அடர்ந்த கூந்தலைக் காணும் பொழுது கவர்ச்சி தென்படும். அழகாகவும் தெரியும். ஆனால் அதைக் களைந்து பார்க்கும் போதுதான் உள்ளே மறைந்து கிடக்கும், நெளிந்து கொண்டிருக்கும் பேன்களும், ஈறுகளும் கண்ணுக்குப் புலப்படும். அதைப் போலத்தான் தேசியக் கல்விக் கொள்கையும். இது மிகப் பெரிய வாக்குறுதிகளையும், கல்வி பற்றிய மாற்றுத்திட்டங்களையும் பிரகடனப்படுத்துகிறது. பள்ளிக்கல்வியைப் பொறுத்தமட்டில் அதைத் திறம்பட அனைத்து மக்களிடையே எடுத்துச் செல்ல பல்வேறு அமைப்புகளை உருவாக்கப் போவதாகக் கூறுகிறது. அதைப் போல பல கருத்துக்களையும், செயல் திட்டங்களையும் பேசுகின்ற இந்த அறிக்கையில் எம்மாதிரியான குறைபாடுகள் அல்லது ஆபத்துக்கள் இருக்கின்றன என்பது ஆழமாக ஆராயும்போதுதான் தெரிகின்றது. வெறும் அலங்கார வார்த்தைகளும், நிறவேற்றுவதற்குக் கடினமான கனவுகளும் இந்த முன்வரைவில்… அடர்த்தியாக தெளிக்கப்பட்டு உள்ளன. இவையெல்லாம் நடைபெறுவதற்கான எந்த எதார்த்தமும் நாட்டில் நிலவவில்லை என்பதே உண்மை. இந்த வர்ணனைகளை செய்து நம்மை ஏமாற்ற நினைக்கிறார்களோ என்று எண்ணம்தான் மேலிடுகிறது.

கருவிலேயே கல்வி:

பள்ளிக் கல்வியைப் பொறுத்தமட்டில் இந்த அறிக்கை இதுவரை உள்ள கல்வி அமைப்பையே ஒட்டுமொத்தமாக மாற்றுகிறது. 3 வயதில் இருந்தே கற்றல் தொடங்க வேண்டும் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கின்றது. 2025 ஆம் ஆண்டுக்குள் மூன்று முதல் ஆறு வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமான, பாதுகாப்பான உயர்தரமான கல்வியைக் கிடைக்க வழி செய்யப்போவதாக அது பறைசாற்றுகிறது. குழந்தைகள் பிறக்கும்போதே கற்றுக்கொள்ளத் தொடங்கிவிடுவதால் அவற்றை மூன்று வயதிலேயே கல்விக்கூடங்களுக்கு அனுப்புவது தவறில்லை என்ற கருத்துடன் தன்னுடைய கொள்கையை விளக்குகிறது தேசிய கல்விக் கொள்கை. இனி பக்த பிரகலாதன் போல கருவிலேயே கல்வி கற்கும் முறை அறிவிக்கப்பட வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.

முன்பருவக் குழந்தை கல்வி மிகவும் அவசியமானது என்ற கோட்பாடு மிகவும் பிரச்சினைக்குரிய ஒரு கருத்தியல் ஆகும். உலகில் மிகவும் போற்றப்படுகின்ற பின்லாந்து போன்ற நாடுகளில் ஏழு வயதுக்கு மேல்தான் குழந்தைகளுக்கு முறையான பள்ளிக் கல்வி தொடங்குகிறது. ஆனால் நம் நாட்டில் மூன்று வயது முதல் தொடங்க வேண்டும் என்ற கொள்கை அறிவிப்பாக வந்துள்ளது. தனியார் பள்ளிகளில் தற்போது உள்ள முன் மழலையர் பள்ளிக்கல்வியை முடித்த பெரும்பான்மையான குழந்தைகள் தொடக்கப் பள்ளிக்குச் செல்லும்போது அதற்கான தயார் நிலை திறன்களைக் கொண்டிருக்கவில்லை என்று ஒரு ஆய்வு கூறுவதாக இவ்வறிக்கையே தெரிவிக்கிறது. அது ஏன் என்று பார்த்தால், அப்பள்ளிகளில் தகுதியற்ற பாடத்திட்டம், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமை மற்றும் பொருத்தமான பயிற்றுவிக்கும் முறைகள் இல்லாமை ஆகியவையே காரணங்களாகும் என்றும் இந்த முன்வரைவு கூறுகிறது. எனவே குழந்தைப் பருவகல்விக்கு ஏற்றாற்போல பலப்படுத்தப்பட்ட மழலையர் கல்வித் திட்டங்கள் உருவாக்கப்படும் என்கிறது. அதேபோல கற்பித்தல் பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் ஊழியர்களும் நியமிக்கப்படுவார்கள் என்கிறது. இது நடைமுறைக்கு ஏற்றதுதான் என்பதற்கான சிக்கல்கள் ஒருபுறம், மறுபுறம் இது கொள்கை அளவில் சரியானதுதானா என்ற பிரச்சினையும் உள்ளது. மூன்று வயதே உள்ள குழந்தைகளுக்கு சுதந்திரமான ஒரு வாழ்க்கைச் சூழலை உருவாக்குவதைத் தவிர்த்துவிட்டு வசதிகளற்ற பள்ளிகளுக்குள் அவற்றை அடைப்பது என்பது எந்த வகையில் சரியானது என்பது குறித்த விவாதம் இன்று மிகவும் அவசியமானதாகும். இதில் கொடுமை என்னவென்றால் மூன்று வயது முதலே தொழிற்கல்வியின் அடிப்படைகளும் பச்சிளம் குழந்தைகளுக்கு போதிக்கப்படுமாம். மிகவும் தரமான உள்கட்டுமானங்கள் குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தையும் இந்த முன்வரைவு தெரிவிக்கின்றது. உள்ள நிலைமையை ஆராய்ந்து பார்த்தால் லட்சக்கணக்கான பள்ளிக்கூடங்களில் அமர்வதற்கான வசதிகளும், கழிப்பறைகளும், கரும்பலகைகளும் இல்லை என்பதுதான் உண்மை.

அவற்றையெல்லாம் வழங்கவிருப்பதாக முரசு கொட்டும் இந்த முன்வரைவு அதை எப்படிச் செய்யப் போகிறோம் என்பது குறித்து அமைதியாக இருக்கிறது.
இவ்வறிக்கையின் பிற்பகுதியில் நிதி ஆதாரம் பற்றிக் குறிப்பிடுகையில் கல்விக்காக ஒதுக்கீடு அதிக அளவு அரசினால் செய்ய முடியாது. ஒருவேளை வரி வசூலிப்பில் வரும் வருமானம் மிகவும் அதிகரித்தால், எல்லோரும் ஒழுங்காக வரி கட்டினால், அரசு கல்விக்கான ஒதுக்கீட்டையும் அதிகரிக்க இயலும் என்கிறது. நிலைப்பாடு இப்படி இருக்கையில், இந்தியா முழுவதும் முன்பருவ மழலையர் பள்ளிகளை உருவாக்குவதும், அனைத்துப் பள்ளிகளிலும் போதுமான கட்டுமானங்களை ஏற்படுத்துவதும் எப்படி சாத்தியம் என்பதுதான் நமக்குப் புரியவில்லை. அதற்கு ஒரு வழியாகத்தான் தனியார் நிறுவனங்களுக்கு இங்கு ஆதரவு அளிக்கப்படுகின்றது. லாபகர நோக்கமில்லாமல் முதலீடு செய்யும் தனியார் பள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. லாப நோக்கம் இல்லாமல் ஏதேனும் ஒரு தனியார் பள்ளியை இவர்களால் அடையாளம் காண இயலுமா?

பண்பாட்டு மேலாதிக்கம்

ஜனநாயக மாண்புகளை மதிக்கக்கூடியவர்கள், விரும்பக்கூடியவர்கள் வருங்கால இந்தியா நல்லதொரு மதச்சார்பற்ற பன்மைத்தன்மையை அங்கீகரிக்கும் இளைஞர்களை உருவாக்கக் கூடிய கல்வியைத்தான் எதிர்நோக்குவார்கள். ஆனால் அப்படிப்பட்ட கல்விக்கான கூறுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. பலவித கலைகளையும் இலக்கியங்களையும் பள்ளிக் கல்வியிலேயே கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறுகின்ற இந்த முன்வரைவு, சமஸ்கிருதம் மட்டும் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி எல்லாவற்றிலும் ஒரு விருப்பப்பாடமாக வைக்கப்படும் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்கிறது. மேலும் எளிமையான சமஸ்கிருத புத்தகங்கள் மாணவர்களுக்காகத் தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கிறது.

