சிற்றோடை மீன்கள் (4)

“ஜன்ம திதி “இது 1957 ல் இந்திய விருது பெற்ற பெங்காலி படம். திலிப் சௌத்திரி இயக்கியிருக்கிறார்.

அடுத்து ஒரு ஆங்கிலப் படம். “VIRSA AND THE MAGIC DOLL “இதை இயக்கியவர் சாந்தி பி சௌத்திரி. கல்கத்தா பிரஸிடென்ஸி கல்லூரியிலும் பின் கிளாஸ்கோ யுனிவர்ஸிட்டியிலும் பயின்றவர். சத்யஜிரேயுடன் 1955- 57 ல் பணிபுரிந்தவர். பிரிட்டீக்ஷ் பிலிம் சொசைட்டியிலும் முக்கிய பங்கு பெற்றவர். தன் வாழ்நாளில் நான்கு முறைகள் (1958, 1968, 1977, 1978) அகில இந்திய விருதுகள் பெற்றவர். இவரது சொந்த லிட்டில் சினிமா பி. லிட் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக “VIRSA AND THE MAGIC DOLL “என்ற படம் வெளிவந்தது. இதுவே 1958 ல் விருது பெற்றது. இந்த விருதை இயக்குநருக்கு 28.4. 1959ல் நடந்த விழாவில் அன்றைய ஜனாதிபதியால் வழங்கப் பெற்றது

அடுத்து 1959ல் விருது பெற்ற படம் BANYAN DEER. இதை இயக்கியவர்கள் மூன்று பேர்கள் கோவிந்த் சர்யா அகமது லத்தீஃ , சாந்தி வி வர்மா,. பிலிம் டிவிக்ஷனால் தயாரிக்கப்பட்டது

இந்திய சிறார் திரைப்பட இயக்கம் சரியான பாதைகளில் போய்க் கொண்டிருகிறது என்பதை உறுதி செய்யும் மற்றொரு படம் இது  . குழந்தைகளுக்காக சொல்லப் பெறும் பாரம்பரியமிக்க நாட்டுப்புற கதையை அடிப்படையாகக் கொண்டது.

குழந்தைகள் உள்ளிட்ட மனிதர்களை வைத்து கதை சொன்னவர்கள் பிறகு குழந்தைகளுக்கு பிடித்த மிருகங்கள் வழியே கதை சொன்னார்கள். அதற்கு அவர்கள் நாட்டுப்புற கதைகளையே தேர்ந்தெடுத்தார்கள். அப்படிபட்ட கதைதான் இது.

கதையை ஒரு சில வரிகளிலேயே சொல்ல முடியும்தான் .நந்திதா என்ற சின்ன ஆண் மான் தன் தாய்தந்தையை காப்பாற்றும் பொருட்டு மக்களால்,  வேட்டைப் பிரியரான ராஜாவுக்காக   கட்டமைக்கப்பட்ட ஒரு மான் பூங்காவில் தன்னை அடைத்துக் கொள்கிறது . மற்றைய மான்களும் அங்கு வந்து சேர்கிறது. அவர்கள் ஒன்று சேர்ந்து பேசி நாளுக்கு ஒவ்வொருவராக ராஜாவுக்கு வலியப் போய் தீனியாவதின் மூலம் மற்றைய மான்கள் சற்று நிம்மதியாக இருக்கலாம் என்று தீர்மானித்தார்கள். நடைமுறைக்கு கொண்டும் வந்தார்கள். தனது முறை வந்த போது தைர்யமாக ராஜா முன் நின்றது. அழகான சின்ன மானைக் கொல்ல அவருக்கு மனம் வரவில்லை. மானின் தைர்யத்தையும் மற்றவர்கள் பொருட்டு தன்னை இழக்கத் தயாராக இருக்கும் பண்பையும் உணர்ந்து ராஜா வேட்டையாடுதலையே விட்டு விடுகிறார் . இது மூலக்கதை.

