பிணர்ச் சுவல் பன்றி தோல் முலைப் பிணவொடு
கணைக் கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின்,
கல் அதர் அரும் புழை அல்கி கானவன்
வில்லின் தந்த வெண்கோட்டு ஏற்றைப்,
புனை இருங்கதுப்பின் மனையோள் கெண்டிக்  5
குடி முறை பகுக்கும் நெடு மலை நாட!
உரவுச் சின வேழம் உறு புலி பார்க்கும்
இரவின் அஞ்சாய், அஞ்சுவல், அரவின்
ஈர் அளைப் புற்றம் கார் என முற்றி,
இரை தேர் எண்கு இனம் அகழும்  10
வரை சேர் சிறு நெறி வாராதீமே.

ஒரு காடு.

அந்தப் பெரிய காட்டில் திணை விதைச்சிருக்கு.

அந்தப் பெரிய தினைக்காட்டில் ஒரு ஆண் பன்றியும் ஒரு பெண் பன்றியும் மேய்ந்து கொண்டிருக்கின்றன.

ஆண் பன்றிக்கு இரண்டு கொம்புகள் இருக்கு. அந்தக் கொம்புகள் வெள்ளவெளேர்ன்னு அழகாருக்கு. அந்த ஆண் பன்றியின் பெதடி மயிர்கள் சிலிர்த்துக் கொண்டிருக்கின்றன.

பெண் பன்றி மெலிஞ்சிருக்கு. அதன் பால் சுரக்கும் காம்புகள் மெலிந்து தோல்தான் இருக்கு.

ஆண் பன்றியும் பெண் பன்றியும் தினைக்காட்டில் வயித்துக்கு மேஞ்சதுக்குப் பிறகும் அந்தப் பன்றிகள் தினைக்காட்டைத் தாறுமாறாத் தோண்டி தினைக்காட்டை அவைகள் அழித்துக் கொண்டிருக்கின்றன.

தினைக்காட்டுக்குச் சொந்தக்காரன் ஒரு வேடன், அந்த வேடன் ஒரு புதருக்குப் பின்னால் ஒளிஞ்சி நின்னுக்கிட்டுருக்கான். அவனிடம் ஒரு வில் இருக்கு. அவன் அந்த ஆண் பன்றியைக் குறி வைக்கிறான். அவன் வில்லில் இருந்து புறப்பட்டு சீறிக்கொண்டு பாய்ந்து போகிறது ஒரு அம்பு. அந்த அம்பு அந்த ஆண் பன்றியைக் குத்திக் கொல்கிறது.

ஆண் பன்றி வேடன் தலைமேல் இருக்கு.

வேடனை எதிர்பார்த்துக்கொண்டு அவன் மனைவி அவள் வீட்டின் முற்றத்தில் நின்று கொண்டிருக்கிறாள்.

வேடன் மனைவி அழகான பெண். அவள் முடி கரு கருன்னு கறுப்பாருக்கு. அழகான அந்தப் பெண் அவளுடைய அழகான தலைமுடியை வாரி அழகாகக் கொண்டை முடிந்திருக்கிறாள்.

ஒரு பெரிய பன்றியைச் சொமந்துக்கிட்டு வாரான் அவள் கணவன்.

கணவனிடமிருந்து அழகான அந்தப் பெண் பன்றியை வாங்கிக் கொள்கிறாள்.

அவள் பன்றியை அறுக்கிறாள். கறியைக் கூறு வைக்கிறாள். பச்ச ஓலையில் பட்டைபிடித்து பன்றிக் கறியைப் பொதிகிறாள்.

வேடன் மனைவி பன்றிக்கறியை எல்லார் வீட்டுக்கும் கொடுக்கிறாள்.

அந்தச் சிறிய கிராமத்தில் எல்லா வீடுகளிலும் பன்றிக் கறி வெந்து கொண்டிருக்கிறது.

மணமா மணக்கு கறிமணம்.

கபிலர்
நற்றிணை 336