நாட்டின் பண்பாட்டு ஒற்றுமைக்கு மிகவும் இன்றியமையாதது சமஸ்கிருத நூல்கள் என்று தெளிவாகவே குறிப்பிடுகிறது இவ்வறிக்கை. எனவே மாணவர்கள் சமஸ்கிருத அறிவைப் பெறுவது மிகவும் முக்கியமானது என்றும் இது பறைசாற்றுகிறது. இது கிராம்சி குறிப்பிட்டது போல ஒரு பண்பாட்டு மேலாதிக்கத்திற்கான திட்டமிட்ட செயல்பாடு ஆகும். ஏனென்றால், இந்தியாவில் பல்வேறு மொழிகளில் மிகச்சிறந்த பண்பாட்டு ஓர்மையை வளர்க்கக்கூடிய நூல்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு புராதனகாலத்து சனாதன தர்மத்தை உயர்த்திப் பிடிக்கும் வேதகால அறக்கோட்பாடுகளை மட்டுமே சிறந்ததாக சித்தரிக்கும் சமஸ்கிருத நூல்களை நாட்டின் ஒருமைப்பாட்டிற்கான அடிப்படையாக வைப்பது என்பது கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியதாகும்.
பின் கதவும்- இந்தி மொழி திணிப்பும்

இந்தி மொழி திணிப்பு என்பதைத் திட்டமிட்ட அரசு மக்களின் எதிர்ப்புக்கு பணிந்து அதை மாற்றி மும்மொழி திட்டத்தை மட்டும் அறிவித்துள்ளது. பள்ளிகளில் மூன்றாவது மொழிக்கான திட்டம் செயல்படுத்தப்பட்டால், அங்கு எம்மாதிரி மொழிகள் கற்றுக்கொடுக்கப்படும் நிலை உருவாகும் என்பதையும் யோசிக்க வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் இந்திதான் விருப்பப் பாடமாக வைக்கப்படும். அதை தவிர்க்க வேண்டும் எனில் வேறு பிற மொழிகளில் ஆசிரியர்களை நியமித்தல் வேண்டும். இப்போதே ஆயிரக்கணக்கான மூன்றாவது மொழி கற்பிக்க ஆசிரியர்களை அரசு நியமிக்க வேண்டி இருக்கும். மேலும் இளம் சிறுவர்களுக்கு எந்த மொழியைத் தேர்வு செய்வது என்பது பற்றிய அறிவு இருக்க வாய்ப்பில்லை. பள்ளியில் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் தேர்வு செய்வார்கள். மூன்றாவது மொழிகளாக இந்தி தவிர பிற மொழிகளைப் பயில அதிக அளவில் வாய்ப்புகள் உருவாக்க, அதற்கான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதே சம நீதிக்கான அணுகுமுறையாகும். இந்தியல்லாத பிற மொழிகளுக்கான ஆசிரியர்களை சம அளவில் நியமிக்கும் வரையில், இருமொழிக் கொள்கையைத் தொடர்வதே நல்லது.
மொழி என்பது வெறும் அறிவிற்கான ஊடகம், தொடர்பிற்கான ஊடகம் என்பதைத் தாண்டி அது ஒரு சமூகத்தின் அடையாளமாக ஆனபின் அது அரசியலின் ஒரு முக்கிய ஆயுதமாக ஆவதையும் யாரும் தடுக்க முடியாது.

தொழிற்கல்வியா? குலக்கல்வியா?

பள்ளிக் கல்வியில் தொழிற்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு உயர்கல்வி வரை அது தொடரும் என்னும் இந்த முன்வரைவு மூன்று வயதிலேயே குழந்தைகளுக்கு தோட்டத் தொழில் மற்றும் களிமண்ணைக் கொண்டு பொருட்கள் செய்தல் போன்ற முறைகளைக் கற்றுக் கொடுக்கப்படும் என்று கூறுகின்றது.
அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்ற, அங்கு வாழும் சமுதாயத்திற்கு ஏற்ற கைத்தொழில்களை, அதற்குரியவர்களை வைத்து மாணவர்களுக்குப் போதிக்க வேண்டும் என்கிறது இந்தப் புதிய கொள்கை.

இதில் பிரச்சினை என்னவென்றால், தற்போதுள்ள முறைப்படி பத்தாம் வகுப்பு முடிந்தவுடன் மாணவர்கள் எஸ்.எ.ஸ்.எல்.சி. படித்துத் தேறி விட்டதாக சான்றிதழ் பெறுவார்கள். ஆனால் புதிதாக முன்வைக்கும் திட்டத்தின்படி எட்டாம் வகுப்பு முடிந்தவுடன் ஒருவகை சான்றிதழும் பிறகு 9 முதல் 12 வரை படிப்பவர்களுக்கு ஹையர் செகண்டரி சான்றிதழும் வழங்கப்படும்.

எட்டாம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்திவிட்டு, பள்ளியில் அறிமுகப்படுத்திக் கொண்ட தங்கள் சமுதாயம் சார்ந்த கைத்தொழிலை மட்டும் நம்பி குலத்தொழிலுக்கு அல்லது குறைவான வருமானம் தரும் கைத்தொழில்களுக்கு மாணவர்கள் திரும்புவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன.
வட இந்தியாவில் உள்ள பின்தங்கிய ஏராளமான கிராமங்களையும் அங்குள்ள சாதியக் கட்டுப்பாடுகளையும் யோசித்தால் இதன் ஆபத்து புரியும்.

கல்விக் கொள்ளை

கல்வி இறுக்கத்திலிருந்து தளர்த்தப்படும் ஒரு தாராளப் போக்கினை இனி கொண்டிருக்கும் என்று இந்த அறிக்கை கூறுகிறது. மேலும் பள்ளிக்கூடங்களைப் பற்றி கூறும்பொழுது, ஒரு தொகுப்பாக பள்ளிக்கூடங்கள் அமைக்கப்படும் என்றும் குறிப்பிடுகிறது. இனி வரும் காலங்களில் தனியார் பள்ளிகளில் தேவையற்ற கட்டுப்பாடுகளை அரசு விதிக்காது. தனியார் கல்வி நிறுவனங்கள் சுதந்திரமான முறையில் கல்வியை போதிக்கலாம் என்றும் கூறுகிறது. அதற்கும் மேலே அவர்கள் விருப்பப்படி கல்விக் கட்டணத்தை விதித்துக் கொள்ளலாம் என்கிறது. ஆனால் அது நியாயமான கட்டணம் ஆக இருக்க வேண்டும் என்றும் அவர்களிடம் கெஞ்சுகிறது.
ஆடிப் பாடி மகிழ்ந்து பிள்ளைகள் கல்விகற்கலாம் என்கிறது. தனியார் பள்ளி நிர்வாகங்கள் பாடு கொண்டாட்டம்தான். ஆடுவதற்கு ஒரு கட்டணம், பாடுவதற்கு ஒரு கட்டணம் என்று கல்லா கட்ட ஆரம்பித்துவிடும்.

இன்று பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களை நியமிப்பது என்பதற்கு டெட் தேர்வு முறை உள்ளது. இந்தத் தேர்வு முறையை அறிமுகப்படுத்தியதற்குக் காரணம், நேர்முகப் பேட்டிகளில் பெரும்பாலும் லஞ்சமும், ஊழலும் நிலவுவதே ஆகும். ஆனால் இந்த முன்வரைவு மறுபடியும் டெட் தேர்ச்சி மட்டுமன்றி, நேர்முகத் தேர்வு மற்றும் வகுப்பு எடுக்கும் திறன் ஆகியவற்றை எடைபோட்டுப் பணி வழங்க வேண்டும் என்று கூறுகிறது. இவர்கள் எப்படி எடை போடுவார்கள் என்பது ஊரறிந்த விஷயம். பணம் கொடுப்பவரே இனி ஆசிரியர் பணிக்கு லாயக்கானவராவார். இதைத் தயாரித்த அறிஞர்களுக்கு உண்மை நிலவரம் உண்மையிலேயே புரியவில்லையா என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

கல்வி என்பது மக்களின் பொதுச் சொத்து. அரசு என்பது அதைப் பாதுகாக்க வேண்டிய கடமையைக் கொண்டுள்ளது. ஆனால் அந்தக் கடமை தவறி கல்வி என்ற மாபெரும் பொக்கிஷத்தை தனியார் பள்ளிகளிடம் வியாபாரத்திற்கு ஒப்படைப்பது நாட்டு மக்களுக்கு இழைக்கும் துரோகமாகும்.

