ஒரு சிங்கள நண்பர் கேட்டார் ‘நீங்கள் தான் ஏழு கலியாணம் முடிக்கலாமே பிறகென்ன. வலு கலாதிதான். ’
‘பலர் ஒரு மனைவியோடு படுகின்ற பாட்டைப் பார்த்துமா இப்படி என்னிடம் கேட்கிறாய்‘ என்று அவனோடு சிரித்தேன். உண்மையிலேயே திருக்குர்ஆன் இவ்வாறு தான் சொல்கிறது. அன்னிஸா சூறாவின் மூன்றாவது வசனம் இது.
‘அநாதைப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு, அவர்கள் விஷயத்தில் நீதம் செய்ய முடியாது என அஞ்சினால் மற்றப் பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ நீங்கள் திருமணம் புரிந்து கொள்ளுங்கள். அவர்களுக்கிடையில் நீங்கள் நீதமாக நடக்க முடியாதெனப் பயந்தால், ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்’
முஹமது நபிகளார் பல கோத்திரங்களில் இருந்து பல பெண்களைத் திருமணம் செய்திருந்தார்கள். 9 திருமணங்கள் என்று ஹதீஸ்களில் ஆதாரங்கள் இருக்கின்றன. பிளவுபட்ட கோத்திரத்தார் எல்லோருமே நபிகளாரை நேசித்தார்கள். அதனால் எனது கோத்திரத்துக்கும் நபி சொந்தக்காரர் என்பதனை சொல்வதில் அவர்கள் அரபிகள் பெருமை கொண்டார்கள். அது இஸ்லாமிற்கு உறுதுணையாக இருந்தது.
இரண்டு, மூன்று, நான்கு என்று குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது. தற்பொழுது நான்கு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் முடிக்க இஸ்லாம் அனுமதிக்கிறது.
ஆனால் திருமணம் செய்கின்ற எல்லாப் பெண்களையும் சரி சமமாக நடத்த வேண்டும் என்பது கடுமையான விதி. வெறுமனே ஆர்வத்தில் திருமணம் முடித்து விட்டு பெண்களை சிரமத்தில் போடுவதற்கு இஸ்லாம் மார்க்கத்தில் அனுமதி இல்லை.
சிலர் சொல்வது போல ஏழு திருமணம் அல்ல அனுமதிக்கப்பட்டது. நான்கு மட்டுமே தான்.
திருமணம் முடிக்க சிரமப்படும் ஏழைப் பெண்களுக்காகவும் இதனை ஒரு வழியாக இஸ்லாம் காட்டியிருக்கிறது.
அத்தோடு முறையற்ற பாலியல் குற்றங்களில் இருந்து விலகி இருப்பதற்கான வழி முறையாகவும் இது அமைந்துள்ளது.
மலேசியா, இந்தோனேசியா, அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் இரண்டு, மூன்று திருமணங்கள் பொதுவாகவே சமூக நடைமுறையில் அமையப் பெற்றிருப்பதனை அவதானிக்கலாம். பாகிஸ்தான், பங்களாதேஷிலும் குறைந்த வீதத்தில் இந்த நடைமுறை இருக்கிறது.
ஆனால் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இந்துக்களுடைய பழக்க வழக்கங்கள் அதிகமாக தமிழ் பேசும் முஸ்லிம் மக்களிடையே இருப்பதனால் ஓர் பத்தினி என்ற கொள்கை வலுவாக இருக்கிறது. அதனை முஸ்லிம் பெண்கள் விட்டுக் கொடுக்கத் தயாராகவில்லை.
இலங்கையில் ஒரு முஸ்லிம் அன்பர் நான்கு திருணம் முடித்து வாழ்வதை அறிவேன். மிக மிகக் குறைந்த அளவில் இரண்டு திருமணங்கள் இருக்கின்றன. அதுவும் பெரும் பிடுங்குப்பாட்டுடன் தான் கழிகிறது.
மனைவிக்குத் தெரியாமல் அப்படி திருமணம் முடித்தவர்கள் பின்னர் பெரும் சிரமங்களுக்கு அகப்பட்டு வாழ்வே இழந்திருக்கின்றனர். முதல் மனைவியிடம் அனுமதி பெற வேண்டியதில்லை என்றுதான் இஸ்லாமிய சட்டம் சொல்கிறது. ஆனாலும் இலங்கை, இந்தியாவில் ஒரு சிரமமான சூழ்நிலையே காணப்படுகிறது.
உலகம் முழுவதும் இஸ்லாமிய நிக்காஹ் (திருமண) சட்டங்கள் அரசாங்க விவாக மற்றும் விவாகரத்து சட்டங்களுக்கு புறம்பாகவே இருக்கின்றன. இவை ஆங்கிலேயர்களது சட்ட திட்டங்களோடு இணையாமல் தனியே இருக்கிறது. ஒரு முஸ்லிம் பெண்ணோ,ஆணோ விவாகம் செய்வதற்கும் விவாகரத்து செய்வதற்கும் இஸ்லாமிய (ஷரீஆ) சட்டத்தின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்படுகிறது.
எங்கு தலாக் (விவாகரத்து) இலகுவாக நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருக்கிறதோ அங்கு பல தார மணம் அதிகமாக இருக்கிறது.
