சம்ஸ்கார என்பது ஏறத்தாழ நம் சமகால எழுத்தாளராக (1932-2014) வாழ்ந்த பேராசிரியர் யு. ஆர். அனந்தமூர்த்தி எழுதிய கன்னட நாவல். அவரின் தாய்தந்தை மாத்வ பிராமண குலத்தைச் சேர்ந்தவர்கள். சம்ஸ்கார போன்ற புகழ்பெற்ற படைப்புகளுக்காக அவர் ஞானபீடப் பரிசு (1994) பெற்றார். பத்மஸ்ரீ விருதும் அவருக்கு 1998இல் வழங்கப் பட்டது.

மோதி பிரதமர் ஆவதற்குமுன் “மோதி ஆளும் நாட்டில் நான் வாழ விரும்பவில்லை…மோதி பிரதமர் ஆனால் நான் உயிர்வாழ மாட்டேன்” என்று துணிச்சலாக பகிரங்கமாக அறிவித்தவர் இவர்.

சம்ஸ்கார(ம்) என்ற சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உண்டு என்றாலும் முக்கியமாக இந்த நாவலில் இது இறந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய ஈமக்கடன் முதலிய சடங்குகளைக் குறிக்கிறது.

தூர்வாசபுரம் என்பது ஓர் அக்ரகாரம். மாத்வ ஐயங்கார் இனத்தவர் மட்டுமே வாழும் இடம். பிராணேசாசார்யர் (பிராணேச ஆசாரியர்) என்ற உயர்ந்த படிப்பும் ஒழுக்கமும் கொண்ட மனிதர் அங்கே ஆன்மிகத் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். காசியில் சமஸ்கிருதப் படிப்பை முடித்து வேதாந்த சிரோமணி பட்டம் பெற்றவர். பாகீரதி என்ற நடக்க இயலாத நோயாளிப் பெண்ணை மணந்து அவளுக்கு நிஷ்காமியத் தொண்டு செய்வதில் இன்பம் காண்கிறார்.

அதே அக்கிரகாரத்தில் நாரணப்பா என்ற ஒழுக்கம்கெட்ட, திட்டமிட்டு பிராமண ஒழுக்கத்தைச் சீரழித்துவரும் பிராமணன் ஒருவனும் இருக்கிறான். ஒருநாள் பிற்பகல் பிராணேசரிடம் நாரணப்பா இறந்துவிட்ட செய்தியை அவனது வைப்பாட்டியான சந்திரி வந்து தெரிவிக்கிறாள். அவனுக்கு பிராமண முறைப்படியான சம்ஸ்காரங்கள் செய்வதா என்ற கேள்வி அக்ரகார பிராமணர்கள் அனைவர் முன்னாலும் எழுகிறது. அவ்விதம் செய்யலாகாது என்பது பலரின் கருத்தாக உள்ளது. எனினும் சாத்திரங்களில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்று ஆராய்ந்து பிராணேசர் தம் கருத்தைச் சொல்லவேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். நாரணப்பாவின் பிணத்தை எரிக்கும்வரை அவர்களால் உணவு கொள்ளவும் முடியாது.

சந்திரி நாரணப்பாவின் இறுதிச்சடங்குச் செலவுக்குத் தன் பொன் நகைகளை அளிக்கிறாள். அதைப் பார்த்தவுடன் நாரணப்பாவின் உறவினர்களான கருடப்பா, லக்ஷ்மணப்பா இருவரும் தங்களில் ஒருவர் இறுதிச் சடங்கைச் செய்வதாகவும் தங்களுக்கே அந்த நகைகள் வேண்டும் என்றும் சண்டையிடுகின்றனர்.

“பல பிறவிகளில் செய்த நன்மைகளால்தான் ஒருவன் பிராமணனாகப் பிறக்கமுடியும். நாரணப்பாவும் அப்படித்தான் நற்கருமங்கள் செய்திருப்பான். ஒருவேளை அவன் இறக்கும்போது கடவுளைச் சரணடைந்திருந்தால் அவன் இந்நேரம் கடவுளை அடைந்திருப்பான். அவ்வாறிருக்க அவனை எவ்விதம் ஜாதிப்பிரஷ்டம் செய்வது” என்ற கேள்வி பிராணேசருக்கு எழுகிறது. ஆனால் அவன் வாழ்ந்த வாழ்க்கைப்படி அவன் பிராமணச் சடங்குகளுக்கு உரியவனாகவும் இல்லை. சாத்திரங்கள் இது பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்பது பிராணேசருக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது.

