ஆர் கே நாராயண் எழும் நேரத்தில் எழுந்து வேலைக்குப் போய்விட்டு பிற்பகல் தூங்காமல் அரட்டை அடித்துவிட்டு படம் பார்க்கலாம் என்று புறப்பட்டபோது நானே கடவுள் மாதிரிதான் இருந்தேன்!
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் படித்தபோது காய்ச்சலே வந்துவிட்டதாக பாஸ்கரன் ஒருமுறை சொன்னார். எனக்கு வியப்பாக இருந்தது. தலைமுறை மாற்றம் ஏற்படுத்தும் வியப்பு அது. கடவுளும் கந்தசாமியும் பேசிக் கொள்வதை ஒரு வேடிக்கையாகத்தான் நான் படித்தேன். அதைவிட அழுத்தமாகவே ஜெயகாந்தன் சொல்லிவிட்டதை நான் படித்துவிட்டது ஒரு காரணம். என் தந்தையும் கடவுளை அவ்வளவு சீரியசாக எடுத்துக் கொண்டதில்லை என்பது இன்னொரு காரணம்.
`நான் கடவுள்` படத்தில் கடவுள் பற்றி ஜெயமோகன் சொல்ல விரும்புவதை எல்லாம் கிட்டத்தட்ட சொல்லி முடித்துவிட்டார். முதல்முறை என்றால் சிலருக்குக் காய்ச்சல் வரலாம்.
படம் முடிந்து வரும்போது ஒருவர் வருத்தமாக கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று கேட்டுக்கொண்டே வந்தார். அவரோடு வந்தவர்கள் யாரும் பதில் பேசவில்லை. ஒருவிதமான மயான அமைதி நிலவியது.
திரைப்படத்துக்கும் இதுபோன்ற பழைய திரையரங்கத்துக்கும் ஒரு பெரிய ஒற்றுமை உண்டு. போகும்போது மின்தூக்கியில் சொகுசாகப் போகலாம். வரும்போது ஐந்து மாடியும் படிக்கட்டுகளில் இறங்கிதான் வர வேண்டும்!
தமிழர்கள் மிகவும் இடித்துக்கொண்டு நடக்கவே விரும்புவார்கள் என்பதால் படிக்கட்டுகளில் வரும்போது எதுவும் பேச யாருக்கும் தோன்றாது.
திரையரங்கில் தமிழ்ப்படம் பார்த்து நெடுநாள் ஆகிறது. அதுவும் இதுபோன்ற முதல்காட்சி மிகவும் அபூர்வமாகத்தான் நடந்திருக்கிறது. நல்ல கூட்டம்.
இளையராஜா பெயரைப் பார்த்ததும் கைதட்டுகிறார்கள். பாலா பெயருக்கு ஒரு பெரிய கரவொலி. ஆர்யாவைக் காட்டியதும் விசில் பறக்கிறது. இதெல்லாம் எனக்குப் புதிது. தொடர்ந்து வந்து திரையரங்கத்தில் படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது!
திரையரங்கில் தமிழ்ப் படம் பார்ப்பதில் உள்ள இன்னொரு மகிழ்ச்சி அடுத்து ஆர்யா என்ன செய்யப் போகிறார் என்பதை முன்கூட்டியே சொல்லிவிடுவார்கள். சொல்லிக்கொண்டே பார்ப்பார்கள். ஒரு ஜோக் அடித்ததும் மூன்று நிமிடம் இடைவெளி விட்டுத்தான் அடுத்த ஜோக் சொல்ல வேண்டும். ஒரு ஜோக் வந்ததும் அதற்கு சிரித்து இன்னொரு முறை அதைச் சொல்லி கலகலத்த பிறகுதான் அடுத்த காட்சிக்குப் போவார்கள்!
பெயர் தெரியாத அந்தச் சின்னப் பையன்தான் ரசிகர்களைப் பெருமளவு காப்பாற்றிக் கரைசேர்க்கிறார். `இவன் என்னாடா இப்படிப் பேசறான்?` என்று இதற்குமுன் கவுண்டமணிக்குச் சொன்னார்கள். இப்போது இவருக்குச் சொல்கிறார்கள்.
எல்லாருமே படத்தைப் பார்க்க பயப்படுகிறார்கள். எல்லாம் நகைச்சுவைக் காட்சிகளாகவே படம் நகர்ந்துவிடக் கூடாதா என்ற ஏக்கம் தெரிகிறது! ஒவ்வொரு முறையும் பிச்சைக்காரர்களை வைத்திருக்கும் சுரங்க வீட்டுக்கு கேமரா வரும்போதெல்லாம் எல்லாருமே இருக்கையைவிட்டு நகர்ந்து வெளியே போய்விட எத்தனிப்பதை உணர முடிகிறது. படம் போகப் போக அந்தச் சலனம் அதிகரித்துக் கொண்டே போகிறது.