மதச் சார்பின்மையைத் தவிர்க்கும் நோக்கம்

பாடசாலைகள், குருகுலங்கள், மதரஸாக்கள் போன்ற மத அடிப்படையிலான கல்விக்கூடங்களுக்கும் அரசின் நிதி உதவி கிட்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது மிகவும் ஆபத்தானது. மதம் சார்ந்த கல்வி நிறுவனங்களை அரசு அங்கீகரிப்பது என்பதே தவறு. அதற்கும் மேல் போய் நிதிஆதரவு தரப்படும் என்று கூறுவது பல சிக்கல்களை உருவாக்கும். எந்த மதத்தின் போதனை பள்ளிகளுக்கு அரசின் ஆதரவு இருக்கும் என்பதை அனைவரும் அறிவார்கள். மேலும் அரசியல் சாசனம் முன்மொழியும் சுதந்திரம், மனித மாண்பு, நீதி போன்ற மதிப்பீடுகளை பள்ளிக் கல்வியிலே இடம் பெறச் செய்யவிருப்பதாகக் கூறும் முன்வரைவு, மதச்சார்பின்மை (Secularism) என்ற முக்கியமான விழுமியத்தை தவிர்த்திருப்பது ஏன் என்று புரியவில்லை. சாதிஉணர்வுகளை நீர்த்துப் போகச்செய்யவும் மதவெறியை அழிக்கவும் கல்வித்திட்டங்கள் அடிப்படைக் கல்வியிலேயே தேவை. ஆனால் மதச்சார்பின்மை என்ற செல்லையே இந்த முன்வரைவு தவிர்ப்பது புரிந்து கொள்ளவேண்டிய அரசியல்.

மூன்றாம் வகுப்பிலேயே தேசிய தர நிணயம்

மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு போன்றவற்றிலேயே தரநிர்ணயத் தேர்வு நடத்தவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது மாணவர்களிடையே பலத்த போட்டி மனப்பான்மையை உருவாக்கும். ஏற்கனவே பிளஸ் 2 தேர்வுகள் வணிகமயமாக்கப்பட்டு, பெற்றோர் மாணவர்கள் மீது பொருளாதார மற்றும் உளவியல் அழுத்தத்தை ஏற்படுத்துவதை எதிர்கொண்டு வருகிறோம். இனி 3, 5, 8 வகுப்புகளுக்கான தேசிய அளவிலான கற்றல் தேர்வுகள் எனில் குழந்தை பருவம், வளர் இளம் பருவம் முழுவதும் உளவியல் அழுத்தத்திற்கு ஆளாக்கப்படுவதும், பெரும் வணிகத்திற்கான சரக்காக அவர்கள் மாற்றப்படுவார்கள் என்பதும் நடைபெறும்.
கல்வி உரிமை சட்டத்தில் திருத்தங்கள்

மாநில அரசுகளின் கல்வி குறித்த உரிமைகளை முற்றிலுமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் கூறுகள் இதில் அதிகம் காணப்படுகின்றன. கல்வி உரிமைச் சட்டம் 2009இல் உரிய மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது என்றும் முன்வரைவு கூறுவது அச்சத்தைத்தான் கொடுக்கிறது. இருக்கின்ற உரிமைகளையும் பிடுங்கி விடுவார்களோ என்றும் அச்சப்பட வேண்டியுள்ளது. கல்லூரிகளுக்கு தன்னாட்சி வழங்குவது போல பள்ளிகளுக்கும் தன்னாட்சி வழங்கக் கூடிய அளவிலான திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
யார் இந்த ஆலோசகர்கள்?

பள்ளி வளாகங்களில் ஆலோசகர்கள், சமூகப் பணியாளர்கள், உள்ளூர் பங்குதாரர்கள் ஈடுபட்டு கற்றல் திறனை செழுமைப்படுத்த உதவுவார்கள் என்று வரைவு கூறுவது சில சந்தேகங்களை எழுப்புகின்றது. இந்த ஆலோசகர்கள், சமூகப் பணியாளர்கள் என்போர் பெரும்பாலும் ஆளும் கட்சி சார்ந்த நபர்களாகத்தான் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இவர்கள் பள்ளியில் நுழைந்து தங்கள் அதிகாரத்தையும், தங்கள் கட்சி செல்வாக்கையும்தான் காட்டுவார்களே தவிர கல்வி வளர்ச்சிக்கு உதவவே மாட்டார்கள் என்பது திண்ணம். அது மட்டுமின்றி ஆர்.எஸ்.எஸ்., பஜரங்தள்ளின் பிரிவான சமஸ்கிருத பாரதி போன்ற மதவாத அமைப்புகளின் ஊழியர்கள் இந்தப் பணிகள் மூலம் பள்ளிகளில் நுழையும் ஆபத்தும் உள்ளது.

மாநில அரசின் கல்வி உரிமை பறிப்பு

மாநில அரசுகளின் கல்வி குறித்த உரிமைகளை முற்றிலுமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் கூறுகள் இதில் அதிகம் காணப்படுகின்றன. கல்வி உரிமைச் சட்டம் 2009இல் உரிய மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது என்றும் முன்வரைவு கூறுவது அச்சத்தைத்தான் கொடுக்கிறது. இருக்கின்ற உரிமைகளையும் பிடுங்கி விடுவார்களோ என்றும் அச்சப்பட வேண்டியுள்ளது.கல்லூரிகளுக்கு தன்னாட்சி வழங்குவது போல பள்ளிகளுக்கும் தன்னாட்சி வழங்க கூடிய அளவிலான திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பள்ளி குறித்த நல்ல பல கொள்கைகள் பற்றி இந்த முன்வரைவு குறிப்பிட்டுள்ள போதிலும், செயல் திட்டங்களாக முன்மொழிந்துள்ளவற்றில் பல முக்கிய திட்டங்கள் நிராகரிப்பட வேண்டியவை.

உயர்கல்விக் கொள்கை – குறுக்கு விசாரணை

பன்முக அறிவுத்திறன், புதுமை, ஆக்கபூர்வமான சிந்தனை, சமூக உணர்வு, அற உணர்வு, சேவை மனப்பான்மை மற்றும் ஒரு கட்டு ஞான ஒளி உட்பட உலகின் அனைத்து நல்ல பண்புகளையும், திறங்களையும் கொண்டு அதன் மூலம் 21ஆம் நூற்றாண்டின் அனைத்து சவால்களையும் எதிர் கொள்ளும் இளைஞர்களை உருவாக்க விரும்புவதாக கட்டியம் கூறித் தொடங்குகிறது உயர்கல்விக்கான தேசியக் கல்விக் கொள்கையின் முன்வரைவு.
எப்போதுமே முற்போக்காளர்களின் கல்வி குறித்த பார்வைகளைத் தத்துவங்களாக முன்னுரையில் தெறிக்கவிட்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக முன்வைக்கும் செயல் திட்டங்களில் முற்றிலும் எதிரான அம்சங்களைக் கொண்டுவருவது முன் வரைவு தயாரிப்பவர்களின் யுக்தியாக உள்ளது.
இதை மேலோட்டமாகப் படிப்பவர்கள் நல்ல கொள்கைதான் என்று ஏமாந்து விடக்கூடிய வகையில் மொழியும், கருத்துக்களும் கையாளப்பட்டுள்ளதே இதன் முக்கிய யுக்தியாகும். உயர்கல்வி குறித்த முன்வரைவை ஆழமாகப் படித்து சல்லடை போட்டு சலித்துப் பார்த்தால், செயல் திட்டங்களாக என்ன மிஞ்சுகிறது என்று பார்த்தால் அத்தனையும் விஷம். புதிய கல்விக் கொள்கை 2019 என்பது இனிப்பு தடவப்பட்ட விஷம்.

