
அலையலையாய் விரியும் வளையம்..
மனத் திரையில்
மணற்குழி பறித்து விரையும் குளம்படியில்
புழுதியோடு பறந்துக் கொண்டிருக்கிறது
சொல்லின் சிறகு
வனம் புகும் பேச்சொன்று
இருண்மை படரும் மொழியின் தூரிகைக் கொண்டு
வரைந்து பார்க்கிறது உச்சரிக்க விரும்பாத
மௌனத்தை
பதறியபடி உள்ளங்கையில் நடுங்கும்
அர்த்தங்களை
அலையலையாய் விரியும் வளையங்களில் கோர்த்து விட
சேர்ந்துவிடுகிறது உரையாடலின் கரையில்
கரை விளிம்பெங்கும் மிதக்கும் மெல்லிய சிறகுகளில்
இன்னும் ஈரம் படாத புழுதியின் நிறம்
மிச்சம் வைத்திருக்கிறது ஒரு பாலையின் வனத்தை
அர்த்தப் பட்சியின் அந்தரங்கச் சிறகு...
ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு
வந்தடைவதில்
அறிமுகச் சம்பிரதாயத்தின் பழந்தூசிக்
கொண்டு வந்து சேர்த்து விடுகிறது
புரட்ட விரும்பாத காலத்தின்
ஏதோவொரு பக்கத்தை
தும்மலோடு தொடங்கும்
புன்னகையின் முதல் புள்ளியில்
நகர்த்தவியலா கால்களோடு அல்லாடுகிறது
முதல் சொல்
அர்த்தப் பட்சியின் அந்தரங்கச் சிறகில்
நிறப்பிரிகையோடு மினுங்கும் கால இடைவெளி
மௌனத்தை வடிகட்டி
கசடுகளை உலர்த்துகிறது அந்தரத்தில்
ஒரு நேசத்தை யாசிப்பது பற்றியோ
ஒரு பரிச்சயத்தைப் பரிசளிப்பது குறித்தோ
மாற்றுக் கருத்துடைய ஒருவன்
ஓர் இடத்திலிருந்து
இன்னொரு இடத்துக்கு வந்தடைவதன் முதல் சொல்
உச்சரிக்கப்படாமலே
அனிச்சையாய் ஏற்பட்டுவிடுகிறது
ஒரு கை குலுக்கல்
பூக்களில்லாத செடி
மாடியிலிருக்கும்
பூக்களில்லாத
ஒரு சின்னஞ்சிறு தொட்டிச் செடியிடம் நின்று
ஏதோ பேசிக் கொண்டிருக்கிறாள்
தான்யா
பிறகொரு இலையை சட்டென்று
பறித்துக் கொண்டு
அறைக்குத் திரும்புகிறாள்
தன் பிரியமான பொம்மையை நோக்கி
காலை நேர அவசரத்தில்..
டூ வீலரில்
சிக்னலில் நிற்கும்
காலை நேர அவசரத்தில்
ஹான்ட் பாரிலிருந்து
நிதானமாய்
வழிந்து கொண்டேயிருக்கிறது
வெயில்
கானல் தார்..
நள்ளிரவில் போட்ட புது ரோட்டின்
தார்
இளகுகிறது உச்சி வெயிலில்
பிளாட்பார மரத்து இலையிலிருந்து
வெப்பக் காற்றசைவில்
விழுந்து விட்ட
கட்டெறும்பின் குச்சிக் கால்கள் வழியே
ஏறும் கானல் நீர்
அதன் மண்டைக்குள் ஊற்றுகிறது
குடம் குடமாய்
தாரை