ஏற்கனவே எல்லாரும் பிதாமகன் பார்த்துவிட்டார்கள். எனவே கதை எங்கே போய் எப்படி முடியும் என்பதை அறியாதவர் யாரும் இல்லை. அதிர்வு என்பது எதிர்பாராததைத் தருவதே. பாலாவிடம் ஒருவிதமான எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிட்டது. அதையேதான் அவரும் தருகிறார். அதுதான் எனக்கு வியப்பாக இருந்தது.
ஏழாம் உலகம் ஜெயமோகன் எழுதிய ஆபத்தான ஒரு நாவல்! நல்லவேளையாக அந்த நாவலில் இருந்த உக்கிரம் இந்தப் படத்தில் இல்லை.

யாருக்குமே பல காட்சிகள் இல்லாதது போன்ற உணர்வு ஏற்படத்தான் செய்யும். நண்பர் மூர்த்தி ஒருவேளை சில முக்கியமான காட்சிகளை வெட்டிவிட்டார்களோ என்று கவலைப்பட்டுக் கொண்டே வந்தார்.
ஜெயமோகனை நிறையப் பேர் சாலையில் மடக்கி `நான் கடவுள்` படத்தைப் பற்றிக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். இனிமேல் அவர்கள் நிச்சயம் அவரைத் தடுத்து `நல்லா இருக்கீங்களா சார்?` என்று கேட்காமல் விட மாட்டார்கள்.
பாலா படத்தில் உள்ள அந்த அதீதமான வன்முறையைக் கொஞ்சம் விட்டுவிடுவோம்.
அது மட்டும் பாலா அல்ல.
யாரையும் பெரிய நடிகராக்கிவிடக் கூடியவர் பாலா. அதுவும் இந்தப் படத்தில் நிறையவே உள்ளது.
பிதாமகனின் தோள்வரை இருப்பதுதான் கடவுளின் ஒரே வருத்தம்.
இந்தப் படத்தை வைத்து பாலாவையும், ஜெயமோகனையும் நிராகரிக்கவும் சிலர் முயலக்கூடும். அதுபோன்ற முயற்சிகள், அந்த முயற்சிகளுக்கே உரிய பலனை அடையத்தான் செய்யும்.
*
இலங்கைப் போர் பற்றி இன்னும் சில வார்த்தைகள் நான் சொல்ல விரும்புகிறேன்.
பிரணாப் முக்கர்ஜி, சிவ்சங்கர் மேனன், ப. சிதம்பரம், அவுட்லுக் பி. ராமன் என்று இந்தியாவில் இருந்து நிறையப் பேர் சொல்வதில் அசாத்தியமான ஒற்றுமை இருப்பதைப் பார்க்கிறேன்.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தோல்வியில் ஒரு குரூரமான மகிழ்ச்சி அவர்களிடம் தெரிகிறது. புலிகளை ஒரு குரூரமான இயக்கம் என்று சொல்லும் எல்லாரிடமும் அவர்கள் சொல்லத்துடிக்கும் அதே குரூரம் மலிந்து கிடப்பதைப் பார்க்க முடிகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கம் தோல்வியுற வேண்டும் ஆனால் ஈழத் தமிழர் தோல்வியுறக் கூடாது என்று நினைப்பவர்கள் இருந்தால் அவர்களை மனிதர்களோடு சேர்த்துக் கொள்ளலாம்.
ஒருவேளை புலிகளின் தோல்வியே ஈழத் தமிழர்களின் தோல்வியாக முடியட்டும் என்று உள்ளூர ஒரு நினைப்பை வைத்துக் கொண்டு புலிகளை ஒழித்தால் நல்லது என்று நினைப்பவர்கள் இருந்தால் அவர்களுக்கு ஏமாற்றமும் விரக்தியும் காத்திருக்கிறது.
அதுபோன்ற எண்ணங்கள் வெற்றிபெறுவதே இல்லை என்பது அவர்களுக்கே தெரிந்திருக்கும்.
புலிகளை நசுக்கிவிட வேண்டும் என்று சொல்பவர்களில் நல்லெண்ணம் கொண்டவர்கள் யாரையும் பார்க்க முடியவில்லை.
இவர்களைவிட பிரபாகரன் நல்லவர்.