மிஷன் நாளந்தா மற்றும் தக்சசீலா

முன்மாதிரி உயர்கல்விக் கூடங்களாக தட்சசீலத்தில் முன்னொரு காலத்தில் நிறுவப்பட்டிருந்த பல்கலைக்கழகமும் நாளந்தாவில் இருந்த புராதன பல்கலைக்கழகமும் கொள்ளப்படுகின்றன.

நாளந்தா மற்றும் தக்சசீலா என்பதையே முக்கியமான முழக்கமாக முன்வைக்கிறது புதிய கல்விக் கொள்கை. புராதன இந்தியாவில் வழங்கப்பட்ட எல்லா கலைகளையும் இன்று உயர்கல்வி நிறுவனங்கள் மூலமாக ‘தாராளக் கலைகள் படிப்பு’(Liberal Art Education) என்ற பெயரில் மத்திய அரசு வழங்க உள்ளது. ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் பாணபட்டர் என்பவரால் எழுதப்பட்ட காதம்பரி என்னும் காதல் காவியத்தில் விளக்கப்பட்டுள்ள ஆயகலைகள் அறுபத்திநான்கையும், அதற்குப் பின்னர் லலித விஸ்தார சூத்திரம் என்ற நூலில் விளக்கப்பட்டுள்ள 86 கலை வகைகளையும், மேலும் எல்லாவற்றிற்கும் மேலாக காமசூத்திரத்தின் உரையாக யசோதரர் என்பவரால் எழுதப்பட்டுள்ள ஜெயமங்களா என்னும் 13-ஆம் நூற்றாண்டின் நூலில் குறிப்பிடப்படுள்ள 512 கலைகளையும் நமது மாணவர்களுக்கு கல்வித் திட்டங்கள் மூலம் வழங்குவது என்பதையே முக்கியமான நோக்கமாக அறிவிக்கிறது புதிய கல்விக் கொள்கை 2019.

இதைப் படிக்கும்போதே சாணக்கியர் காலத்தில் வாழ்ந்த அறிவுஜீவிகளுக்கு மறு உயிர் கொடுத்து இந்த அறிக்கையைத் தயார் செய்ததாகத் தெரிகிறது.
சமகாலத்திய கல்வி ஆய்வு நூல்களோ, உலகின் சிறப்பான கல்வி தத்துவங்களோ, பல்கலைக்கழகங்களோ, செயல்பாட்டுத் திட்டங்களோ எதுவும் இவர்கள் கண்களுக்குத் தெரியவில்லை. தென்னகத்தின் திருக்குறள் போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள வாழ்வியல் விழுமியங்கள் கூட எதுவும் புலப்படவில்லை என்பது பண்பாட்டுக்கல்வி குறித்த இவர்களின் போதாமையைக் காட்டுகிற அதேவேளையில் தமிழர் பாரம்பரியத்தை சற்றும் மதிக்காததும் வெளிப்படுகிறது. புராதனமான, அக்கால கட்டத்தில் சமஸ்கிருத இலக்கிய கர்த்தாக்களால் வடிக்கப்பட்ட, எந்தவித சம கால ஆய்வுகளுக்கும் உட்படுத்தப்படாத நூல்களில் கூறப்பட்டுள்ள விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு உயர் கல்வி அமையும் என்று பிரகடனம் செய்ததிலிருந்தே இத்திட்டம் எப்படிப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.

எல்லோரும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான திட்டங்களைத்தான் இந்தக் கல்வி கொள்கை முன்மொழியும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் இப்படிப்பட்ட அரதப் பழசான நூல்களையும், மதிப்பீடுகளையும் ஏன் கல்வித் திட்டத்தில் கொண்டு வர விழைகிறார்கள் என்று பார்த்தால், அது ஆரிய பண்பாட்டு விழுமியங்களை இந்தியா முழுவதிலும் விதைப்பது என்ற நோக்கத்திற்காகத்தான் என்பது புரிகிறது. ஆனால் இந்தக் கலைகளெல்லாம் யார் கற்றுக் கொடுப்பார்கள், அவை பற்றி யாருக்கு முழுமையாகத் தெரியும் என்பது பற்றியெல்லாம் பெரிய கவலையை வரைவு தயாரித்தவர்கள் கொண்டதாகத் தெரியவில்லை. அவர்களது முக்கிய நோக்கம் வேத கால பண்பாட்டை புத்துயிர்ப்பு செய்யவேண்டும் என்பதே ஆகும்.

மிக ஆழமாக சென்று பழமையான கூறுகளைத் தோண்டி எடுத்து அவற்றைப் பட்டை தீட்டி, வரும் தலைமுறைகளுக்கு விதைப்பதன் மூலம் இருபத்தியோராம் நூற்றாண்டின் அனைத்து சவால்களையும் இலகுவாக எதிர்கொள்ளக்கூடிய திறன் வாய்ந்த இளைய தலைமுறையை நாம் உருவாக்கப் போவதாக அது பிரகடனம் செய்கிறது. கேட்க ஆச்சரியமாகவே இருக்கிறது. ஆனால் அதன் செயல் திட்டங்களை உற்று நோக்கினால் எவ்வளவு ஆபத்தான அறிக்கை இது என்று புரிகிறது. சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகாலம் பல்வேறு திட்டங்களின் மூலம் தட்டுத் தடுமாறி முன்னேறி வரும் இந்தியாவின் உயர் கல்வி மறுபடியும் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னே இழுத்துச் செல்லப்படுவது மிகவும் துயரமானது.

இனி எந்த கல்விக் கொள்கையும் தேவையில்லை

சுதந்திரம் அடைந்தவுடன் படிப்படியாக அரசு மக்களுக்குத் தரமான கல்வியை, இலவசமாக வழங்கும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் படிப்படியாக கல்வியை அரசு வழங்காது என்பதுதான் தெளிவாகி வருகிறது. இந்த முன்வரைவு ஒட்டு மொத்தமாக இனி அடுத்த கொள்கை எதையும் அரசு வெளியிடவேண்டிய அவசியம் இன்றி முற்றுப்புள்ளி வைக்கின்றது. இதற்குப் பின் கல்விக் கொள்கை எதையும் அரசு அறிவிக்கவேண்டிய அவசியம் இல்லாமல் போவதற்குக் காரணம் அனைத்து உயர்கல்வியும் தனியார் வசம் ஒப்படைக்கப் படும் என்பதே ஆகும். அரசு உயர்கல்வித்துறையை மொத்தமாக தனியாருக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் திட்டமே இந்தப் புதிய கல்விக் கொள்கை திட்டமாகும்.

அப்படி அவர்களிடம் ஒப்படைக்கும்போது, அவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் வகையில் கல்வி செயல்பாட்டிற்கு விதிக்கப்பட்ட அனைத்து தடைகளையும் சட்ட பூர்வமாக நீக்குவதே இதன் உள் நோக்கமாகும்.

கீழ்க்கண்ட விதிகள் இதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன:

அனைத்துக் கல்லூரி நிறுவனங்களுக்கும் தன்னாட்சி வழங்கப்படும். கல்வித் திட்டத்தை வடிவமைப்பதில் தன்னாட்சி, நிதி நிர்வாகத்தில் தன்னாட்சி மற்றும் பொது நிர்வாகத்தில் தன்னாட்சி என கல்லூரி நிறுவனங்கள் அனைத்து வகை தன்னாட்சியையும் பெற்றவையாக விளங்கும்.
கல்லூரிகளே இனி தங்கள் பெயரிலேயே பட்டம் வழங்கலாம்.

உயர்கல்விக்கான கட்டண விகிதத்தை அந்தந்த உயர்கல்வி நிறுவனங்கள் அவரவர்கள் தேவைக்கு ஏற்ப விதித்துக் கொள்ளலாம். அதேசமயம் பெறப்படும் கல்விக்கட்டணத்தில் இருந்து ஒரு தொகையை மட்டும் போனால் போகிறது என்று கல்வி உதவித்தொகையாக மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
நிதியை எவ்வாறாக செலவு செய்வது என்பது பற்றி கல்லூரி நிர்வாகங்களே முடிவு செய்யும்.. அரசு தலையிடாது.
விரைவில் எல்லா கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும்.
கல்லூரிகள் பல்கலைக்கழக அந்தஸ்து பெறலாம்.

