ஓ. . .செகந்திராபாத் 21
நக்சலைட் போராளிகள் பற்றின செய்திகள் வானிலை நிகழ்ச்சி போல எப்போதும் ஆந்திர தினசரிகளில் இடம் பெறும். சரணடைதல், பேச்சுவார்த்தை, குண்டு வெடிப்பு, போலீஸ் கொலை என்ற ஏதாவது வகையில் அடங்கிவரும். சமீபத்தில் ஆன்கரோனிபள்ளி கிராமத்தில் அப்படியொரு நிகழ்ச்சி நடந்ததாகவும், உளவு சொன்னதாகவும் ஜனார்த்தனன் என்ற பலசரக்குக் கடைக்காரரை நக்சலைட்டுகள் சுட்டுக் கொன்ற சம்பவம் அது. அதே நாளில் மெகபூப் நகர் மாவட்டத்தில் வாடவெரலப்பள்ளி கிராமத்தில் அரசுப் பேருந்தை நக்சலைட்டுகள் நிறுத்தி, பயணிகளை இறங்கச் சொல்லிவிட்டுப் பேருந்தைத் தீயிட்டுக் கொளுத்தினர். கோககோலா கம்பெனிக்கு சொந்தமான இரண்டு வாகனங்களைத் தீயிட்டுக் கொளுத்தினர். இவை ஏறத்தாழ ஒரே நாளின் நிகழ்ச்சிகள்.
தங்கள் தோழர்கள் காவல்துறையினரால் கொல்லப்படும்போதோ அல்லது சித்திரவதைப்படுத்தப்படும்போதோ பின்னோ அதற்கு எதிர்வினையாக நக்சலைட்டுகள் இவ்வகை நடவடிக்கைகளில் ஈடுபடுவர். காவல்துறை அவர்கள் மீது நிகழ்த்தும் வன்முறைக்கு எதிராக ஏதாவது நடந்து கொண்டேயிருக்கும். காவல்துறை எவ்விதத் தொந்தரவும் செய்யாதபோது அவர்களும் எதுவும் எதிர்வினையாற்றுவதில்லை.
மக்கள் யுத்தக்குழுவைச் சார்ந்த கத்தார் செகந்திராபாத்தில் சர்வசாதாரணமாக நடமாடிக் கொண்டிருப்பார். நக்சலைட்டுகளைத் தேடியும் துரத்தியும் கொல்லும் காவல்துறை கத்தாரை எந்த வகையிலும் அதிகமாய்த் துன்புறுத்தியதில்லை. எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு நகரை வலம் வருபவராக கத்தார் தென்படுவார். ‘அவர்மேல போலீஸ் கை வெச்சா முதல் அமைச்சருக்கோ, முக்கிய அரசியல்வாதிகள் உயிருக்கோ ஆபத்தாய்ப் போய் முடியும், அதனால்தான்’ என்று வழக்கமாய் சொல்லப்படுவதுண்டு.
மக்கள் யுத்தக் குழுவின் மீதான தடை தற்காலிகமாய் விலக்கப்படும்போதோ, பேச்சுவார்த்தைகளுக்கு அழைக்கப்படுகிறபோதோ அல்லது ஆந்திர அரசு நக்சலைட்டுகளின் விஷயத்தில் அஜாக்கிரதையாக இருக்கிறபோதோ ஹைதராபாத்தில் கத்தார் கூட்டம் கூட்டப்படும். பெரும்பாலும் நிஜாம் கல்லூரி மைதானத்தில் லட்சக்கணக்கான மக்களால் நிரம்பி வழியும். கத்தாரின் பாடல்களும், அவர் குழுவின் நடனங்களும் இரவு முழுக்க நடக்கும். பிறகு பல வருடங்களுக்கு அவ்வகைக் கூட்டம் இருக்காது. மறைந்துவிடுவார்.
வெங்கிட்டாபுரம் பகுதியில் கத்தார் குடியிருந்தார். செகந்திராபாத்தைக் கடந்துதான் வெங்கிட்டாபுரம் செல்ல வேண்டியிருக்கும். வெங்கிட்டாபுரத்தில் தமிழர்கள் அதிகம் வசித்து வந்தனர். செகந்திராபாத் புகைவண்டி நிலையத்தை ஒட்டிய ஏதாவது பகுதியில் கத்தார் அவ்வப்போது தென்படுவார். நகர்ந்து கொண்டிருக்கும் ஜனத்திரள் அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்க அவர் நடந்தோ, பேருந்து மூலமோ நகர்ந்து கொண்டிருப்பார். செகந்திராபாத் புகைவண்டி நிலைய பிள்ளையார் கோவில் எதிர் நடைபாதை புத்தகக்கடையில் சிலமுறை பார்த்திருக்கிறேன்.
