
கடவுளைக் கண்ட
பின் இரவின் முதற் பொழுதில்
கண் எரிந்தது கை எரிந்தது
உடம்பெங்கும் எரிந்தது
எல்லாம் எறிதலின் ஏமாற்றம்
தந்த எரிச்சலில் கடவுளைக் கொன்றேன்.
என்னைக் கண்ட ஒருவனுக்கும்
எல்லாம் எரியத் தொடங்க
அவன் என்னைக் கொல்ல வந்தான்
கடவுளைக் கொல்லப் போவதை சொல்லியபடி
o
கொத்தப் பட்ட பாம்புகளில் தப்பி
எல்லா ஏணிகளும்
பரமபதத்திற்குக் கொண்டு செல்லும்
கோபம் கொண்டு
98 ஆவது கட்டத்திலிருக்கும்
பாம்பு ஒன்று கடவுளைக் கொன்றுவிட
ஏணிகளும் பாம்புகளும் வேறு வழியின்றி
கீழ் நோக்கியே அலைந்தன.
o
"அடுத்த வேலை?"
"கடவுளைக் கொல்ல வேண்டும்!"
"ஏன்?"
"முந்தைய கடவுளைக் கொன்றுதான் இவன் கடவுளானான்!"
சொல்லிவிட்டு
நான் கத்தியைத் தீட்டிக் கொண்டிருக்கிறேன்
ஏன் கைத்தடி ஒன்று வேறு
கத்தியைத் தேடிக் கொண்டிருக்கிறது