேண்டை இழுத்துக்கொண்டே இருப்பது போலத்தான் ஸ்ட்ரெசில் இருப்பது.. அப்படி இழுத்துவிடும் பொழுது அது சுரப்பி சிக்கல்களுக்கு அடி கோலுகிறது. ஸ்ட்ரெஸ் மூலம் 150 விதமான நோய்கள் வருவதாக சைக்காலஜி புத்தகத்தில் வாசித்து இருந்தேன். அவை பெரும்பாலும் ஆட்டோ இம்யூன் பிரச்சினைகள். ஆக மொத்தம் உணவு சரியில்லாவிட்டாலும்  தொடர்ந்து மனதிற்கு அழுத்தம் கொடுத்தாலும் தற்கொலை எண்ணம் தலைதூக்கும் என்பதுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

எதனால் அழுத்தம் ஏற்படுகிறது?

பணப் பிரச்சனை

தொழில் சம்பந்தப்பட்டவை

குடும்பப் பிரச்சனைகள்

அதிகளவு உடல் உழைப்பு, மன உழைப்பு

தூக்கம், உணவு, சமூகம்

வேலை கிடைக்காமை

நரம்பியல் பிரச்சனைகள்

உடல் உபாதைகள் எனப் பல காரணங்களால் வரலாம்

இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் முன்பு தூக்கம் தான் அடிப்படை. பொதுவாக ஒரு நாளில் அரைமணி தூங்குபவருக்கும்,  எட்டுமணி நேரம் தூக்குபவருக்கும் வித்தியாசம் உண்டு. சிலருக்கு அரைமணிநேரம் போதுமானதாக இருக்கலாம், சிலருக்கும் அரைநாள் போதுமானதாக இருக்கலாம்.இப்படி தன் உடலுக்கேற்றவாறு ஒவ்வொரு மனதிற்குமே தூக்கம் அவசியமாகும்.

அடுத்து ஒரு பேருண்மை… அக்ஸ்ப்டென்ஸ், அடாப்லிபிடி எனப்படும் ஏற்றுக்கொள்ளல்தான். இது இல்லாமல்தான் பெரும்பாலான அழுத்தங்கள் உருவாகின்றன.

மனம் என்பது மிக மிக மென்மையானது… அதே சமயம் மிக மிகக் கடினமானது… ஒற்றை மனம் ஒரு லட்சம் மனிதர்களைக் கட்டுண்டு கிடக்கச் செய்யும். ஹிட்லர் மோசமான எடுத்துக்காட்டு. காந்தி நல்ல எடுத்துக்காட்டு.

கடினம் யாருக்குத்தான் இல்லை. புத்தர் சாவே இல்லாத வீட்டில் கடுகு வாங்கி வா… உன் குழந்தையைப் பிழைக்க வைக்கிறேன் என்பார், எல்லா வீட்டிலும் மனநலப் பிரச்சனைகள் உண்டு.. தற்கொலைக்கு ஒரு முறையாவது முயலாத, எண்ணாத மனிதன் உலகில் மிக மிகக் குறைவு.

தன்னைத் துணிவுடன், வலிமையுடன், மகிழ்வாகக் காட்டிக்கொள்ளும் பெண்களுக்குப் பின் மிகப்பெரும் வலி இருக்கும். சமூகம் துணிவு முக மூடியை அவர்கள் முகத்தில் மாட்டிவிடுவதால் பகிர யோசிக்கிறார்கள் அல்லது தனக்கே எல்லாம் முடியும் என நினைக்கிறார்கள்.

தற்கொலை எண்ணம் என்பது மனநலப் பிரச்சனை, நோய்க்கூறு. அதை மருத்துவர்கள் அல்லது மனநல நிபுணர்கள் சரிசெய்யவேண்டிய விஷயம். நாற்பதைத் தாண்டிய பெண்களுக்கு பிரி மெனோபாஸ்… இயற்கையாக நடப்பது. இக்காலகட்டத்தில் மனம் அதிகப்படியாக அலைப்பாயும். யாரைக் கடித்துக் குதறலாம் எனப் பசியுடன் அலையும். உடலும், மனமும் கட்டுக்குள் இருக்காது. எந்த மருந்தும் உதவாது. குடும்பம் கவுன்சலிங்க் மட்டுமே உதவும். இது சில பெண்களுக்கு மிகக் கடுமையாகத் தாக்கும். அடுத்தவரைத் தாக்கும் நாக்கு தன்னைச் சுடும்பொழுது முடங்குவார்கள். வீடே அன்பில்லாமல் போகும். அரவணைக்க ஆள் இருக்காது. வந்தாலும் அவளே துரத்திவிட்டு அழுவாள். பின் தன்னிலை வரும் பொழுது உறவுகள் கொஞ்சம், கொஞ்சமாக விலகி இருக்கும்.

மற்ற நோய்மைகளுக்கு அன்பும், ஆதரவும் கிடைக்கும்… மனச்சோர்வுக்கு விலகல்தான் பரிசாகக் கிடைக்கும். எனவே நோய்மை இன்னும் அதிகமாகும். அப்பொழுது நமக்கு யாரும் இல்லை என்ற எண்ணம் ஆழமாகும்.