இதிகாசங்களில்  அந்தந்த பிராந்திய மன உணர்வுக்கு எற்ப மாற்றுப் பிரதிகள் ஏற்படுவதுண்டு . அது போலவே நாட்டுப்புற கதைகளிலும் மாற்றுப் பிரதிகளும் உண்டு. இங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த  நாட்டுப்புற கதையின் மாற்றுப் பிரதியில்   BANYAN DEER ஆக அவதரிப்பவர் கௌதம புத்தர்.

இதன் கதை என்ன ? பனாரஸ் பக்கத்தில் ஒரு ராஜா இருந்தார். அவர் தீவிரமான வேட்டைப் பிரியர் . அவரால் மக்களுக்கும் விளை நிலங்களுக்கும் துன்பம். கிராம மக்கள் ஒன்று கூடி முடிவெடுத்து அவருக்கு பக்கத்தில் ஒரு மான் பூங்காவை கட்டினார்கள். அதில் மான்களை ஒன்று சேர்த்தார்கள் பின் ராஜாவுக்கு தகவல் அனுப்பினார்கள் , நீங்கள் அங்கே சென்று இனி வேட்டையாடலாம் என்று.

உள்ளே வந்த மான்களில் BANYAN DEER ஆக அவதரித்த கௌதம புத்தரும் அவரைப் பின் பற்றுவர்களில் ஒருவரான  BRANCH DEERம் உண்டு.

வழக்கம் போல தினம் ஒருவராக ராஜாவுக்கு தீனியானார்கள். இப்போது ஒரு கர்ப்பிணி மானின் முறை வந்தது. என்னோடு சேர்ந்து வயிற்றில் இருக்கும் என் குழந்தையும் ஏன் உயிர்த் தியாகம் செய்ய வேண்டும் என்ற அதன் கேள்வி எல்லோர் முன்னும் வைக்கப்பட்டது.

இப்போது BANYAN DEER தானே முன் வந்து உனக்குப் பதிலாக நானே போகிறேன் என்று ராஜாவின் வெட்டு களத்தில் தன் தலையை வைத்தது. அதன் அழகையும் கம்பீரத்தையும்  கவனித்து இது மான்களின் ராஜாவான BANYAN DEER என்பதை உணர்ந்து ராஜாவுக்கு தகவல் போனது. நேரில் வந்தவர் தன் பிரஜைகளின் பொருட்டு மான்களின் ராஜா  தியாகம் செய்ய முன் வந்ததை உணர்ந்து இனி நான் மான்களையே வேட்டையாடுவதில்லை என்று உறுதியளித்தார். அப்படியும் மான்களின் ராஜா தன் தலையை வெட்டுக் களத்திலிருந்து எடுக்கவில்லை . பின் மனிதர்களின் ராஜா படிப்படியாக இறங்கிவந்தார் . கடைசியாக தான் இனி எந்த உயிர்களையும் வேட்டையாடுவதில்லை என்று உறுதியளித்தார்.

இந்த மாற்றுப் பிரதியை கண்டெடுத்தவர் அஜந்தா குகை ஓவியங்களில் ஆராய்ச்சி மேற்கொண்டவரும் புத்தர் பற்றின நாட்டுபுறக் கதைகளை சேகரித்தவருமான SUSAN CAROL STONE . Ph.D.

இந்தத் திரைப்படத்தை பிலிம் டிவிக்ஷனே தயாரித்தது . இந்தப்படத்தை நாங்கள்தான் தயாரிப்போம் என்று பிலிம் டிவிக்ஷனுக்கும் டிஸ்னிக்கும் நீண்ட நாள் பேச்சு வார்த்தை நடந்து கடைசியில் இந்திய பிலிம் டிவிக்ஷனே வென்றது.

அற்புதமான நாட்டுப்புறக் கதை. மனிதர்களிடமிருந்து விலகி முதன் முதலாக குழந்தைகளுக்கு பிடித்தமான விலங்குகளின் கதை விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.