மேற்கண்ட முன்மொழிவுகளுக்கு என்ன பொருள்? ஒட்டு மொத்தமாக சாதாரண மக்கள் படித்து வரும் உயர்கல்வியை விற்பனைக்குரிய பொருளாக்கி அதைத் தனியார் வசம் ஒப்படைப்பது என்பதே ஆகும்.

எங்கும் தன்னாட்சி, எதிலும் தன்னாட்சி

தன்னாட்சி என்பது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு, அது வெற்றிகரமானதா இல்லையா என்பது பற்றிய ஆய்வுகள் என்ன, அவற்றின் விமர்சனங்கள், பரிந்துரைகள் என்ன என்பது பற்றியெல்லாம் விளக்காமல், விவாதிக்காமல், இனி எல்லா கல்லூரிகளும் தன்னாட்சி கல்லூரிகள்தான் என்பது அடாவடித்தனத்தின் உச்சம். இந்தியாவில் தன்னாட்சி கல்லூரிகள் என்பது பல கல்வியாளர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் மொத்தமாக 40000 கல்லூரிகள் இருப்பதாக முன்வரைவு தெரிவிக்கின்றது. இதில் இன்று வரை தன்னாட்சி தகுதி வழங்கப்பட்ட கல்லூரிகளின் எண்ணிக்கை மொத்தமே 695தான். மீதி 39305 கல்லூரிகள் தன்னாட்சி என்றால் என்னவென்றே அறியாதவை. அதுவும் தமிழகத்தில்தான் 191 கல்லூரிகள் தன்னாட்சிக் கல்லூரிகளாக இருக்கின்றன. பிஹார் மாநிலத்தில் ஒரே ஒரு கல்லூரிதான் தன்னாட்சிக் கல்லூரி. பிஹாரின் கல்வித் தரம் பற்றி உலகே அறியும். அதே போன்று உத்தரப் பிரதேசத்தில் உள்ள தன்னாட்சிக் கல்லூரிகளின் எண்ணிக்கை 12 தான். குஜராத்திலேயே வெறும் 4 கல்லூரிகள்தான் தன்னாட்சிக் கல்லூரிகள். கேரளாவில் பலத்த எதிர்ப்புக்களுக்கிடையே சமீபத்தில்தான் தன்னாட்சி 19 கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை வழங்கப்பட்ட தன்னாட்சி கூட கல்வித் திட்டங்கள் பற்றிய முடிவுகள் எடுப்பதற்கான தன்னாட்சி. அப்படி ஒரு தன்னாட்சித் தகுதியை ஒரு கல்லூரி நிறுவனம் பெறவேண்டுமானால் அதற்கு ஆயிரத்தெட்டு நிபந்தனைகள் உள்ளன. அவற்றை நிறைவேற்றுவது மிகவும் சிரமமான காரியம். அதுவும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மதிப்பீட்டுக் குழு வருகை புரிந்து பரிசீலிக்கும். இப்போது என்னவென்றால் யு.ஜி.சி.யை ஓரம் கட்டிவிட்டு, ஒரேடியாக எல்லா உயர் கல்வி நிறுவனங்களுக்கும் தன்னாட்சித் தகுதி வழங்கப்படுமாம்.
அதுமட்டுமல்ல. நிதி மற்றும் நிர்வாகத்திற்கும் தன்னாட்சிதான். இதற்கு என்ன அர்த்தம்? உயர்கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருப்பது அரசுதானாம். எனவே அதைக் கட்டவிழ்த்து விட்டு விட்டால் தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அதை குபு குபு என வளர்த்துவிடுமாம்.

இனி கல்லூரிகள் பட்டமளிக்கும் அதிகாரத்தைப் பெறும் என்னும் அதிரடி முடிவு எப்படிப்பட்ட சீரழிவை உயர்கல்வியில் உருவாக்கும் என்பதைக் கற்பனைகூட செய்யமுடியாது. உத்தரப்பிரதேசத்திலும், பிஹாரிலும் கல்வி செழிப்பாக வளரும். இந்தியாவில் பணம் உள்ள அனைவரும் உயர்கல்வி பெறுவர். ஒருவேளை விற்கப்படும் பட்டத்தின் விலை வேண்டுமானல் கட்டுப்படுத்தப்படலாம்.

ஜியோ போன்ற பெரிய பெரிய கார்ப்பரேட்டுகள் இந்த விதி தளர்விற்காகத்தான் காத்துக் கிடக்கின்றன. இந்த முன் வரைவு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அதிகக் கொண்டாட்டம் இவர்களுக்குத்தான். வேலை வாய்ப்புக்கல்வி என்ற பெயரில் பல பாடத்திட்டங்களை அறிவித்து, பெரும் தொகைகளைக் கட்டணமாகக் கறந்து கொழிக்கத் தயாராகி வருகின்றன. பல சுமார் வகை கல்லூரிகளுக்குப் பாடத்திட்டங்கள் தயாரித்துக் கொடுக்கும் பணியை இப்போதே பல நிறுவனங்கள் தொடங்கிவிட்டனவாம். இனி என்ன, தடி எடுத்தவன் தண்டல்காரன்தான்.

ஜனநாயக வெளிகள் அடைப்பு

இவை அனைத்தும் இத்தனை நாட்களாக பாதுகாக்கப்பட்டு வந்த ஓரளவு ஜனநாயகத் தன்மை கொண்ட கல்வித் திட்டத்தை சுக்கு நூறாக உடைப்பதாகும்.
ஆசிரியர்களும் எதுவும் இனி பேச முடியாது. சங்கம் வைத்து உரிமைகளைக் கோரமுடியாது. ஏனெனில் ஆசிரியர்களின் பணி உயர்வு, இனி பணி மூப்பின் அடிப்படையில் அன்றி, நிர்வாகம் அமைக்கும் தர மதிப்பீட்டுக் குழுவின் நிர்ணயத்தின் அடிப்படையில் வழங்கப்படும். இப்போதே கல்லூரிகளில் பதவிகள் நிர்வாகத்திற்கு ஒத்து ஊதுபவர்களுக்குத்தான் வழங்கப்படுகின்றது. இப்படி முழு அதிகாரத்தையும் கல்லூரி நிர்வாகங்களிடம் கொடுத்துவிட்டால் உரிமை என்றெல்லாம் பேச முடியாது.

அதே போன்று மாணவர்களுக்கான ஜனநாயக அமைப்புகளுக்கான எந்தக் குறிப்பும் வரைவில் காணப்படவில்லை. ஏற்கனவே கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டிருக்கும் மாணவர் சமுதாயம் இனி ஈனஸ்வரத்தில் கூட முனக முடியாது. இப்படி எல்லா ஜனநாயக வெளிகளும் அடைக்கப்படும். அப்படியே குறைகளை முறையிட வேண்டுமானால் அதற்கென்று அமைக்கப்படும் ஒரு தனி ஒழுங்காணையத்திடம் முறையிடலாமாம். ஒழுங்காணையத்திடம் முறையிட்டு அதில் திருப்தி இல்லை என்றால் மட்டுமே நீதி மன்றத்தை நாட முடியும்.

லஞ்சத்தை ஒழிக்க ஒரே வழி:

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் அரசின் தலையீடு உள்ளது. எனவே லஞ்சம் கொடுத்தும், சிபாரிசின் மூலமும் தகுதியற்றவர்கள் ஆசிரியர்களாகவும். நிர்வாகிகளாகவும் வாய்ப்பு பெறுகிறார்கள். இதைத் தடுத்து திறமைக்கு மட்டுமே முன்னுரிமை வழங்க வேண்டுமெனில், ஒரே தீர்வு, எல்லா கல்லூரி நிர்வாகங்களுக்கும் ஆசிரியர்களைப் பணிக்குத் தேர்வு செய்யும் முழு உரிமையையும் வழங்குவதுதான் என வரைவு கூறுகிறது.
இனி தனியார் நிர்வாகங்கள் எந்தவித கட்டுப்பாட்டுக்குள்ளும் வரவேண்டிய அவசியம் இல்லை. எல்லாம் பகல் கொள்ளைதான். பணி நியமனங்கள் தமிழகத்திலே ஏற்கனவே பல லட்சங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இனி அது வெளிப்படையாக நடக்கும். அது மட்டுமல்ல, தங்களுக்கு அடிமைகளாக இருக்க தகுதி உள்ளவர்களை மட்டும் அவை பணிக்கு எடுத்துக்கொள்ளும்.

