கடித இலக்கியம்
லா.ச.ராமாமிருதம் தி 2, ஜெயகிருஷ்ணா அபார்ட்மெண்ட்ஸ்
18, பழைய டவுன்ஷிப் ரோடு,
அம்பத்தூர், சென்னை-600 053.
24-01-2003
அன்புமிக்க தீபன் நடராஜனுக்கு,
என் மனமார்ந்த நல்லாசிகள். உங்களுடைய 18-1-2003 கடிதத்தை படிக்கையில் அல்லது அது என் உள் இறங்குகையில் ஒரு மங்கிய ஒளிப்படலம் என் மேல் படர்ந்து செல்வதை உணர்ந்தேன். விசன படலம். நீங்களும், உங்களுடன் சேர்ந்து நானும் விளிம்பின் தாக்கத்திற்கு உள்ளாகும் விளைவு என்றே தோன்றுகிறது.
வயது ஏற ஏற உடலும் தேயத் தேய முன்போன்ற பெருமிதமும் உற்சாகமும் இப்போது இல்லை. அப்போதைய வயதின் முறுக்கில் மனத்திமிரில் ஏதோ நானே செய்துவிட்டாற்போல் ஒரு பிரமையில் கனவுக்குள் கனவு கொண்டிருக்கிறோம். அப்படித்தான் சிருஷ்டி, கதை, எழுத்து, ஆன்மீகம் என எண்ணத்தின் கிளைகள் பிரிந்து கூடவே உடலின் உபாதைகளும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த குளறுபடியில் நான், தி.ஜா, இன்னும் உங்கள் மனதை பாதித்த யார் யாரோ உங்கள் நெஞ்சத்துள் புகுந்து விட்டதாகச் சொல்கிறீர்கள். நான் இதைப் போலி அடக்கத்தினால் சொல்லவில்லை. எண்பத்திஏழு வயதில் தெரிந்த அனுபவ உண்மையாகக் காண்கிறேன். அதைத்தான் ‘விளிம்பில்’ நீங்கள் காண்கிறீர்கள். இது மட்டுமன்று, அனுபவ உண்மையாக நீங்களும் என் வயது வந்தபின் அதையும் தாண்டி உங்கள் வேளை வந்தபின் (யாருக்கும் அவரவர் வேளை வந்து தானே ஆகவேண்டும்!) உங்களுக்காகவே உங்கள் பக்குவத்துக்கேற்றபடி உங்கள் முறையில் உணருவீர்கள். இது யாரும் விலக்க முடியாத அவரவர் உண்மை.
26-12-2002 அன்று விடிகாலை வென்னீருள்ளில் வழுக்கி வீழ்ந்து இடுப்பு எலும்பும், தொடை எலும்பும் சேருமிடத்தில் முறிந்து கிடக்கை ஆகிவிட்டேன். முழுமையாக இல்லை. முறிந்த இடத்தில் திறந்து இடையில் ஏதோ சிலேட்டு போல் ஒரு பலகை சொருகி மூடி அந்த இடம் படிப்படியாக கூடிக் கொண்டிருக்கிறது. வைத்தியனின் வெற்றி. இப்போதைக்கு வேளை இல்லை. இன்னும் மூன்று மாதங்களில் பழைய நடைவந்துவிடும் என்று உறுதி கூறுகிறான். ததாஸ்து. ஆனாலும் எனக்கு வயது ஆகிவிட்டதே! அதற்காக நான் அழவில்லை. அழுது பயனுமில்லை. சிங்கப்பூரிலிருந்து சேகரும், இங்கு ஸ்ரீகாந்தின் பணி விடையாலும், மற்றும் திவாகரன் (என் மாப்பிள்ளை) எத்தனையோ சொல்லமுடியாத சிற்றுதவியாலும், பேருதவியாலும் என்னை தாங்குகிறார்கள். இப்பவே நான் என்னை நிறுத்தி வைத்தால் மெதுவாக நடக்கிறேன்.
ஆயினும், கனவுகள் காணாமல் இருக்க முடியவில்லை. அது உயிரை தாங்கும் இன்றியமையாத தன்மை ஆகிவிட்டது. அன்றொரு நாள், தென்காசியில் உங்கள் வீட்டில் பின்நிலவில் முன்னிருட்டில் நான் கனவை நூல் நூற்கும் வெறியில் சங்கீதத்தைப் பற்றி விஹாசிக்கையில், என்னை இழந்தேன். என்பேச்சில் நீங்களும் உங்களை இழந்தீர்கள். நினைவூட்டத் தேவையில்லாத அமர நேரம். ஆயினும், நடராஜன் என்ன பயன்! என்ன பயன்! இங்கே இதோ இடுப்பொடிந்து தற்சமயமேனும் செயலிழந்து கிடக்கிறேன். எத்தனையோ வருடங்களுக்கு முந்தைய அந்த கவிதாநேரம் என்னைப் பார்த்து சிரிக்கிறதா, அழுகிறதா அறியேனே! இப்போது தொண்டையை அடைக்கிறது.
