செல்போன் அலாரம் அடித்தது. எப்பொழுதும் ஒன்று இரண்டுதடவை ச்நூஸ் அழுத்திய பின்னே எழுந்திருக்கும் மீனுகுட்டி அன்றைக்கு உடனே எழுந்துவிட்டாள். எழுந்தவுடன் படபடப்பு கூடிகொண்டது. இதை இன்று செய்தே ஆக வேண்டுமா என்று யோசித்தாள். மேலும் யோசித்தால் செய்யாமல் போய்விடுவோமோ என்ற அச்சத்தில் படுக்கையில் இருந்து எழுந்து கிளம்ப தொடங்கினாள். இன்ஜினியரிங் முடித்துவிட்டு சென்னையில் தனியாக வீடு எடுத்து வேலைக்குச் சென்று கொண்டிருந்தாள். காலையில் எழ எப்பொழுதும் தாமதமாகி அவசர அவசரமாக கிளம்பி ஸ்கூட்டி எடுத்துக்கொண்டு அலுவலகம் செல்வது வழக்கம். காலையில் எதைப்பற்றியுமே யோசிக்க நேரமிருக்காது மீனுகுட்டிக்கு. மாறாக இன்று யோசிப்பதைத்தவிர எதுவுமே அவள் செய்யவில்லை. மெதுவாக சென்று சுவரில் மாட்டிவைத்திருந்த ஆளுயர் கண்ணாடியின் முன் நின்று தன்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்

*

“ஹே, சந்திரிக்கா பி.டி. மிஸ் உன்ன கூப்ட்டாங்க”

“எதுக்கு?”

“தெரில”

“பி.டி. பீரியடில் தன் தோழிகளுடன் விளையாடி கொண்டிருந்தவள் பாதியிலேயே பி.டி. மிஸ் இருக்கும் இடம் நோக்கி நடக்க தொடங்கினாள்”

“கூப்டிங்களா மிஸ்?”

“ஆமா, கொஞ்சம் இந்த பக்கம் வா. ஷிம்மிஸ் போட்ருக்கியா சந்திரிக்கா?”

“போட்ருக்கேன் மிஸ்”

“ப்ரா போட்ருகியா?”

“அப்படினா என்ன மிஸ்?”

“உன் அம்மாகிட்ட சொல்லி வாங்கிதரச் சொல்லு”

பக்கத்தில் இருந்த இன்னொரு பி.டி. மிஸ்,

“என்ன கிளாஸ் நீ?”

“பிப்த் ஸ்டாண்டர்ட் C செச்ஷன் மிஸ்”

இருவரும் சிறிது நேரம் மெளனமாக அவளையே பாத்துவிட்டு,

“சரி போய் விளையாடு” என்று அவளை அனுப்பிவிட்டனர். அந்த உரையாடலின் அர்த்தம் சந்திரிக்காவிற்குப் புரியவில்லை. சில நிமிடங்களில் அதை மறந்து தன் விளையாட்டில் ஐக்கியமானாள்.

*

கண்ணாடியில் வெறிக்க வெறிக்க தன்னைப் பார்த்துக்கொண்டே நின்றாள் மீனுகுட்டி. தனக்கு என்ன நடக்கிறது என்பதை அறிவதற்கு முன்பே தான், சந்திக்க நேர்ந்ததும் தான் கடந்துவந்த அனைத்து நிகழ்வுகளும் அவள்முன் வந்துபோயின. அவளை அறியாமலேயே கண்களில் இருந்து நீர் வழிய தொடங்கியது. வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டு தன் கன்னங்களைக் கிள்ளி தானே முத்தமிட்டாள். இதை இன்று செய்தே ஆக வேண்டும் என முடிவெடுத்தாள்

*

“அம்மா, வர்ஷினியோட பர்த்டே பார்ட்டிக்கு நாங்க எல்லாரும் மெரூன் கலர் டங்க் டாப்தான் போட்டுட்டு வரணும்னு டிரெஸ்கோட். நான் மட்டும் சுடிதார்ல போக முடியாது மா”

“அதெல்லாம் வேண்டாம் இந்த சுடிதாரும் மெரூன் கலர்லதான் இருக்கு அது போதும்”

“இது ‘தொள தொள’னு லூசா வேற இருக்கு. நல்லாவே இல்ல”