இடையில் அக்ரகார பிராமணர்கள், தாசாசாரியன் என்பவனின் அறிவுரைப்படி பாரிஜாதபுரத்திற்குச் செல்கின்றனர். அங்கே நாரணப்பாவின் நெருங்கிய நண்பனான மஞ்சய்யா இருக்கிறான். அவனை நாரணப்பாவின் உடலை எரிக்குமாறு வேண்டுகின்றனர். ஆனால் அவனும் மறுக்கிறான். அதனால் ஒன்றும் புரியாமல் அவர்கள் மீண்டும் பிராணேசரின் உத்தரவைப் பெற ஊருக்கு வந்து சேர்கின்றனர். ஒரு நாள் முழுவதும் சென்றுவிடுகிறது.

மறுநாள் மாலை பிராணேசர் ஆற்றில் நீராடி, ஈர உடையோடு காட்டிலுள்ள அனுமன் கோவிலுக்குச் சென்று உத்தரவு வேண்டுகிறார். இரவு முற்றுகிறது. ஆனால் அனுமன் எந்த உத்தரவும் அளிக்கவில்லை. அவர் கோவிலை விட்டு வெளியேவரும்போது அங்கே காத்திருந்த சந்திரி, அவர் காலில் விழுகிறாள். அவள் மார்பு அவர் முழங்கால்களைத் தழுவ, அவர் உணர்ச்சி மிகுதியால் அவளுடன் சேர்கிறார்.

பிராணேசர் சந்திரியிடம் தனக்கு இனி வேறு எவர் சம்ஸ்காரம் பற்றியும் அறிவுரைக்கத் தகுதி இல்லை என்று கூறி வீட்டுக்குச் செல்கிறார். நாரணப்பாவின் வீட்டுக்குவரும் சந்திரி, சடலம் அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டு, அவனது நண்பனான மீன்வியாபாரி அகமது பாரி என்பவன் உதவியோடு இரவோடிரவாகப் பிணத்தை எரித்துவிடுகிறாள். ஆனால் இது அக்ரகாரத்தில் எவருக்கும் தெரியாது.

நாரணப்பாவின் நண்பர்கள், ஒரு நாடகக் குழுவினர், இரவில் மாட்டுவண்டியில் வந்து நாரணப்பாவின் பிணத்தை எரிக்க நினைக்கின்றனர். ஆனால் பிணத்தைக் காணாமல் அவன் பேயாகிவிட்டான் என்று கூக்குரலிடுகிறார்கள். அக்ரகாரத்தில் வசிக்கும் விதவையான லக்ஷ்மிதேவம்மா என்பவளும் சேர்ந்து கூச்சலிட, எல்லாரும் பயந்து அவரவர் வீட்டில் ஒடுங்குகின்றனர்.

மூன்றாம் நாள் காலை, வழக்கப்படி தன் மனைவியை நீராட்டி உணவு தரும் ஆசாரியருக்குத் தன் கருமங்களில் அருவருப்பு எழுகிறது. அவளுக்கும் பிளேக் அறிகுறிகள். தவிக்கிறார். ஆனால் அக்ரகாரத்தினரிடம் சந்திரியிடம் தான் உறவு கொண்டதைக் கூற அவருக்கு தைரியமில்லை. அன்று தன்னை அறிவுரை கேட்கவந்த பிராமணர்களிடம் “நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்” என்று கூறிவிடுகிறார்.

அதன்பின் பிராமணர்கள் கைமரம் என்னும் ஊரில் சுப்பணாசார் யனைச் சந்திக்கச் செல்கின்றனர். அவனும் அவர்களுக்கு உணவிட்டுவிட்டு, மடத்தில் ஆசாரியரிடம் அறிவுரை கேட்கச் சொல்கிறான். தாசாசார்யனுக்கு ஜுரமும் மயக்கமும் ஏற்படுகின்றன.