இதுதான் என்று இல்லை… இப்படிப் பல காரணங்கள். எது இருப்பினும் தற்கொலையை மட்டும் நியாயப்படுத்திவிடாதீர்கள். இணையம் தூரத்தை அருகில் வைத்து, உறவுகளை தூரமாக்கிவிட்டது. மனம்விட்டு எப்பொழுது குடும்பத்துடன் பேசினோம்? தொலைக்காட்சி, அலைப்பேசி இல்லாத குடும்ப நேரம் இருக்கிறதா? இணையத்தில் யாருக்கோ சாப்டியா, நல்லாருக்கியா செய்தியை மனைவிக்கு அனுப்பியது உண்டா? கணவனை எப்பொழுது கடைசியாகக் காதலுடன் ஒரு மெசெஜ் அனுப்பினோம்?

டிக்டாக்கில் ஒரு பெண்ணுக்கு நான்கு கோடி லைக்குகள்.. விட்டால் தமிழக மக்கள்தொகையை விட டிக்டாக் மக்கள் தொகை அதிகம் ஆகும்போல இருக்கு, அங்கு பொது இடத்தில் தனியாக எந்தப் பெண்ணும் நடனமாடலாம், பாட்டுப் பாடலாம். அதனால் வரும் விளைவுகள்?

தனியாகச் சம்பாதிக்கத் தெரியாது. கல்வி இருக்காது. தனியாக ஒரு ஊருக்குப் போய்வரத் தெரியாது… எல்லாம் குடும்பம் சார்ந்து இயங்கும் பெண்கள் இணைய உலகத்தின் பரப்பை, வீச்சைப் பார்த்துத் தடுமாறுகின்றனர். இதில் படித்த பெண்களும் விதி விலக்கில்லை. பணக்கார பெண்களைக் குறிவைத்து கொள்ளை அடிக்கும் கும்பலும் உண்டு.

பொள்ளாச்சிபோல் ஒருபக்கம் என்றால் இந்த இணைய வீச்சை ஆண்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பெண்கள் சுதந்திரமாக நடமாடத் தடை விதிக்கின்றனர். அது பல சிக்கல்களில் முடிகிறது. கலாச்சார அதிர்ச்சி.. வீட்டில் ஒரு பெண்ணைப் பார்த்து, அவள் சோறு போட்டு, காலை பிடித்துவிட்டு எல்லாம் செய்வாள் எனக் கற்பனையில் வளர்ந்த பலருக்கு டிக் டாக், ஃபேஸ்புக் பெண்களைப் பார்த்தால் ஒவ்வாமை ஆகிறது.

அதைத்தவிர வாட்ஸ்அப் வீடுவரை ஊடுவுறுகிறது. அலுவலகத்தில் தனக்கு வேண்டும் என்பதால் மிக நெருக்கமாக இணையத்தில் அணுகும் பெண்களும் உள்ளனர். எல்லாம் இணையம்தான் என்ன வேணாலும் பேசலாம் பழகலாம். ஏதும் பிரச்சனை இல்லை என்னும் தெளிவுடன் உள்ளே சென்றால் விட்டில் பூச்சிபோல் மாட்டிக்கொள்கின்றனர். இது மாய வலை.

சரியாக விழிப்புடன் இல்லாவிடில் நம்மை சிக்கவைக்கும் புதைக்குழி. சமூகம் போல்தான் இணையமும். அவரவர் தனக்குத்தானே பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இணையம், குடும்பம், கல்வி, சொத்துரிமை, வேலை தனிதன்மை, குழந்தை வளர்ப்பு எதை விடுவது, எதை செய்வது… இது புரியாமல் பெரும் குழப்பம். அதே சமயம் இணைய நட்புகளால் தற்கொலைகள் கடைசி நேரத்தில் காப்பற்றப்படவும் செய்கின்றன. நிறைய விழிப்புணர்வுகள். உணவு மாற்றத்தால் மனச்சோர்வு நீங்கிய பலர் உண்டு.

உணவோ, மனமோ, இணையமோ நாம் எப்படி அதை உபயோகம் செய்கிறோமோ அப்படி அது நமக்கு பலன் கொடுக்கும். எதுவாகிலும் இருக்கட்டும்.

உயிரோடு இருப்போம். அதுதான் மிக முக்கியம்.

வாழ்தல் அத்தனை அழகு. வாழ்ந்துடுவோம் எதுவாகினும்.. அவ்ளோதான்.

முந்தைய தொடர்கள்:

4.எங்கே இருக்கிறார் நவீன கடவுள்? – https://bit.ly/38X0y16
3. மனங்களை இழந்து இணையத்தில் அடையபோவது என்ன? – https://bit.ly/33w5IjK
2.உறவுகள் தரும் அழுத்தங்கள் – https://bit.ly/2waiB6Q
1.ஆரோக்கியம் பொறுத்தவரை –https://bit.ly/3b9jUlb

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. எது நம் வீடு ?- கிர்த்திகா தரன்
  2. நம்மைக் காக்கும் நல்ல பாக்டீரியாக்கள் - கிர்த்திகா தரன்
  3. தற்கொலையை மட்டும் நியாயப்படுத்தி விடாதீர்கள்- கிர்த்திகா தரன்
  4. எங்கே இருக்கிறார் நவீன கடவுள்? - கிர்த்திகா தரன்
  5. மனங்களை இழந்து இணையத்தில் அடையபோவது என்ன? - கிர்த்திகா தரன்
  6. உறவுகள் தரும் அழுத்தங்கள் - கிர்த்திகா தரன்
  7. ஆரோக்கியம் பொறுத்தவரை நாம் என்ன கொடுக்கிறோமோ அதுதான் நாம் - கிர்த்திகா தரன்