நீண்ட வயதை வைத்துக் கொண்டு என்ன செய்வது? என் அழகிய எண்ணங்கள், நாம் பகிர்ந்துக்கொண்ட சௌந்தர்ய நிகழ்வுகள் எல்லாம் இதோ, இன்றோ, என்றோ என் சடலத்துடன் மண்ணோடு மண்ணாய் அல்லது அஸ்தியாய் ஜலத்திலோ கரைந்துவிடப்போகின்றன. இதையாரும் தவிர்க்க முடியாது. பகவான் ராமகிருஷ்ணருக்கு தொண்டையில் புற்றுநோய், பகவான் ரமணரிஷிக்கு முழங்கையில் புற்றுநோய், ஆதிசங்கரருக்கு வயிற்றுக்கோளாறு. ஏசுவை சிலுவையில் அறைந்து விட்டார்கள். காந்தி Ôஹரே ராம்Õ சுட்டுவிட்டான். ஏசு Ôகடவுளே என்னை கைவிட்டுவிட்டாயேÕ இந்த கடைசி வார்த்தைகள்தான் அவர்கள் வாழ்க்கையில் உழன்று, மக்களுக்காக உழைத்துக் கண்ட மிச்சமா! அப்படியும் அவர்கள் தாரக மந்திரமா!
புத்தர் நீண்ட நாள் வாழ்ந்தார். அவருடைய ஒளி எழுபத்திஐந்து மைல்களுக்கு வீசுமாம்.
ராகவேந்திரர் ஜீவசமாதி கண்டார். இதெல்லாம் ஏன்? எதற்கு? என்ன பயன்? பரமாச்சாரியார் முழு நூறு காணமுடியவில்லை. அவர் உயிர் உத்திராயணத்திற்கு காத்திருக்க முடியவில்லை. இந்த கோட்பாடுகள், கடைசியில் மதப் பிரச்சாரங்களாகவே தோன்றுகின்றன. மூன்று மடாதிபதிக.ளும் எனக்கு சால்வை போர்த்தி, ருத்ராட்ச மாலை போட்டு விருதுகள் தந்திருக்கிறார்கள். அப்படி, இப்படி நானும் பரிசுகள், பாராட்டுக்கள், விருதுகள் என்று பத்து, பதினொரு அயிட்டங்கள் எழுத்து மூலம் சம்பாதித்து விட்டேன். முதலில் கண்ட சந்தோஷம் எப்பவோ போய்விட்டது. இடமில்லாமல் எங்கோ பெட்டியில் என் மனைவி அடுக்கி வைத்திருக்கிறாள். எழுத்தில் அமரத்துவத்தில் நம்பிக்கை வைத்திருந்தேன். அது போய்விட்டது. மக்கள் மறதிமிக்கவர்கள். அவர்களுக்கு ஏதேனும் புதிது புதிதாய் நேர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். இப்படித்தானே மூதாதையர்கள், முன்னோர்கள் என்று வம்ச பரம்பரையையே! ஏன் மனித பரம்பரையையே புதைத்து வைத்துக் கொண்டு நாம் கிளைத்துக் கொண்டிருக்கிறோம். எப்பவும் விளிம்பில்தான் நின்று கொண்டிருக்கிறோம். நான் வயது பழுத்த நிலையில் என் விளிம்பைக் குறிக்கிறேன். உங்கள் தாத்தா பெரிய ரசிகமணிதான். ஆனாலும் சர்க்கரை அவரை எங்கே விட்டது? சிறுகச் சிறுக முழுக்க விழுங்கிவிட்டதே! எம்.எஸ். அவர்கள் என்னிலும் சில மாதங்கள் மூத்தவர் என்று நினைக்கிறேன். கணவரின் துணை இழந்து கச்சேரிகளின் வெற்றி துணை இழந்து சர்க்கரையில் மாட்டிக் கொண்டு பச்சைக் குழந்தையாய் தவிக்கிறாள். ஆயிரம் சுகப்பட்டாலும் பிறவியின் தனிமை யாரையும் விடுவதில்லை. இதுதான் நான் கண்டேன். அவரவர் பங்கு நல்லதோ, பொல்லாதோ என்று அவரவர் நினைத்துக் கொண்டிருப்பது யாரையும் விடுவதில்லை. அவரவர் பெயர் நடராஜனானால்லென்ன ராமாமிருதமானாலென்ன. யாவரும் ஒன்றே.
அன்பு
லா.ச.ராமாமிருதம்
28. 1. 03
கடித இலக்கியம்
‘லா.ச.ரா’ - தீப.ந. வுக்கு. . .