“இதுதான் சரியா இருக்கும் இந்த சுடிதார் போட்டுட்டு துப்பட்டா போட்டு ரெண்டு பக்கமும் ஊக்கு குத்திட்டுதான் போகணும்”

“ஏன் என்ன இப்படி டார்ச்சர் பண்ற? என் பிரண்ட்ஸ்லாம் நான் எப்பயும் இப்படி போறதுக்கு ஆண்டினு கிண்டல் பண்றாங்க மா”

“சும்மா தேவை இல்லாம பேசாத”

“அப்பா, பாருப்பா”

எப்பொழுதும் சந்திரிக்காவிற்கு துணை நிற்கும் அப்பா அன்று அம்மா பேச்சை கேள் என்று நழுவிகொண்டார். சந்திரிக்காவிற்கு அழுகை அழுகையாக வந்தது. சில மாதங்களாவே அவளுக்கு நடக்கும் எதுவும் அவளுக்குப் புரியவில்லை.

பி.டி. மிஸ் அவளைத் தனியே அழைத்துப் பேசி ஒரு ஆறு மாசம் ஆகிருக்கும். சந்திரிக்கா தன் உடலில் நிகழும் மாற்றங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக கவனிக்கத் தொடங்கினாள். தனக்கு நெஞ்சு பகுதியில் ஏதோ வளருவதை உணர்ந்தாள். தொடர்ந்து வளர்ந்த அவளுடைய மார்பகங்கள் சில மாதங்களிலே சராசரி இளம் பெண்களின் மார்பக அளவைத் தாண்டி வளர்ந்தது. அதன் கனத்தை சந்திரிக்காவின் உடல் தாங்காமல் மார்பகங்கள் சற்று தொங்க ஆரம்பித்தது. பி.டி. மிஸ் மட்டும் இல்லாமல் வகுப்பிற்கு வரும் அனைத்து ஆசிரியர்களும் அவளைத் தனியே அழைத்து பேசத் தொடங்கினர். பொதுவாக,

“வயசுக்கு வந்துட்டியா?”

“ஒழுங்கா இன்னர்ஸ் போடு”

இந்த வாக்கியங்களே அவர்கள் கூறினர். பின்பு ஒரு சில நொடிகள் அவளை மெளனமாகப் பார்த்தனர். அந்தப் பார்வை அவளை என்னமோ செய்தது. அவர்களின் பரிதாபம் பொங்கும் பார்வையும் ஊச் கொட்டும் உதடுகளும் அவளை மிரளவைத்தன.

“அம்மா, எனக்கு மட்டும் ஏம்மா முன்னாடி இப்டி இருக்கு. என் பிரண்ட்ஸ் யாருக்குமே இல்ல. எல்லாரும் என்ன இது என்ன இதுன்னு கேக்குறாங்க”

“எல்லார்க்கும் இது வளரும். உனக்கு சிக்கிரமா வளந்துருச்சு அவ்ளோதான்”

“எல்லார்க்கும் இருக்கறதுனா அப்புறம் ஏன் அத மறைச்சு மறைச்சு எங்கேயும் போக சொல்ற”

“தேவையில்லாம கேள்வி கேக்காத. இனிதான் நான் சொன்ன பேச்சை எல்லாத்தையும் கேக்கணும்”
இந்தமாதிரி சம்பவங்கள் பல நடந்து தற்பொழுது வர்ஷினி பர்த்டே பார்ட்டிக்கு மெரூன் கலர் டங்க் டாப் போட விடாதது அவள் எதிர்பார்த்ததுதான்

*

குளியலறையில் இருந்து ஈரத் தலையில் துண்டு கட்டிக்கொண்டு வெளியில் வந்தாள் மீனுகுட்டி. கண்ணாடி முன்நின்று ஹேர் ட்ரையர் வைத்து தலைமுடியைக் காயவைத்து கொண்டிருந்தாள். பின் அலமாரியைத் திறந்து ஹேங்கரில் மாட்டிவைத்திருந்த துணி ஒவ்வொன்றையும் தள்ளிக்கொண்டே வந்தாள். இறுதியாகப் பின்னால் வைத்திருந்த பிரிக்காத பையை எடுத்தாள். அந்தப் பையில் பிரபல துணிக்கடை பிராண்ட் பெயரும் அதன் பக்கத்தில் ஜீரோ சைஸ் மாடலின் புகைப்படமும் பொறிக்கப்பட்டு இருந்தது. அதனை திறந்து முகத்தை உள்ளேவிட்டு முகர்ந்து பார்த்தாள் அந்தத் துணியின் வாசம் அவளைப் பரவசப்படுத்தியது . பின் பையினுள் இருந்து மெரூன் கலர் டங்க் டாப்பை எடுத்தாள்.

