அருமை நண்பர் அனந்தராமன் அவர்களுக்கு நலம்.
உங்கள் கட்டுரையைத் தேடிக் கண்டுபிடிப்பதுக்குள் தவிடுதாங்கிப் போய்விட்டது. பந்தோபஸ்து செய்கிறேன் பேர்வழி என்று எங்காவது 'பதுக்கி' வைத்து விட்டு பிறகு தேடோ தேடு என்று தேடுகிறது! இதே வழக்கமாகிவிட்டது இப்போதெல்லாம்.
எங்க பக்கத்திலிருந்து மாடு வாங்க ஒரு ஊர்ப்பக்கம் - அந்த ஊர் இப்பொ சட்டென்று ஞாபகத்துக்கு வரமாட்டேங்கிறது. அந்த சந்தைக்குப் பக்கத்தில் ஒரு காட்டாறு-அது கடுங்கோடை காலமாக இருக்கும்-அகலமான ஆறு. நுண்ணமான மணல்பட்டு மெத்தைபோல இருக்கும். அப்பெல்லாம் ரூபாய் நோட்டு கிடையாது. வெள்ளி நாணயங்கள்தான். மடியில் கட்டிக்கொண்டு தூங்கினால் அபேஸ் ஆகிவிடும் என்று பயந்து அந்த ஆற்று மணலைப் பறித்து உள்ளே போட்டு மூடி மேல துண்டை விரித்து நிம்மதியாகப் படுத்துத் தூங்கிவிடுவார்கள்.
வந்தோம் மாடு பிடித்தோம் போனோம் என்று இருக்காது. 15 நாள் 10 நாள் சந்தை என்று இருக்கும். மாடுகள் எங்கெருந்தெல்லாமோ வந்து கொண்டே இருக்கும். பார்க்கப் பார்க்க ஆயிரம் கண்கள் வேணும். விலை உயர்ந்த மாடுகள். வாங்க முடியாவிட்டாலும் கண்ணாரப் பார்க்கலாமே என்று இருப்பார்கள். சொந்தக் காரர்கள் தெரிந்தவர்களோடு பேசிப்பேசித் தீராது. ஓய்வும் சந்தோசமும் அவர்களுக்கு அப்போதுதான் கிடைக்கிறது.
நல்ல தூக்கத்தில் தூரத்தில் எதோ ஒரு இரைச்சல் கேட்டது போல இருக்கும். முழிப்புத்தட்டி நிதானப்படுவதற்குள் ஆள் உயரத்திற்கு புயல்போல் சீறிக்கொண்டுவரும் வெள்ளம்! உயிர் தப்பிப்பதே பெரும்பாடு. ஓடிக் கரையேறிய பிறகுதான் அய்யோ பணம் பணம் என்று கூப்பாடு போடுவார்கள்.
காலையில் வெள்ளம் வடிந்து, அப்பாவிபோல் இருக்கும் ஆறு. எந்த இடத்தில் புதைத்தோம் என்று தெரியாது. ரத்தத்தை வேர்வையாகப் பிழிந்து சம்பாதித்த பணம். கிடைப்பது அபூர்வம். சிலருக்குக் கிடைத்துவிடும். பந்தோபஸ்துக் கருதி ஒளித்துவைக்கும் நகை நட்டோ, பணமோ கிடைத்தால்தான் உண்டு. இப்போதெல்லாம் எதை எங்கே வைத்தோம் என்று மறந்துபோகிறது. ஆத்து வெள்ளம் போல இது ஒரு கால வெள்ளம். என்ன சொல்ல.
*
கட்டுரை வந்த உடனே படித்துக் கைபார்த்தது (திருத்தங்கள்). பஞ்சு படித்துப் பார்த்துவிட்டு ஏற்றுக்கொண்டுவிட்டார். நீங்களும் பார்த்து நகல் எடுத்து அனுப்புங்கள். கட்டுரையில் நமது நேரடிப் பழக்கங்கள் பற்றி மூச்சுவிடவில்லை. எதாவது சொல்லத் தோன்றினால் அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
*
பிரசுரம் ஆன கடிதங்களை-குறுகிய காலத்துக்குள் - மறுபிரசுரம் செய்ய வேண்டாமே.
வீட்டில் யாவரும் நலந்தானே?
நாங்கள் நலம்.
கி.ரா.
22-12-2001
புதுவை-8.
பின்குறிப்பு:
டாக்டர். அனந்தராமனின் பூர்வீகம் திருநெல்வேலி. தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். கி.ரா.வின் நண்பர். நல்ல இலக்கிய ரசிகர்.
கடிதச் சேகரம்: கழனியூரன்.