பெண்களுடைய மனம் தனது கணவனுக்குப் பின்னால் இன்னொரு பெண் இணைவதை எந்தச் சந்தர்ப்பத்திலும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. ஒருத்திக்கு ஒருவர் என்றுதானே எமது வாழ்வில் பழகியாகி விட்டது.
யாராவது இன்னொரு திருமணம் என்று வீட்டில் சொல்லிப்பாருங்கள். பின்னர் கோபம் ஆறும்வரை படுக்கை தள்ளியே கிடக்கும்.
·
போதை என்பது அடிமையாதல்தான். போதைப் பொருளுக்கு அடிமையாகி எமது கண் முன்னாலேயே எத்தனை பேர் வாழ்வு சீரழிந்துபோய் இருக்கிறார்கள்.
எமது வன்னிக்கிராமங்களில் கள்ளுத் தவறணைகள் பிரபல்யம். மாலை, பகல் என்று கள்ளுத் தவறணைகளில் மக்கள் இருப்பார்கள்.
போதை ஒரு பொழுது போக்குக்காக என்று வெள்ளைக்காரர் சொல்வார்கள். பொதுவாகவே வெள்ளைக்காரர்கள் பியர் தான் அதிகமாக அருந்துவார்கள். அது தாகத்துக்காவும், இருந்து பேசுவதற்காகவும்.
வெள்ளைக்கார நாடுகளில் பியர் PUB புகள் முழத்துக்கொன்று இருக்கும்.
எமது ஊர் கள்ளுக் கொட்டில்களுக்கும் சுகாதாரத்துக்கும் வெகுதூரம்.
ஆனால் PUB புகள் வலு கிளீனாக இருக்கும். நண்பர்கள் சந்திக்கவும் ஆலோசனை செய்யவும் அங்கு பப்கள் நல்ல இடமாக இருக்கின்றன.
இங்கு கள்ளுக் கொட்டிலுக்குப் பக்கத்தால் போனால் கள்ளு மணம் எங்களில் தொற்றிக் கொள்ளும்.
போதை பழகிவிட்டால் விடமுடியாமல் அவதிப்படுகின்ற பலர் இருக்கின்றனர்.
ஹெரோயின், கஞ்சா, பிறவுன் சுகர், பொப்பிபூ, ஹஸீஸ் என்று போதைகளின் பெயர் இப்படியே பாம்பு போல நிண்டு கொண்டே போகும்.
லண்டனில் ஒரு றெஸ்ரூரண்டில் ரொய்லட்டில் நீலக் கலர் லைட் போட்டிருந்தார்கள். கடைப்பையனைக் கூப்பிட்டு ‘ஏன் நீலக்கலர் பல்ப் போட்டிருக்கிறார்கள்‘ என்று கேட்டேன்.
போதை ஊசி போடுபவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த, நரம்பு பார்த்துக் குத்த முடியாமல் இருக்கும் இந்த நீலக்கலர் மென் வெளிச்சத்தில்’ என்று சொன்னார் கடைப்பையன்.
வன்னிப் பகுதியில் களையாகப் பரவியிருக்கும் பாத்தீனியம் செடியின் இலையும் ஒருவகை போதையைத் தருமாம். சுருட்டிக் குடித்தால்; ஆனால் சுவாசப்பை பிய்ந்து போய்விடுமாம் அதன் விஷத்தால். அத்தோடு உடம்பில் கொப்புளங்களும் வந்து மரணத்துக்குக் கொண்டுபோய்விடுமாம்.
தமிழ் நாட்டைச் சேர்ந்த நண்பனொருவன் தனது நண்பியொருவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னான். அவளுக்கு அடிக்கடி பெற்றோலை உறுஞ்ச வேண்டுமாம் மூக்கால். உறுஞ்சி சுவாசத்தை விட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்வாளாம்.
கொலேஜில் மோட்டார் பைக்கோடு யார் போனாலும் மறித்துக் கெஞ்சுவாளாம் ‘பெற்றோல் தாங்கியைத் திற, மூக்கை வைத்து விட்டுவிடுகிறேன்’ என்று. அவளை அந்தப் பழக்கத்தில் இருந்து மாற்றுவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் முடியாமல் போய்விட்டதாம். பின்னர் அவன் லண்டன் வந்துவிட்டான். என்ன ஆனாளோ தெரியாதாம்.
முதல், நான் பாமஸியில் வேலை செய்த பொழுது அந்தரத்தில் சிலர் நடந்து வருவார்கள்.
அவர்கள் ஒரு ரூபா இரண்டு ரூபாவுக்கு டைசிபாம் ரபிளட் கேட்பார்கள். கவுண்டரில் தலைகவிழ்ந்து நிற்பார்கள். சொல்லுளறுவார்கள். எனக்கும் என்ன விசயம் என்று தெரியாது. பிறகுதான் கடை பாமஸிஸ்ட் சொன்னார் ‘உப்பிடி வாறவைக்கு எல்லாம் டைசிபாம் கொடுக்கக்கூடாது. அவை போதைக்காக பாவிக்கினம்‘ என்று.
காதல், காமம், பக்தி, அரசியல் எல்லாமே ஒருவகையில் போதைதான்.