*

அன்று பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும்போதே அழுதுகொண்டு வந்தாள் சந்திரிக்கா. வீட்டிற்க்கு வந்த உடனே தன் அம்மா மடியில் படுத்துத் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள். அவள் அம்மா என்னவென்று தெரியாமல் குழம்பினாள்.

“என் செல்லமே! மீனுகுட்டிக்கு என்னாச்சு”

“இன்னிக்கு ப்ரீத்தி நான் உள்ள போட்டிருக்கத பாத்து கிளாஸ்ல எல்லார்கிட்டேயும் சொல்லிட்டா. எல்லாரும் என ஒருமாதிரி பாக்குறாங்க” என விம்மிகொண்டே கூறினாள்.

அவள் அம்மாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை “சொல்றவுங்க சொல்லிட்டுதான் இருப்பாங்க, அதுக்கு என்ன பண்ண முடியும்”

“அப்படி எதுக்கு இந்த ப்..ப் ..ப்ராவ போடணும்.”

“அது போட்டுதான் ஆகணும் இல்லனா தொங்கி போய்டும்”

“தொங்குனா என்ன இப்ப?” என்று தன் பிஞ்சு குரலில் அலறினாள் சந்திரிக்கா.

“தொங்குனா….தொங்குனா…” என இழுத்து சிறிது நொடி யோசித்துப் பின் அமைதியாக

“பார்க்க நல்லா இருக்காது” என்று மெல்லிய குரலில் கூறினாள்.

“என்ன பாத்தா நல்லா இருக்க ஒண்ணும் வேணாம். எனக்கு இது வேணாம்” என்று மீண்டும் அழத் தொடங்கினாள்.

“என்ன பண்றது… ப்ச்… உனக்கு இந்தமாதிரி பெருசா வளந்துடுச்சு. சாமிக்கிட்ட வேண்டிக்கோ குணமாகனும்னு நானும் வேண்டிக்கிறேன். உனக்கு இவ்ளோ பெரிய குறைய அவன் ஏன் தரணும்” என்று தன் கண்ணீரையும் துடைத்துக்கொண்டு எழுந்து சென்றாள்

*

மெரூன் கலர் டங்க் டாப் மற்றும் கருப்பு கலர் பென்சில் ஜீன்ஸ் போட்டுகொண்டு கண்ணாடி முன்நின்று பார்த்துக்கொண்டிருந்தாள் மீனுகுட்டி. முழுவதுமாக மூடி இருந்தாலும் அந்த உடை அவளது பெரிய மார்பகங்களை நன்றாக வெளியில் காட்டியது. பொதுவாக இவ்வாறு எவரேனும் உடைஉடுத்தி இருந்தால் உடலுக்கேற்ற ஆடை தேர்வுசெய்ய தெரியாதவர் ஆடை உணர்வு இல்லாதவர் என்று பிறர் விமர்சிப்பதைக் கேட்டிருக்கிறாள். இன்று தானும் ஒரு ஆடை உணர்வு இல்லாத பெண்ணாகத்தான் செல்ல போகிறோமா என நினைத்துக்கொண்டாள். இத்தகு விமர்சனங்களைத் தம்மால் எதிர்கொள்ள முடியுமா இது தேவைதானா இது சரிதானா. தேவையில்லாத வேலையை செய்து கொண்டிருக்கிறோமா. பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள். யாரவது வெளிப்படையாக எதாவது சொல்லிவிட்டால் எப்படி சமாளிக்கப் போகிறோம் என கேள்விகள் ஒவ்வொன்றாக அவளுக்கு வந்து திரும்பி அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்திவிட்டன

*

“சந்திரிக்கா எங்க? என்று கேட்டார் ஷோபா.