மட ஆசாரியர், நாரணப்பாவை முறைப்படி எரித்துவிடுமாறும் நகைகளை மடத்துக்கு அளித்துவிடுமாறும் உத்தரவிடுகிறார். கருடாசார்யனுக்கும் தாசாசார்யன் போன்றே ஜுரம் ஏற்படுவதால் இருவரையும் விட்டுவிட்டுப் புறப்படுகிறார்கள்.

அடுத்த நாள் பிராணேசர் ஆற்றுக்கு நீராடச் சென்று திரும்பிவந்த போது பிளேக்கினால் தாக்கப்பட்ட அவர் மனைவியும் இறந்து விடுகிறாள். அவளைக் கொண்டுசென்று எரித்த பிராணேசர், தன் வீடு, உடமைகளை விட்டு அப்படியே கிழக்குநோக்கி நடக்கத் தொடங்கிவிடுகிறார்.

பிராணேசர் குந்தபுரா என்னும் ஊருக்குச் செல்ல நடக்கிறார். வழியில் புட்டன் என்ற கீழ்ச்சாதி ஆள் முற்பிறப்பு வினைபோல அவருடன் ஒட்டிக் கொள்கிறான். அவன் மேளிகையில் நடக்கும் திருவிழாவுக்குக் அவரைக் கூட்டிச் செல்கிறான். பல சம்பவங்கள் நிகழ்கின்றன. சேவற் சண்டை, கயிற்றின்மீது நடக்கும் பெண் ஆகியவற்றைப் பார்க்கிறார். புட்டனோடு காப்பிக் கிளப்புக்குச் சென்று காப்பி குடிக்கிறார். பத்மாவதி என்ற வேசி வீட்டுக்கு அழைத்துச் செல்லும் புட்டா, இரவு வருவதாகச் சொல்லிவிட்டு, கோயில் பார்ப்பனர்களுக்கு இடும் விருந்துக்கு அவரை அழைத்துச் செல்கிறான். உணவு கொள்ளப் போகும்போது, கோயில் மடப்பள்ளி ஆள் அவரைத் தெரிந்து கொண்டதால், வெளியே எழுந்து ஓடிவந்து விடுகிறார். புட்டனிடம் தான் தூர்வாசபுரம் போகப் போவதாகச் சொல்கிறார். அங்கு தன் உண்மையைச் சொல்லிவிடலாம் என நினைக்கிறார். தன் நண்பன் நாரணப்பாவைச் சந்திக்க புட்டனும் வருவதாகச் சொல்கிறான்.

சாலையில் தூர்வாசபுரம் செல்லும் வண்டி ஒன்று வருகிறது. வண்டிக்காரன் ஒருவரை மட்டும் ஏற்றிக் கொள்வதாகக் கூறியதால் புட்டன் பிராணேசரை அதில் ஏற்றிவிடுகிறான். தீர்த்தஹள்ளியில் இருக்கும் தன் மனைவியைப் பார்க்கப் போவதாகப் புறப்பட்டு விடுகிறான். ஒரு மன அவசத்துடன் கூடிய எதிர்பார்ப்புடன் பிராணேசர் தூர்வாசபுரம் திரும்புவதாக நாவல் முடிகிறது.

