
எண்களை இணைக்க முயல்வதில்
ஆரம்பிக்கிறது
காயத்ரியின் விளையாட்டு
ஒன்றை இரண்டோடு
இணைக்கும் போது
அவளுக்கு எதுவும் புலப்படவில்லை
மூன்றும் நான்கும்
சேர்கையில் பின்னங்கால்கள்
ஓரளவு தெரிந்தது
நத்தையின் நிதானத்தோடு
எண்களைத் தேடி
ஊர்ந்தது அவளது எழுதுகோல்
நிகழ்ந்துவிடக்கூடிய சாத்தியங்களின்
அருகாமையில் குழப்பமுற்று
சற்றே தணிகிறாள்
கடைசியில் முழுமையாக
தெரிந்த படுத்திருந்த
புலியைப் பார்த்து
தானே வரைந்த
திருப்தியோடு மூடுகிறாள்
படக்கதை புத்தகத்தை.
aganazhigai@gmail.com