“சந்திரிக்காவா?….வீட்ல எல்லாரும் அவள மீனுகுட்டின்னுதான் கூப்டுவோம். மீனுக்குட்டி! யாரு வந்துருக்காங்க பாரு, ஒன்பதாவது வந்ததும்தான் வந்தா, எப்ப பாத்தாலும் அவ ரூம்லேயே உட்காந்திருக்கா” என்று அழைத்தாள் அம்மா.
அம்மா குரல் கேட்டு அறையில் இருந்து வெளியில் வந்தாள் சந்திரிக்கா. வீட்டிற்கு ஷோபா பெரியம்மா, பெரியப்பா, அண்ணா, அண்ணி மற்றும் அவளுடைய பாட்டி வந்திருந்தார்கள். அனைவரையும் வரவேற்று அமர்ந்து பேசிகொண்டிருந்தாள். சில நிமிடங்களில் பேச்சு தன் பக்கம் திரும்பியது. இது பொதுவாகவே எப்பொழுதும் நடப்பதுதான்.

“அப்புறம் மீனுகுட்டிய டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனிங்களா” என்று ஆரம்பித்து வைத்தார் ஷோபா.

“ஏன் என்னாச்சு?” என்று கேட்டார் அண்ணி. அவர் இப்பொழுதுதான் திருமணம் ஆகி குடும்பம் ஆகி இருந்தார்.

“அவளுக்கு அஞ்சாவது படிக்கும் போதே முன்னாடி பெருசா வளந்துடுச்சு பாவம்” என்று அனுதாபத்தோடு விளக்கினார் பெரியம்மா. சிறிது நேரம் அதே பரிதாப பார்வையில் இவளையே பார்த்தார் அண்ணி.

“டாக்டர் எல்லா டெஸ்டும் எடுத்துட்டு என்ன பிரச்சனை தெரிலன்னு சொல்லிடாரு” என்றாள் அம்மா.

“குல தெய்வத்துக்கு போய் விளக்குபோட சொல்லு. பாவம் இந்த உடம்போட புள்ள எப்டி நிம்மதியா இருக்கும். நீங்க எப்டி இருப்பிங்க. எதாச்சும் ஒரு விடிவு காலம் வரும்” என்று தன் பங்கிற்கு பேசினாள் பாட்டி. பின் அவளின் மார்பகங்கள் பற்றியே உரையாடல்கள் தொடர்ந்தன.
இதற்குமேல் அங்கு இருக்க வேண்டாமென தன் அறைக்குத் திரும்பினாள் சந்திரிக்கா. அறைக்கு வந்து அவளால் நிதானமாக இருக்க முடியவில்லை இந்த நான்கு வருடங்களில் தொடர்ந்து இம்மாதிரி நிகழ்வுகள் பல சந்தித்திருந்தாள். எனினும் ஒவ்வொருதடவையும் அவளைக் காட்சிப்பொருளாக மாற்றும் பொழுது தன்மீதான வெறுப்பும் தன் உடல் மேலான அருவெறுப்பும் தாங்காத வலியாக அவளைத் தாக்கியது. அவள் வயதிக்கேற்ற சிறுமியாக அவளை ஒருவராவது பார்க்க வேண்டும் என்ற ஏக்கமும் ஆசையும் அவளை வாட்டியெடுத்தன.

‘என் மார்பகங்களினால் எந்தப் பிரச்சனையும் இல்லை நீங்கள் என்மீது திணிக்க முற்படும் உங்கள் அழகின் தரநிலையும் வழக்கமும்தான் பிரச்சனை’ என்று எல்லார் முன்பும் கத்த வேண்டும்போல் இருந்தது. இது தன்னைச் சுற்றியுள்ள அனைவரின் மேலும் வெறுப்பு, கோபம் நம்பிக்கையின்மையாக மாறி, பிறரிடம் பேசவோ எவர் முன்னும் தோன்றவோ பயம் வந்து தன்னைத்தானே தனிமை படுத்திக்கொண்டாள்.
பல வருடங்களாக அவளை சுற்றி கட்டப்பட்ட சுவரின் மேல் இருந்த வெறுப்பு, அவளை நோக்கி ஊடுருவிய பார்வைகளின் மேல் இருந்த அருவெறுப்பு, தன்னை தேங்கிய அழுக்கு நீராக மாற்ற நினைத்த பிறரது பரிதாபகங்களினால் வெடித்த உச்சக்கட்ட கோபம், தன் மனோதிடத்தை உடைத்து முடக்கும் திட்டத்தோடு வரும் அக்கறையின் மேலான தாங்க இயலா கதறல், தன்னைத் தானே வெறுக்க வைத்து இச்சமூகம் அவளுக்கு ஆற்றிய அநீதி என அனைத்து உணர்ச்சிகளும் போட்டு அவளைத் தாக்கின.