ஒருமுறை நடைபாதையில் போடப்பட்டிருந்த புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது சிலிக்குயில் பொதிய வெற்பன் வெளியிட்டிருந்த ஒரு நூலின் அட்டைப்படத்தில் கத்தாரின் ஓவியத்தை சந்தானம் வரைந்திருந்தார். கறுப்பு சிவப்பு வெள்ளை கலந்த போர்வையுடன் ஆடல் நிகழ்ச்சிகளில் காணப்படும் கத்தாரின் தோற்றம் அதிலிருந்தது. அவரிடமும் சொன்னேன். அவர் தமிழ்நாட்டில் மக்கள் யுத்தக் குழுவைச்சார்ந்த சில தோழர்களின் பெயர்களைச் சொன்னார். அந்தச் சமயத்தில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கத்தாரின் கூட்டங்கள் நடைபெற்றிருந்தன. கத்தார் குறிப்பிட்ட தோழர்கள் பற்றி எனக்குத் தெரிந்திருக்கவில்லை. பொதியவெற்பன் போட்டிருந்த புத்தக அட்டையை அவரிடம் காட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தது. புத்தகத்தைத் தேடி எடுத்து வந்து பார்த்தபோது கத்தார் மறைந்து விட்டிருந்தார்.
கத்தாரின் நடமாட்டம் அன்றைக்குப் போலத்தான் எப்போதும் ஆச்சரியமும் திகைப்பும் ஏற்படுத்தக்கூடியது. செகந்திராபாத் புகைவண்டி நிலையப் பேருந்து நிறுத்தத்தில் ஒருமுறை ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு நக்சலைட்டுகளின் இரு குழுக்களுக்கு மத்தியிலானது. எதேச்சையாக அந்தப்பக்கம் போனபோது, சிவப்பு சட்டை போட்ட ஒருவரை ரத்த வெள்ளத்தில் பார்க்க நேர்ந்தது.
கத்தாரைப்போல கண்ணபிரான் பியூசிஎல், கவிஞர் வரவரராவ், ராதாகிருஷ்ணன் போன்றோரின் நடமாட்டத்தையும் நகரில் சுலபமாகக் காணமுடியும்.
தெலுங்குத் திரைப்பட இயக்குனர் பி.நரசிங்கராவ் நடத்திய ஓவியக் கண்காட்சிகள், புகைப்படக் கண்காட்சிகளில் கத்தார் தென்பட்டிருக்கிறார். நரசிங்கராவின் நண்பர் என்பதால் அவரின் ரங்குலகலா என்ற படத்தின் பாடல காட்சியொன்றில் நடித்திருக்கிறார். அவர் புரட்சிகரப் படங்களில் தோன்ற வேண்டும் என்பது அவ்வகைப் படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களின் விருப்பமாக இருந்திருக்கிறது. மாதளரங்கராவ் பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்தவர். பல படங்களில் நடித்திருக்கிறார். நாராயணராவின் திரைக்கதை வசனத்தில் நக்சலைட்டுகள், நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தில் உள்ள பகுதி மக்களின் வாழ்க்கையை முன் வைத்து பல திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. எர்ரமல்லி போன்ற தெலுங்குப்படங்களும் தமிழில் வெளிவந்திருக்கின்றன.
கத்தாரைப் பற்றி நினைக்கிறபோதெல்லாம் அவர் உடம்பில் போர்த்தியிருக்கும் கறுப்பு, வெளுப்பு, சிவப்பு கலந்த போர்வையும் கைத்தடியும் ஞாபகம் வரும். கர்ர, கொங்கலி (தடி, போர்வை). நகரில் முன்தயாரிப்புகளோடு நிகழ்த்தப்படும் நிகழ்ச்சிகளில் லட்சமாய் மக்கள் கூடுவர். நினைத்துப் பார்க்க இயலாத ஜனத்திரள் இருக்கும்.
கத்தார் ஒருமுறை தமிழ்ப்புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தார். சொற்பமே கூட்டமிருந்தது. பி.வி.நரசிங்கராவ் அன்றைய தினத்து தமிழ்ப் புத்தகக் கண்காட்சி நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவருடன் நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, வந்த கத்தார் கட்டாயப்படுத்தியபோது பாடல்களைப் பாடினார். அவர் கையில் இருக்கும் கர்ர (தடி), காலில் கட்டியிருக்கும் சலங்கையும் இல்லை. ஆனால் பாடலின் வீச்சும் வேகமும் தீவிரமாகவேயிருந்தன.
லட்சக்கணக்கான மக்கள் திரளில் பாடல்களைப் பாடியவருக்கு இருபது பேர்கொண்ட குழு மத்தியில் பாடுவது சங்கடமளித்திருக்கலாம். ஆனால் தமிழர்கள் தங்கள் நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு அப்பாடல்கள் மூலம் பெருமைப்படுத்தினார் கத்தார். மெகபூப் கல்லூரியின் அறைகளை நிறைத்துக்கொண்டு மகாத்மா காந்தி வீதி மக்களையும் அவர் குரல் எட்டியது.
தலைமறைவு காலங்களிலும், இயக்கப் பணிகளின்போதும் இவ்வகையில் சிறிய குழுக்களுடன் அவர் இருந்து வகுப்பெடுத்திருக்கலாம். அவ்வகை வகுப்பு போலத்தான் அச்சிறு குழு இருந்தது. ஆனால் அக்குழுவில் இருந்தவர்கள் யாரையும் இப்போதைக்கு என் நினைவில் இல்லை. அது கத்தாரின் குரலுக்கு கௌரமானதாகத் தோன்றவில்லை இன்றைக்கும்.