இதே கதை சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின் வேறோருவர் மூலமாக இந்தியாவில் FIRST COLOR ANIMATED FILM ஆக தயாரிக்கப்பட்டது.

சில கோட்டுச் சித்திரங்களாகவும் VOICE OVER ஆகவும் படத்தின் ஸ்கிரிப்ட் இப்போது google ல் கிடைக்கிறது.

” ஒரு நூறு இளைஞர்களை தாருங்கள். தேசத்தையே மாற்றித் தருகிறேன் “ என்று நரேந்திரன் @ விவேகானந்தர் சொன்னதாகச் சொல்வார்கள் . அவர் சொன்னதாக சொன்ன இந்த சொற்றொடரை நன்கு உற்று நோக்கி உணர்ந்து பார்த்தால் அவர் கேட்ட நூறு இளைஞர்கள் தோற்றத்தில் மட்டும் இளைஞர்களாக இருப்பவர்கள் அல்ல என்பதை உணர முடியும். அவர் கேட்டதும் தேடினதும் அவரைப் போன்ற ஆழ்ந்த அறிவும் மன வலிமையும் உள்ளவர்களைத்தான்.

அது போலவே எந்த கலை வடிவமாக இருந்தாலும் அதை ஒரு நல்ல அநுபவமாக உணரும் போது அந்த கலை உணரும் அநுபவம் ஏன் ஒன்றோடு நின்று போய் விடுகிறது, நூறாக பல்கிப் பெருக மாட்டேன் என்கிறது என்ற நினைப்பில் மேலும் மேலும் சிறப்பான கலை அநுபவங்களை தேடுகிறோம்.

இனி   சர்வதேச அளவில் ஆஸ்கார் விருது பெற்ற இரண்டு சிறார் படங்கள் பற்றி தெரிந்து கொள்வோம் .1) THE WIZARD OF OZ     2) PINOCCHIO

THE WIZARD OF OZ

இந்தத் திரைப்படம் 1939 ல் (சுமார் எண்பது வருடங்களுக்கு முன்) தயாரித்து 1940 ல் ஆஸ்கார் விருது பெற்றது. ஆறு விதமான விருதுகளை தட்டிச் சென்றது.

கூகிளில் கிடைக்கும் இப்படத்தில் சிறந்த கதையம்சமும் ஒளிப்பதிவும் உண்டு. பாடல்களும் உண்டு. படம் முதலில் டெக்னிக் கலராகவும் பின் ஈஸ்ட்மென் கலராகவும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

ஒரு சிறுமி நாய்க் குட்டி மீது கொண்ட அன்பில் கதை துவங்குகிறது. ஊருக்கு வெளியே ஒரு சிறு பண்னை வீடு ,சூறாவளி, மழை, நாயை காப்பாற்றும் பொருட்டு  தாய் தந்தையரை தொலைத்து பின் புதிய பாண்டஸி நிறைந்த( நிறம் மாறும் குதிரை, குழந்தைகள், குழந்தைகள் குழந்தைகள் )உலகத்தில்  நுழைவது என்று பிரமிக்க வைக்கும் படம். நடனக் காட்சிகளின் அபாரமாக குழந்தைகளின் ஒத்திசைவும் , எளிய மற்றும்  பொருள் பொதிந்த ஆங்கில சப் டைட்டில்களும் படத்தின் வேகமான நகர்வுக்கு காரணமான எடிட்டிங்கும் எளிதில் மறக்க முடியாதது

குழந்தைகளுக்கு குழந்தைகளிடம் ஏற்கனவே  குடி கொண்டிருக்கும் நற்பண்புகளை சொல்லும் படம்.

PINOCCHIO

இதுவும் ஆஸ்கார் விருது பெற்ற 1940 ல் தயாரிக்கப் பட்ட படம்

இதுவும் 1940 களில் வெளி வந்த படம்.இது வால்ட் டிஸ்னியின்  மூன்றாவது படைப்பு. American animated film.