ஒரு துண்டினை எடுத்து தன் மார்போடு சுத்தி இறுக்கிக் கட்டிக்கொண்டு அறையின் மூலையில் உட்கார்ந்து தேம்பி தேம்பி அழத் தொடங்கினாள்

*

சந்திரிக்கா என பெயர் பதிக்கப்பட்ட அந்த ஐடி கார்டை கழுத்தில் மாட்டிவிட்டு கொண்டு வீட்டைவிட்டு வெளியில் வந்தாள் மீனுகுட்டி. அச்சமும் கூச்சமும் குழப்பமும் அவளை சூழ்ந்திருந்தாலும், அவள் என்றும் இல்லாத புத்துணர்வு கொண்டு இருந்தாள். திடீரென்று இருளில் இருந்து வெளி வந்ததால் கண்கள் கூசி எரிச்சல் ஏற்படுத்தினாலும் இனி இருள் இல்லை என்று மனம் நிம்மதி அடைவதைபோல் அன்று அவள் முழு நிம்மதி கொண்டிருந்தாள். கைகளில் தூக்கிக்கொண்டிருந்த பொருட்களைத் தூக்கி எரிந்துவிட்டு கவனம் இல்லாமல் கைவீசி கொண்டு நடப்பதைப்போல் உணர்ந்தாள். தன்னைத் தொடர்ந்து கண்காணித்து வந்த எவரோ சட்டென்று காற்றோடு கலந்து மறைந்துவிட்டதைப் போல் உணர்ந்தாள். வீட்டின் வாசலில் இருக்கும் இரண்டு படிகளை தினமும்தாண்டி வெளியில் வந்தாலும் இன்று பெரும் வீரத்தோடு கோட்டை சுவர்களைக் கடந்து வருவதைபோல் உணர்ந்தாள்.

எப்பொழுதும் பார்த்து காலை வணக்கம் சொல்லும் கீழ் வீட்டு ஷீலா ஆண்டி இன்றும் பார்த்தார்.

“குட்மார்னிங் ஆண்டி” என்று தொடங்கிவைத்தாள் மீனுகுட்டி.

“குட் மார்னிங்” என்று வழக்கமான புன்னகையுடன் பதிலளித்தாள்.

தாண்டி சென்ற மீனு குட்டியை நிறுத்தி, “ சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத, டிரஸ் கொஞ்சம் அவ்க்வர்டா இருக்கு. மேல துப்பட்டா போட்டுட்டு போ. என்ன பண்றது காலம் கேட்டு கிடக்கு, எவன் எப்படி பார்க்குறானே தெரிய மாட்டுது” என்றார்.

தன்னை மீண்டும் சுற்றி உள்ளவர்களின் பார்வைக்காக வாழும் கைதியாக மாற்றிவிடும் என எந்த வார்த்தையைக் கண்டு பயந்தாளோ தன்னை சுக்கு நூறாக உடைத்துவிடும் என எந்த அக்கறையை நினைத்து மிரண்டாளோ அது அவளை நோக்கி நேரடியாக மீண்டும் ஏவப்பட்ட அந்தத் தருணத்தை மீண்டும் எதிர்கொண்டாள். ஆனால் இன்று அது அவளை உடைக்கவோ பயமுறுத்தவோ இல்லை.

சிறிய புன்முறுவலுடன் “பாத்துட்டுதான் போகட்டுமே” என்று பதிலளித்துவிட்டு தன் ஸ்கூட்டியை நோக்கி நடந்தாள் மீனு குட்டி.

தன்னை இத்தனை வருடங்களாக நடுங்க செய்த அந்தக் கேள்வியை இவ்வளவு எளிதாக தன்னால் தாண்டிவர முடியும் என அவள் நினைத்துப் பார்க்கவே இல்லை. எவ்வித தயக்கமும் இன்றி, சிறிதளவு அச்சமும் இல்லாமல், நிதானமாக மிக இயல்பாக அந்த வழக்கத்தைத் தூக்கி எரிந்ததை நம்ப முடியாமல் ஸ்கூட்டியை சாவி போட்டு ஸ்டார்ட் செய்து அக்சலேரட்டரைத் திருப்பினாள். வண்டி பறந்தது.

********