கல்லூரி ஆசிரியர்கள் கடுமையாகப் போராடிப் பெற்ற குறைந்தபட்ச சட்ட பாதுகாப்புகளைக் கொண்ட தனியார் கல்லூரி ஒழுக்காற்று சட்டங்கள் புதைக்கப்படும். பணிப் பாதுகாப்பு என்பது ஒழிக்கப்பட்டு, மீண்டும் பழங்கால பண்ணையார் நிர்வாகம் ஏற்படுத்தப்படும்.

யு.ஜி.சி. என்ற அரண் உடைப்பு

இதுவரை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த பல்கலைக்கழக மான்யக் குழு இனி அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டு நிதி வழங்கும் நிறுவனமாக மட்டும் செயல்படும். பல்கலைக்கழக மான்யக்குழுவின் கெடுபிடி இருக்கும்போதே பல உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் விருப்பப்படி வணிக நோக்கத்துடன் பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்தி அதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றனர். ஆனால் பல்கலைக்கழக மான்யக்குழுவின் கட்டுப்பாடுகள் உயர்கல்விக்கே உலை வைத்துக் கொண்டிருக்கிறது என்று வெளிப்படையாகத் தெரிவிக்கின்றது இந்த வரைவு.

பல்கலைக்கழக மான்யக்குழுவில் ஏராளமான குறைகள் காணப்பட்டாலும் 65 ஆண்டுகளுக்கு மேலாக கல்வியாளர்களின் பலவித அனுபவபூர்வமான ஆலோசணைகளால் அது செழுமைப்படுத்தப்பட்டு வந்தது. அதை ஒரேடியாக இழுத்து மூட வேண்டும் என்பதுதான் இந்த பி.ஜே.பி. அரசின் நோக்கமாக இருந்தது. பிறகு நாட்டில் கல்வியாளர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியதின் காராணமாக, பல்கலைக்கழக மான்யக்குழுவின் அதிகாரங்களைக் குறைத்து அதை ஒரு மூலையில் இயங்க வைக்க முடிவு செய்துள்ளது. இப்படி செய்வதால் என்ன லாபம் இவர்களுக்கு என்று பார்த்தால், தாங்கள் தகர்க்க விரும்பும் நாட்டின் ஒட்டுமொத்த உயர்கல்வி அமைப்புக்கு முதல் தடையாக இவர்களுக்கு இருப்பது பல்கலைக்கழக மான்யக்குழுதான். ஏனெனில் யு.ஜி.சியின் விதிகள் மற்றும் செயல்பாடுகள் பல ஆண்டுகளாக மக்களுக்குத் தரமான உயர் கல்வியை வழங்கும் வகையிலும், தனியார் மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் விருப்பப்படி உயர்கல்வியை சிதைத்துக் கெடுத்துவிடக்கூடாது என்பதற்காகவும் ஆக்கப்பட்டவை. இந்த அரணை உடைத்தாலன்றி, கல்வியைத் தாராளமயமாக்க, தனியாரிடம் ஒட்டு மொத்தமாகத் தாரைவார்க்க இயலாது.

கோடிக்கணக்கானோர் உடனடி உயர்கல்வி பெறும் அதிசய திட்டம்

நாட்டில் கல்வி கற்றோர் விகிதத்தை (GER) 2035க்குள் 50 சதவிகிதமாக ஆக்க வேண்டும். ஆகவே மாணவர் சேர்க்கையை ஒவ்வொரு கல்வி நிறுவனமும் இரட்டிப்பு ஆக்க வேண்டும். உயர்கல்வியை விரைவாக அதிக மக்களுக்குக் கொண்டு செல்லவேண்டும் என்பதற்காக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் 10000 முதல் 25000 வரை மாணவர்களைச் சேர்க்கவேண்டுமாம். உள்ளவர்களுக்கே இடமும், பரிசோதனைச்சாலை வசதிகளும், கழிப்பறை வசதிகளும் பெண்களுக்கான இடங்களும், விடுதிகளும், ஆசிரியர் பற்றாக்குறையும் உள்ளது.

இதையும் தாண்டி வகை 1 & 2 கல்வி நிறுவனங்கள் அனைத்தும் திறந்த நிலை மற்றும் தொலைத்தொடர்பு கல்வி வழங்கலாம். அதாவது பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி கல்லூரிகளும் திறந்த நிலை மற்றும் தொலைத் தெடர்பு கல்வி வழங்கலாம். அனைத்துக் கட்டுப்பாடுகளுடன் படிப்புகளை வழங்கும்போதே இங்கு கொள்ளையடிக்கப்படுகிறது. இதில் திறந்த நிலை மற்றும் தொலைதூரக் கல்வியைக் கல்லூரிகளே நடத்தி பட்டத்தையும் அவர்களே வழங்கத் தொடங்கினால் அவ்வளவுதான். மசானக் கொள்ளைதான். ஊருக்கு ஊர் கல்லூரிகளின் தொடர்பு நிலையங்கள் எனும் பெயரில் ஆள் பிடிக்கும் பணி தொடங்கும். பட்டங்கள் போட்டி போட்டுக் கொண்டு பல்வகை பிராண்டுகளில் விற்கப்படும்.

சிறப்புக் கல்வி மண்டலங்களும், நவோதயா கல்லூரிகளும்

புதிய கல்விக் கொள்கையின்படி மூன்றுவகை உயர்கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும். ஆராய்ச்சிக்கு மட்டுமே ஆனது வகை 1, ஆராய்ச்சியும் கற்பித்தலும் இணைந்தது வகை 2, மூன்றாவது கற்பித்தல் மட்டுமே கொண்ட நிறுவனம். அதைப்போல சிறப்புப் பொருளாதர மண்டலங்கள் போல சிறப்புக் கல்வி மண்டலங்களும் உருவாக்கப்படும்.

50 லட்சம் மக்கள் தொகைக்கு வகை 1 நிறுவனமும், 5 லட்சம் மக்கள் தொகைக்கு வகை 2 நிறுவனமும், இரண்டு லட்சத்திற்கு வகை 3 நிறுவனமும் அமைக்கப்படும்.
உயர்கல்விக்கூடங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு சகல வசதிகளுடன் பல்துறை அறிவுசார் கல்வியும் வழங்கக் கூடிய அளவில் உருவாக்கப்படும். அவை உலகத்தரம் வாய்ந்த முன்மாதிரி உயர்கல்வி நிறுவனங்கள் ஆக அமையும். இம்மாதிரியான முன்மாதிரி உயர்நிலைக் கல்வி நிறுவனங்கள் நவோதயா பள்ளிகள் போன்று மாவட்டத்திற்கு ஒன்று என படிப்படியாக உருவாக்கப்படுமாம்

இந்த சிறப்புக் கல்வி மண்டலமும் சரி, முன்மாதிரி உயர்கல்வி நிறுவனங்களும் சரி அனைவருக்குமானது அல்ல.அவை குறிப்பிட்ட ஒரு எண்ணிக்கையினருக்கு மட்டுமே பலனளிக்கும்.

