
இந்த கவிதை
அடுத்த தலைமுறையில்
நிற்காது என்றான்
அந்த கவிஞன்.
அடுத்த தலைமுறையில்
கவிஞர்களுக்கு பஞ்சம் வரப்போவதாய்
உனக்கு யார் சொன்னது?
0
அணில் தூங்கும் இடம் பற்றி
கவலைப்பட ஒரு கவிஞன் இருந்தான்.
அவன் தூங்கும் இடம் பற்றி
கவலைப்பட இங்கு யாருமில்லை.
o
“கவிஞர்கள் பெரும்பாலும்
இளவயதிலேயே இறந்து விடுவது
ஏன்?” என்றாள் அவள்
“இப்படி கேள்வி கேட்பதால்தான்”.
o
மரத்திலிருந்து உதிரும் பூக்களை
கணக்கெடுக்க வேண்டியிருக்கிறது
குழந்தையின் விளையாட்டுகளை
கவனிக்க வேண்டியிருக்கிறது
சூழ்நிலையின் அபத்தங்களுக்கு
காத்திருக்க வேண்டியிருக்கிறது
துரோகத்தின் கணங்களை
நினைவில் வைத்திருக்க வேண்டும்
சொந்த விஷயங்களை
அவர்களுக்கு விளக்கமாய் சொல்ல வேண்டும்.
கவிஞனாய் இருப்பதற்கு பதில் சும்மா இருக்கலாம்.
o
அந்த கவிஞன் திருடன்.
இவன் கோழை.
இன்னொருத்தன் குடிகாரன்.
மற்றொருவன் ஸ்த்ரீலோலன்.
கவிதாயினி ஒருத்தி காமம் பீடித்தவள்.
இன்னொருத்தி சிகரெட் ரசிப்பவள்.
ஒருத்தி திமிர் பிடித்தவள்.
போதும்.
இனி
அவர்களின் எழுத்துக்களைப்பற்றி பேசுங்கள்.
o