ஒரு பொருள் கவிதைகள்–2: 

எங்குதான் கவிதையில்லை. 

என் கவிதையை நான்தான் எழுதவேண்டுமென்ற நிர்பந்தம் இல்லை. 

படித்த புத்தகங்கள், என் போன்ற பிறர், கிடைத்த அனுபவங்கள், கண்ட கனவுகள், நினைவுகளின் பேயாட்டம் எல்லாவற்றிலும் 

என் கவிதைகளை அல்லது நான் எழுதத் தவறிய கவிதைகளைக் காண்கிறேன். 

# நகுலன்.

o

 

 தீராத விளையாட்டு

# எஸ். வைதீஸ்வரன்

 

அடிக்கடி 

வெயிலுக்குள் நகர்ந்துவிடும்

எங்கள் வீட்டை 

என்ன செய்வதென்று 

தெரியவில்லை.

 

O

 

வீடு

# ராஜ சுந்தரராஜன்

 

வீடொன்று வேண்டும்

 

வெயிலையோ மழையையோ

பகைப்பதற்கு அல்ல.

 

காக்கையும் கூடு கட்டும்

அடைகாக்க.

 

O

 

சந்தை

# நகுலன்

 

செத்த வீட்டில்

துக்கம் விசாரிக்கச்

சென்று திரும்பியவர்

சொன்னார்

“செத்த வீடாகத்

தெரியவில்லை

ஒரே சந்தை இரைச்சல்.”

 

o

வலியின் ஒலி 

# மகுடேஸ்வரன் 

 

வாழ்ந்து கெட்டவனின் 

பரம்பரை வீட்டை 

விலை முடிக்கும்போது 

உற்றுக்கேள் 

 

கொல்லையில் 

சன்னமாக அழும் 

பெண்களின் விசும்பலை.

 

O

# தேவதச்சன்

 

என் வீடு மிகச் சிறிய வீடு 

 ஆனாலும்,

வீடு திரும்ப விரும்புகிறேன்.

 

***

 

ஒவ்வொரு வீடும் நிரந்தரச் சூரியனை 

ஜன்னல் வழியே அழைக்கிறது 

அதை கைக்குழந்தையைப் போல் 

படுக்கவைத்துக் கொள்கிறது 

தினமும் படியில் ஏறியதும் 

பயங்கள் மறையும் 

என் சிறிய வீட்டின் பின்கதவைத் திறந்து 

பார்க்கிறேன் 

வீட்டிற்கு அப்பால் 

வேறு எதுவும் இல்லை.

 

O

முந்தைய தொடர்கள்:

1.“பறவை” – கவிதைகள் – https://bit.ly/33tptIo

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. வாசிப்பின் மீதான கவிதைகள்
  2. பூனை கவிதைகள்
  3. 'குருவி' - கவிதைகள் - செல்வராஜ் ஜெகதீசன்
  4. 'குழந்தை' கவிதைகள் - செல்வராஜ் ஜெகதீசன்
  5. ‘பறவை’ கவிதைகள்- செல்வராஜ் ஜெகதீசன்