லா.ச.ராமாமிருதம் தி 2, ஜெயகிருஷ்ணா அபார்ட்மெண்ட்ஸ்
18, பழைய டவுன்ஷிப் ரோடு,
அம்பத்தூர், சென்னை-600 053.
24-01-2003
அன்புமிக்க தீபன் நடராஜனுக்கு,
என் மனமார்ந்த நல்லாசிகள். உங்களுடைய 18-1-2003 கடிதத்தை படிக்கையில் அல்லது அது என் உள் இறங்குகையில் ஒரு மங்கிய ஒளிப்படலம் என் மேல் படர்ந்து செல்வதை உணர்ந்தேன். விசன படலம். நீங்களும், உங்களுடன் சேர்ந்து நானும் விளிம்பின் தாக்கத்திற்கு உள்ளாகும் விளைவு என்றே தோன்றுகிறது.
வயது ஏற ஏற உடலும் தேயத் தேய முன்போன்ற பெருமிதமும் உற்சாகமும் இப்போது இல்லை. அப்போதைய வயதின் முறுக்கில் மனத்திமிரில் ஏதோ நானே செய்துவிட்டாற்போல் ஒரு பிரமையில் கனவுக்குள் கனவு கொண்டிருக்கிறோம். அப்படித்தான் சிருஷ்டி, கதை, எழுத்து, ஆன்மீகம் என எண்ணத்தின் கிளைகள் பிரிந்து கூடவே உடலின் உபாதைகளும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த குளறுபடியில் நான், தி.ஜா, இன்னும் உங்கள் மனதை பாதித்த யார் யாரோ உங்கள் நெஞ்சத்துள் புகுந்து விட்டதாகச் சொல்கிறீர்கள். நான் இதைப் போலி அடக்கத்தினால் சொல்லவில்லை. எண்பத்திஏழு வயதில் தெரிந்த அனுபவ உண்மையாகக் காண்கிறேன். அதைத்தான் ‘விளிம்பில்’ நீங்கள் காண்கிறீர்கள். இது மட்டுமன்று, அனுபவ உண்மையாக நீங்களும் என் வயது வந்தபின் அதையும் தாண்டி உங்கள் வேளை வந்தபின் (யாருக்கும் அவரவர் வேளை வந்து தானே ஆகவேண்டும்!) உங்களுக்காகவே உங்கள் பக்குவத்துக்கேற்றபடி உங்கள் முறையில் உணருவீர்கள். இது யாரும் விலக்க முடியாத அவரவர் உண்மை.
26-12-2002 அன்று விடிகாலை வென்னீருள்ளில் வழுக்கி வீழ்ந்து இடுப்பு எலும்பும், தொடை எலும்பும் சேருமிடத்தில் முறிந்து கிடக்கை ஆகிவிட்டேன். முழுமையாக இல்லை. முறிந்த இடத்தில் திறந்து இடையில் ஏதோ சிலேட்டு போல் ஒரு பலகை சொருகி மூடி அந்த இடம் படிப்படியாக கூடிக் கொண்டிருக்கிறது. வைத்தியனின் வெற்றி. இப்போதைக்கு வேளை இல்லை. இன்னும் மூன்று மாதங்களில் பழைய நடைவந்துவிடும் என்று உறுதி கூறுகிறான். ததாஸ்து. ஆனாலும் எனக்கு வயது ஆகிவிட்டதே! அதற்காக நான் அழவில்லை. அழுது பயனுமில்லை. சிங்கப்பூரிலிருந்து சேகரும், இங்கு ஸ்ரீகாந்தின் பணி விடையாலும், மற்றும் திவாகரன் (என் மாப்பிள்ளை) எத்தனையோ சொல்லமுடியாத சிற்றுதவியாலும், பேருதவியாலும் என்னை தாங்குகிறார்கள். இப்பவே நான் என்னை நிறுத்தி வைத்தால் மெதுவாக நடக்கிறேன்.
ஆயினும், கனவுகள் காணாமல் இருக்க முடியவில்லை. அது உயிரை தாங்கும் இன்றியமையாத தன்மை ஆகிவிட்டது. அன்றொரு நாள், தென்காசியில் உங்கள் வீட்டில் பின்நிலவில் முன்னிருட்டில் நான் கனவை நூல் நூற்கும் வெறியில் சங்கீதத்தைப் பற்றி விஹாசிக்கையில், என்னை இழந்தேன். என்பேச்சில் நீங்களும் உங்களை இழந்தீர்கள். நினைவூட்டத் தேவையில்லாத அமர நேரம். ஆயினும், நடராஜன் என்ன பயன்! என்ன பயன்! இங்கே இதோ இடுப்பொடிந்து தற்சமயமேனும் செயலிழந்து கிடக்கிறேன். எத்தனையோ வருடங்களுக்கு முந்தைய அந்த கவிதாநேரம் என்னைப் பார்த்து சிரிக்கிறதா, அழுகிறதா அறியேனே! இப்போது தொண்டையை அடைக்கிறது.