இருபக்க மூளையையும் செயல்படவைக்கும் அபூர்வக் கல்வித் திட்டம்:

இதுவரை ஒருபக்க மூளையை மட்டுமே உயர் கல்வி வளர்த்து வந்ததாம். அதனால்தான் நாம் நோபல் பரிசு எதுவும் பெறமுடியாமல் போனது.இனி வரும் காலங்களில் ஒரு பக்கம் கலை மற்றும் கற்பனைக்கான மூளையின் செயல்பாடு, மறுபக்கம் அறிவியல் மற்றும் விமர்சனக் கூறு கொண்ட மூளையின் செயல்பாடு என இரண்டையும் வீர்யமாக வளர்க்கும் கல்வித் திட்டங்கள் உருவாக்கப்படும் என்று புதிய கல்விக் கொள்கை திட்டம் கூறுகின்றது. இதை எப்படி செய்யப் போகிறதென்றால் புதை பொருள் ஆராய்ச்சி மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ள காம சூத்திரம் மற்றும் சாணக்கியரின் அர்த்த சாத்திரம் போன்ற பல காவியங்களின் மூலம் செயல்பட வைக்க உள்ளதாம், இதைப் படித்துவிட்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

ஆழமான அறிவையும், ஆரோக்கியமான அறிவியல் பார்வையையும் உருவாக்கும் கல்விக்கு இனி வேலை கிடையாது. எல்லா சமூக ஞானிகளுக்கும் கல்வியகங்கள் விடை கொடுத்துவிடும். இவர்கள் குறிப்பிடுவது போல இரண்டுபக்க மூளையும் விருத்தி ஆகி முழு ஆளுமை கொண்ட மாணவர் உருவாக வாய்ப்பே இல்லை. ஏனெனில் உயர்கல்விக் கூடங்களுக்கிடையே உருவாகும் போட்டியில், கல்வி என்பது வெறும் வேலை வாய்ப்பைப் பெற்றுதரும் அளவில்தான் இருக்கும். ஆராய்ச்சி எல்லாம் கூட குறைந்து போகத்தான் வாய்ப்பு. ஆனால் உயர் தட்டு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அப்படிப்பட்ட கல்வியகங்களில் படிக்க வாய்ப்பு பெற்று ஆராய்ச்சிகளை மேற்கொள்வது எளிது. குப்பனும், சுப்பனும் அந்தப்பக்கம் போகவே முடியாது என்பதே நிதர்சனம்

கலை அறிவியல் படிப்புகளுக்கும் நீட் தேர்வு

அரசு கல்வியகங்களில் இளங்கலை அறிவியல் மற்றும் கலைப் படிப்பு சேரவிரும்புபவர்கள் தேசிய அளவிலான தர நிர்ணய அமைப்பு நடத்தும் நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்தால்தான் சேரமுடியும் என்ற சமூக நீதிக்கு எதிரான சதித்திட்டம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன் வரைவு இட ஒதுக்கீடு பற்றி மூச்சு கூடவிடவில்லை. ஆனால் இந்த நுழைவுத் தேர்வு எப்படி எழுத இயலும். யார் எழுத இயலும்? நீட் தேர்வுக்காகப் போராடியவர்கள் இந்த நீட்டுக்காகவும் தயாராகவேண்டும். எத்தனை உயிர்களை இந்தத் தேர்வு பலி கேட்கப் போகிறதோ தெரியவில்லை.

பொதுவாக அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் இளங்கலைப் படிப்புகள் படிக்க வருபவர்கள் பெரும்பாலானோர் பொருளாதரரீதியாக மிகவும் பின்தங்கியவர்களாகவும், குடும்பத்தில முதன் முறை பட்டம் பயில்பவர்களாகவும்தான் இருக்கிறார்கள். இவர்கள் நுழைவுத் தேர்வு எழுதியெல்லாம் வருவது மிக மிகக் கடினம். ஆகவே உயர்கல்வியை விட்டு விலகிப் போவது மட்டுமல்ல, தொழிற்கல்வி என்ற பெயரில் குலக் கல்வியைக் கற்க விரட்டப்படுவார்கள்.
ஒருபுறம் அரசுக் கல்லூரிகளில் சேர்வதற்கு தர நிர்ணயத் தேர்வு, மறுபுறம் தனியார் கல்லூரிகளில் அவர்கள் விருப்பப்படி விதிமுறைகளை உருவாக்கி மாணவர் சேர்க்கையை நடத்துவது . அதாவது பணம் உள்ளவர் எந்த கட்டுப்பாடுமின்றி தகுதியும் இன்றி சேர்ப்பது என்பது நல்ல தமிழில் சொல்வதென்றால் “அயோக்கியத்தனம்” எனலாம்.

ஆசிரியர் ,-மாணவர்களுக்கான ஜனநாயகப் பங்கேற்பு பற்றி இந்த அறிக்கை மூச்சு கூடவிடவில்லை. மொத்தத்தில் அரசு உயர் கல்வி வழங்கும் பொறுப்பை மொத்தமாக கைகழுவி தனியாரிடம் அவர்களுக்குரிய முழு சுதந்திரத்துடன் தாரை வார்க்கும் சதித் திட்டமே புதிய கல்விக் கொள்கையாகும்.

வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களுக்கான வணிக அனுமதி

பல ஆண்டுகளுக்கு முன்னரே காட்ஸ் (GATS) ஒப்பந்தத்தின்படி, கல்வி கடைச்சரக்காகி விட்டது. கல்வித்துறையில் அந்நியநேரடி முதலீடு எப்போதோ அனுமதித்தாகி விட்டது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இங்கு உள்ள நிறுவனங்களோடு கூட்டாக இணைந்து கல்வி நிறுவனங்களை நடத்தலாம். ஆனால் நம் நாட்டில், AICTE மற்றும் யு.ஜி.சி யின் அனுமதி இன்றி எந்தக் கல்வி நிறுவனமும் நடத்த முடியாது. அவை அனுமதிக்கவில்லை. எனவே குறுக்கு வழியாக, கல்வியை கம்பெனி சட்டத்தின்கீழ் கொண்டு வந்து யு.ஜி.சி அனுமதியின்றி செயல்பட்டு, கல்வியை வணிகமயமாக்க அரசு முயற்சி செய்தது. அதுவும் பலிக்கவில்லை. எனவே புதியக் கல்விக் கொள்கை மூலம் தங்கள் தாராளமயத் திட்டங்களுக்கான தடைகளைத் தகர்த்தெறிய திட்டமிட்டுள்ளது அரசு. அப்படி நடந்தால், சமூகநீதி அங்கு சாத்தியமே இல்லை. இன்றைக்கு காலத்துக்கு ஏற்ற வகையில் புதிய படிப்புகள் எதுவும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படுவதில்லை. புதிய தளங்களில், தொழில்நுட்ப படிப்புகளை படிக்க விரும்புபவர்களை மேலைநாட்டுப் பல்கலைக் கழகங்கள் ஈர்க்கின்றன. இந்தியாவில் எந்தக் கல்வி நிறுவனமும் மேலை நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, பட்டப் படிப்புகளை வழங்கலாம். இங்கு இரண்டாண்டும், வெளிநாட்டில் ஒரு ஆண்டும் படிக்கலாம் என்பதே திட்டம். இது ஏற்கனவே சில தொழில் படிப்புக் கல்லூரிகளில் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் சரியான வருமானம் உள்ளதாம். வெளிநாட்டுக் கல்வி மோகத்தில் இருக்கும் வசதி படைத்தவர்கள் இதில் சேருவதற்கான பெரிய சந்தை இருக்கின்றது.

இதில் முரண்பாடு என்னவென்றால் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுக்கு கதவைத் திறந்துவிடும் இந்த முன் வரைவு ‘இந்தியாவில் படி'(Study in India)என்ற வெற்று முழக்கத்தையும் அரசியல் லாபத்திற்காக வைக்கின்றது. வெளிநாட்டு மாணவர்களைக் கவரும் இந்தியப் படிப்பாக யோகா, ஆயுர்வேதம் போன்ற படிப்புகளை வழங்குவார்களாம். வெளி நாட்டு மாணவர்களைக் கவரும் விளம்பர யுக்திகளையும் கையாளப்போவதாக இந்த வரைவு கூறுகிறது. தரமான கல்வி, பயனுள்ள கல்வி எங்கு கிடைக்கிறதோ அங்கு மாணவர்கள் போக, வரக்கூடும். அதற்கான பிராண்டிங் எனப்படும் விளம்பர யுக்திகள் மேற்கொள்வது என்பது நாம் காட்ஸ் ஒப்பந்தத்திற்கு எவ்வளவு பணிவான அடிமையாக ஆகியிருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது.