இது இத்தாலியின் சிறுவர் நாவலான “THE ADVENTURE OF PINOCCHIO “. இதை எழுதியவர் CARLO COLLODI என்பவர். இந்தக் மூலக் கதையில் JIMMY CRIKET என்ற கதாபாத்திரமே கிடையாது. ஆனால் இந்தப் படத்தில் இந்தக் கதாபாத்திரத்தின் மூலமாகவே கதை சொல்லப் பெறுகிறது.

அந்த நாளில் “WHEN YOU WISH UPON A STAR“என்ற பிரபல பாடல் இதில் இடம் பெற்றதுதான்.மரப் பொம்மைகளை உருவாக்கும் கலைஞனாக வாழ்பவர் GOPPETTO. . அவருக்கு ஒரு பூனையும் மீனும் துணை. ஒரு சிறுவனின் பொம்மையை செய்து அந்த பொம்மைக்கு ஆசையாக “PINOCCHIO“ பெயரிடுகிறார். அன்று இரவில் தூங்கும்முன் அபூர்வமாக வானில் தோன்றிய WISH STAR யிடம் இந்த பொம்மை உயிருள்ளதாக மாற வேண்டுமென வேண்டிக் கொள்கிறார்.

அவரது வேண்டுகோளை ஏற்று நடு இரவில் தோன்றிய நீல தேவதை அந்த பொம்மைக்கு உயிர் தருகிறது.மேலும் சில நிபந்தைனைகளை (தைர்யமானவன், உண்மையானவன் , சுய நலமற்றவன் ) பொம்மைக்கு விதித்து அப்படி மாறினால் இப்போது உயிர் மட்டுமே கிடைத்திருக்கிற நீ உண்மையான  சிறுவனாகவும் மாற்றுவேன் என்கிறது. இவனுக்கு அது வரை மனசாட்சியாக JIMMY CRIKET ஐ இருக்க வேண்டுமென கட்டளை இடுகிறது.

காலையில் எழுந்த பொம்மைக் கலைஞன் GOPPETTO நடந்ததை உணர்ந்து பெரு மகிழ்வு கொண்டு பையனை பொறுப்புள்ள தகப்பனாக பள்ளிக்கு செல்ல வலியுறுத்துகிறார். கூடவே ஜிம்மியை அனுப்புகிறார்.

வழியில் சூதாடும் மற்றும் வணிக மனம் கொண்டவர்களின் TEMPTATIONனினால் சிறைபடுகிறான் JIMMYகாப்பாற்றுகிறார். சரி பள்ளிக்கு செல்லலாமென மறுபடியும் முயலும்போது மறுபடியும் TEMPTATION ல் மாட்டி ஒரு தீவில் அடை படுகிறான்.

தீவிலிருந்து தப்பி தன்னை செய்த பொம்மை கலைஞனையும் கடல் சூறாவளியெல்லாம் தாண்டி சாதனை செய்து நீல தேவதையை மகிழ்வித்து உண்மையான உயிருள்ள சிறுவனாக மாறுகிறான். இப்போது ஜிம்மி கிரிகெட்டெ அவனின் மனசாட்சியாக மாறுகிறது.

தொடரும்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. டோராவின் கனவு தேவதை- பூமா ஈஸ்வர மூர்த்தி
  2. நீலப்புறாவைத் தேடி - பூமா ஈஸ்வரமூர்த்தி
  3. ’ ஸ்டார் வார்ஸ்’படங்களின்  துவக்கம்- பூமா ஈஸ்வரமூர்த்தி
  4. சத்யஜித்ரேயின் குழந்தைகள் உலகம் - பூமா ஈஸ்வரமூர்த்தி
  5. நல்லது என்றால் என்ன? கெட்டது என்றால் என்ன?-பூமா ஈஸ்வரமூர்த்தி
  6. குழந்தைமையைத் தேடி- பூமா ஈஸ்வரமூர்த்தி