பிராமணச் சமூகத்தின் அடிப்படைகளையே ஆட்டம் காண வைக்கும் கேள்விகளை எழுப்பியதால் கன்னடச் சமூகத்தில் ஒரு கடும்புயலைக் கிளப்பிய நாவல் இது.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. விசாரணை – க. பூரணச்சந்திரன்
  2. பொம்மை வீடு – க. பூரணச்சந்திரன்
  3. ஹாபிட் – க. பூரணச்சந்திரன்
  4. இரகசியத் தோட்டம் - க. பூரணச்சந்திரன்
  5. பரஜன் - க. பூரணச்சந்திரன்
  6. வீழ்ச்சி - க. பூரணச்சந்திரன்
  7. மாபெரும் கேட்ஸ்பி - க. பூரணச்சந்திரன்
  8. கறைபடிந்த (எல்லை) நிலம் - க. பூரணச்சந்திரன்
  9. சூளாமணி – க. பூரணச்சந்திரன்
  10. மரணப்படுக்கையில் கிடந்தபோது - க. பூரணச்சந்திரன்
  11. விடுதலையா?- க. பூரணச்சந்திரன்
  12. வெள்ளாட்டின் பலி - க. பூரணச்சந்திரன்
  13. மோரூவின் தீவு - க. பூரணச்சந்திரன்
  14. உடோபியா - க. பூரணச்சந்திரன்
  15. பாரன்ஹீட் 451 - க. பூரணச்சந்திரன்
  16. ஆங்கிலேய நோயாளி - க.பூரணச்சந்திரன்
  17. நீலகேசி - க.பூரணச்சந்திரன்
  18. சிங்கமும் சூனியக்காரியும் ஆடையலமாரியும் - க.பூரணச்சந்திரன்
  19. பாடும் பறவையைக் கொல்லுதல் (To Kill a Mockingbird) - க.பூரணச்சந்திரன்
  20. ஆர்ட்டெமியோ குரூஸின் மரணம் - க.பூரணச்சந்திரன்
  21. மால்கம் எக்ஸின் சுயசரிதை - க.பூரணச்சந்திரன்
  22. பீமாயணம் - க.பூரணச்சந்திரன்
  23. நிலவுக்கல் (சந்திரகாந்தம்) - க.பூரணச்சந்திரன்
  24. விலங்குப் பண்ணை - க.பூரணச்சந்திரன்
  25. குண்டலகேசி ஆகிய மந்திரிகுமாரி - க.பூரணச்சந்திரன்
  26. ஒரு முதுவேனில் இரவின் கனவு - க.பூரணச்சந்திரன்
  27. தமிழுக்கு அப்பால்-23: டாக்டர் ஃபாஸ்டஸ் - க. பூரணச்சந்திரன்
  28. ஈக்களின் தலைவன் : வில்லியம் கோல்டிங் – க.பூரணச்சந்திரன்
  29. சீவகன் கதை : க.பூரணச்சந்திரன்
  30. அன்னா கரீனினா-க.பூரணச்சந்திரன்
  31. பொன்னிறக் கையேடு : க.பூரணச்சந்திரன்
  32. செம்மீன் : க.பூரணச்சந்திரன்
  33. ஜேன் அயர் : க.பூரணச்சந்திரன்
  34. ஏழை படும் பாடு : க.பூரணச்சந்திரன்
  35. கேட்ச்-22 (இறுக்குப்பிடி-22)  : க.பூரணச்சந்திரன்
  36. புதையல் தீவு : க.பூரணச்சந்திரன்
  37.  மணிமேகலை : தமிழுக்கு அப்பால் -13 : க.பூரணச்சந்திரன்
  38. வழிகாட்டி :க.பூரணச்சந்திரன்
  39. ராபின் ஹூட் : க.பூரணச்சந்திரன்
  40. விசித்திர உலகில் ஆலிஸ்  : க.பூரணச்சந்திரன்
  41. காற்றோடு சண்டையிடும் டான் குவிக்சோட் : க.பூரணச்சந்திரன்
  42. சுதந்திரப் போராட்ட நாவல்களின் முன்னோடி 'ஆனந்த மடம்' : க.பூரணச்சந்திரன்
  43. கலிவரின் பயணங்கள் : க.பூரணச்சந்திரன்
  44. ஜூல்ஸ் வெர்னின் உலகைச் சுற்றி எண்பது நாட்கள் :க.பூரணச்சந்திரன்
  45. பிராம் ஸ்டோக்கரின் டிராகுலா : க.பூரணச்சந்திரன்
  46. அறங்கூறும் நாவல்: பிரதாப முதலியார் சரித்திரம்-க.பூரணச்சந்திரன்
  47. ஷேக்ஸ்பியரின் பன்னிரண்டாம் இரவு- க.பூரணச்சந்திரன்
  48. ராபின்சன் குரூஸோவின் பயணம் -க.பூரணச்சந்திரன் 
  49. தமிழுக்கு அப்பால்(1)-க.பூரணச்சந்திரன்