1996 முதல் 2018 வரை தனியார் கல்வி நிறுவனங்கள் ஆண்டுக்கு 10% வளர்ச்சி அடைந்துள்ளன. ஆனால் அரசுக் கல்லூரிகள் 1.5 சதவிகிதம்தான் உருவாகியிருக்கின்றன. மனிதவள மேம்பாட்டுத்துறையின் ஒரு அறிக்கையின்படி 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் என்று தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் பயில்கிறார்கள் என்று குறிப்பிடுகிறது

சமூக நீதியின் மரணம்

இந்தியக் கல்விகுறித்த பிரச்சினைகளில் முதன்மையானது கல்வி கிடைப்பதில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் ஆகும். பழங்குடியினரும் தாழ்த்தப்பட்ட மக்களும் இன்றளவிலும் மிகக் குறைவான அளவே உயர் கல்வி பெறுவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. எஸ்.சி.எஸ்.டி. பிரிவினரில் இருந்து மொத்தமாக 17 சதவீதத்தினர்தான் உயர்கல்வி பெறுகிறார்கள். அதிலும் பழங்குடி மக்கள் 7 சதவிகிதம்தான் உயர்கல்வி பயில்கிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கின்றது.
இந்த நிலையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு உயர்கல்வியை எப்படி கொண்டு சேர்ப்பது என்பது பற்றி இந்த முன்வரைவு மழுப்புகின்றது. மாறாக, தனியார் நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்த கல்வி செயல்பாடுகளையும், அதற்குரிய அதிகாரங்களையும் தாரை வார்ப்பது என்பது அம்மக்களுக்கு இழக்கக்கூடிய மிகப்பெரிய துரோகமாகும்.

ஆரய்ச்சியும் அரசியலும்

தேசிய ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கப்பட்டு அதன் மூலமாக ஆராய்ச்சிக்குரிய நிதி உதவி வழங்கப்படும்.
தகுதியின் அடிப்படையிலும், மேற்கொள்ளும் ஆய்வின் முக்கியத்துவம் கருதியும் இந்த நிதி உதவி ஆசிரியர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் வழங்கப்படும்.

இம்மாதிரி மையப்படுத்தப்பட்ட அதிகார அமைப்புகளால் ஆராய்ச்சிகள் வளர வாய்ப்பே இல்லை. அரசியல்தான் வளரும். அரசு விருப்பப்படும் ஆராய்ச்சிகள்தான் அனுமதிக்கப்படும். வட்டார அளவிலே நிதி வழங்கப்பட்டு ஆங்காங்கு உள்ள கல்வியாளர்கள் ஆரய்ச்சிக்கான தேவை மற்றும் ஆய்வு முறைகள் பற்றிய தர நிர்ணயம் ஆகியவற்றைக் கணித்து, ஆய்வு நிதிகளை வழங்குவது ஜனநாயகப் பூர்வமானதாகும்.

ராஷ்ட்ரீய ஷிக்சா ஆயோக் எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக அகில இந்திய அளவிலே ராஷ்ட்ரீய ஷிக்சா ஆயோக் எனும் தேசியக் கல்வி ஆணையம் நிறுவப்படும். இதுதான் உச்சமட்ட அதிகாரம் கொண்ட அமைப்பாகும். இதன் தலைவராக பிரதம மந்திரி இருப்பார். துணைத் தலைவராக மத்திய உயர் கல்வித்துறை அமைச்சர் இருப்பார். மனிதவள மேம்பாட்டுத்துறை மத்திய கல்வித் துறை என பெயர் மாற்றம் செய்யப்படும். இந்த தேசியக் கல்வி ஆணையத்தில் 30–40 உறுப்பினர்கள் இருப்பார்கள். அதில் பெருவாரியாக அமைச்சர்களும், அதிகாரிகளும் இருப்பார்கள். அரசால் அடையாளம் காணப்படும் கல்வியாளர்களும் இருப்பார்கள்.
தேசியக் கல்வி ஆணையம் கல்வித் திட்டங்கள் பற்றியும், கல்வி வளர்ச்சி குறித்தும், செயல்பாடுகள் பற்றியும், கல்வியில் செய்யப்படவேண்டிய மாற்றங்கள் குறித்தும் முடிவு எடுக்கும் உரிமை பெற்றது. அதாவது நீங்கள் என்னதான் கல்வியில் மாற்றம், முன்னேற்றம் கொண்டுவந்தாலும், அதை மோடிஜிக்கும் அவர் நண்பர்களுக்கும் பிடிக்கவில்லை எனில் அவற்றை நிராகரிக்கும் உரிமை உண்டு. அதே போல ஓரிரவில் பணமதிப்பீட்டிழப்பு செய்தது போல அவர் விரும்பும் கல்வித் திட்டத்தை அமல்படுத்தவும் முடியும். கல்வியாளர்கள் வாய் பொத்தி கட்டளையை நிறைவேற்ற வேண்டியதுதான். அப்படி செய்வதற்காக ஏற்கனவெ கல்வி அதிகார அமைப்புகளில் ஆட்கள் புகுத்தப்பட்டு இருப்பதும் அனைவரும் அறிந்ததே.

இதேபோல மாநிலங்கள் அளவிலும் மாநிலக் கல்வி ஆணையத்தை மாநிலங்கள் அமைத்துக் கொள்ளலாம். தமிழகத்தில் அப்படி அமைக்கப்பட்டால் அதற்கு எடப்பாடி அவர்களே தலைவராக இருப்பார். செல்லூர் ராஜு முக்கிய உறுப்பினராகவும் இருக்க வாய்ப்புக்கள் ஏராளம்.
அணுகுண்டு

2030க்குப் பிறகு படிப்படியாக உயர்கல்வி நிறுவனங்களை மூடிவிடுவார்களாம். பிறகு இருக்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில்தான் மாணவர்கள் ஆயிரக்கணக்கில் அடைபட்டுப் பயிலவேண்டுமாம். அது ஏன் என்று புரியவில்லை. பிறகு யாரும் படிக்க வரமாட்டார்களா, இல்லை மக்கள் தொகை இத்தோடு நின்றுவிடுமா, இல்லை உலகம் அழியப்போகிறதா என்றெல்லாம் யோசிக்க வைக்கின்றனர்.
தேவை ஜனநாயகக் கல்வி

பண்பாட்டு பன்மைத்தன்மை கொண்ட இந்திய சமூகத்தில் அறிவார்ந்த நீதியின் அடிப்படையிலான விழுமியங்களையும், சகோதரத்துவத்தையும் அறம் சார்ந்த வாழ்வியல் கூறுகளையும் உயர் கல்வி வழங்க வேண்டும் என்பதும், மதவெறி, மூடநம்பிக்கை மற்றும் இனவெறி, சாதி வெறி போன்றவற்றை அறவே ஒழிக்க கூடிய கல்வித் திட்டங்கள் நாட்டின் தேவையாக இருக்கின்றன என்பதும் குறித்தும், அறிவியல் உலகில் இந்தியா முன்னேற்றமடைய எத்தகைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவேண்டும், அதற்கு அரசின் ஆதரவு எத்தகையது என்பன பற்றியெல்லாம் கஸ்தூரிரங்கன் கமிட்டி எந்த அக்கறையும் கொள்ளாதது மிகவும் வருத்தமான விஷயம் ஆகும்.

பெண் கல்வி குறித்தும் எதுவும் சொல்லப்படாதது அவர்களுக்குப் பெண்கள்மீது எவ்வளவு அக்கறை என்பதைக் காட்டுகிறது.

கல்வியை முழுக்க முழுக்க வணிகமாக்குவது என்பது நாட்டிற்கு எவ்வளவு பெரிய சீரழிவை உண்டாக்கும் என்பதைக் கொஞ்சம் கூட கவலைப்படாத ஒரு கூட்டம் பாடுபட்டு சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் மிகவும் கஷ்டப்பட்டு எழுப்பி வரும் உயர்கல்வி எனும் மாளிகையைத் தகர்க்கப்போகிறது. அறிவுஜீவிகளும், தீவிர நுகர்வோர் பண்பாட்டில் மூழ்கிக் கிடக்கும் பொதுமக்களும் அமைதி காப்பது என்பது அவர்களைத் தேச விரோதிகளாக்கும்.

அனைவருக்குமான ஜனநாயகபூர்வமான, மதச்சார்பற்ற – அறிவியல் போக்கு கொண்ட உயர்கல்வியை அரசே தரமாக அனைவருக்கும் வழங்க வேண்டும். அதை வலியுறுத்தும் தொடர் இயக்கங்களில் ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டும். இது ஜனநாயகத்தைக் காக்கும் போர் ஆகும். கல்வி என்பது பணம் சம்பாதிக்க மட்டும் இல்லை. அது உயர்வான சமுதாயத்தை உருவாக்கும் பண்பாட்டுப் பாதை என்பதையும் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

(கட்டுரையாளர்: மாநில அமைப்பாளர்,  தமிழ்நாடு உயர்கல்விப் பாதுகாப்பு இயக்கம்)