நீண்ட வயதை வைத்துக் கொண்டு என்ன செய்வது? என் அழகிய எண்ணங்கள், நாம் பகிர்ந்துக்கொண்ட சௌந்தர்ய நிகழ்வுகள் எல்லாம் இதோ, இன்றோ, என்றோ என் சடலத்துடன் மண்ணோடு மண்ணாய் அல்லது அஸ்தியாய் ஜலத்திலோ கரைந்துவிடப்போகின்றன. இதையாரும் தவிர்க்க முடியாது. பகவான் ராமகிருஷ்ணருக்கு தொண்டையில் புற்றுநோய், பகவான் ரமணரிஷிக்கு முழங்கையில் புற்றுநோய், ஆதிசங்கரருக்கு வயிற்றுக்கோளாறு. ஏசுவை சிலுவையில் அறைந்து விட்டார்கள். காந்தி Ôஹரே ராம்Õ சுட்டுவிட்டான். ஏசு Ôகடவுளே என்னை கைவிட்டுவிட்டாயேÕ இந்த கடைசி வார்த்தைகள்தான் அவர்கள் வாழ்க்கையில் உழன்று, மக்களுக்காக உழைத்துக் கண்ட மிச்சமா! அப்படியும் அவர்கள் தாரக மந்திரமா!
புத்தர் நீண்ட நாள் வாழ்ந்தார். அவருடைய ஒளி எழுபத்திஐந்து மைல்களுக்கு வீசுமாம்.
ராகவேந்திரர் ஜீவசமாதி கண்டார். இதெல்லாம் ஏன்? எதற்கு? என்ன பயன்? பரமாச்சாரியார் முழு நூறு காணமுடியவில்லை. அவர் உயிர் உத்திராயணத்திற்கு காத்திருக்க முடியவில்லை. இந்த கோட்பாடுகள், கடைசியில் மதப் பிரச்சாரங்களாகவே தோன்றுகின்றன. மூன்று மடாதிபதிக.ளும் எனக்கு சால்வை போர்த்தி, ருத்ராட்ச மாலை போட்டு விருதுகள் தந்திருக்கிறார்கள். அப்படி, இப்படி நானும் பரிசுகள், பாராட்டுக்கள், விருதுகள் என்று பத்து, பதினொரு அயிட்டங்கள் எழுத்து மூலம் சம்பாதித்து விட்டேன். முதலில் கண்ட சந்தோஷம் எப்பவோ போய்விட்டது. இடமில்லாமல் எங்கோ பெட்டியில் என் மனைவி அடுக்கி வைத்திருக்கிறாள். எழுத்தில் அமரத்துவத்தில் நம்பிக்கை வைத்திருந்தேன். அது போய்விட்டது. மக்கள் மறதிமிக்கவர்கள். அவர்களுக்கு ஏதேனும் புதிது புதிதாய் நேர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். இப்படித்தானே மூதாதையர்கள், முன்னோர்கள் என்று வம்ச பரம்பரையையே! ஏன் மனித பரம்பரையையே புதைத்து வைத்துக் கொண்டு நாம் கிளைத்துக் கொண்டிருக்கிறோம். எப்பவும் விளிம்பில்தான் நின்று கொண்டிருக்கிறோம். நான் வயது பழுத்த நிலையில் என் விளிம்பைக் குறிக்கிறேன். உங்கள் தாத்தா பெரிய ரசிகமணிதான். ஆனாலும் சர்க்கரை அவரை எங்கே விட்டது? சிறுகச் சிறுக முழுக்க விழுங்கிவிட்டதே! எம்.எஸ். அவர்கள் என்னிலும் சில மாதங்கள் மூத்தவர் என்று நினைக்கிறேன். கணவரின் துணை இழந்து கச்சேரிகளின் வெற்றி துணை இழந்து சர்க்கரையில் மாட்டிக் கொண்டு பச்சைக் குழந்தையாய் தவிக்கிறாள். ஆயிரம் சுகப்பட்டாலும் பிறவியின் தனிமை யாரையும் விடுவதில்லை. இதுதான் நான் கண்டேன். அவரவர் பங்கு நல்லதோ, பொல்லாதோ என்று அவரவர் நினைத்துக் கொண்டிருப்பது யாரையும் விடுவதில்லை. அவரவர் பெயர் நடராஜனானால்லென்ன ராமாமிருதமானாலென்ன. யாவரும் ஒன்றே.
அன்பு
லா.ச.ராமாமிருதம்
28. 1. 03