201. அவன் தொட்டுக் கொடுத்தான்; நான் இட்டுக் கொடுத்தேன்.
202. அவன் நா (நாக்கு) அசைந்தால், (பேசினால்) நாடு அசையும்.
203. அவன் பேசுகிறது தில்லு முல்லு; போகிறது திருவாதிரை, திருவோணம்.
204. அவன் பேச்சைத் தண்ணியில்தான் எழுதணும் (நம்பக் கூடாது).
205. அழகு (அழகி) இருந்து அழும் (அழுவாள்); அதிர்ஷ்டம் இருந்து உண்ணும்.
206. அழகு (அவளுக்கு) ஒழுகுகிறது; ஓட்டைப் பானையைக் கொண்டுவா. பிடித்து வைக்க. (அங்கதச் சுவை உடைய பழமொழி இது)
207. அழகுப் பெண்ணே காத்தாயி, உன்னை அழைக்கிறாண்டி கூத்தாடி. (அங்கதச் சுவை)
208. அழச் சொல்வார் தமர் (உறவினர்) சிரிக்கச் சொல்வார் பிறர்.
209. அழக்கொண்ட எல்லாம் அழப்போம் (திருக்குறளின் கருத்தில் அமைந்த பழமொழி இது. ஏழைகளை அழவைத்துச் சேர்த்த பணம் எல்லாம்; சேர்தவனை அழவைத்து விட்டுச் சென்று விடும்)
210. அழித்துக் கழித்துப் போட்டு; ‘வழித்து நக்கி' என்று பெயரிட்டானாம். (அங்கதச்சுவை)
211. அழிந்த கொல்லையிலே, குதிரை மேய்ந்தால் என்ன...? கழுதை மேய்ந்தால் என்ன..? (எந்தப் பயனும் இல்லை என்பது பொருள்)
212. அழிந்தவள் யாரோடு போனால் என்ன..?
213. அழி வழக்குச் (பொய் வழக்கு) சொன்னாலும், பழிபொறுப்பான் மன்னவன்.
214. அழுகிற ஆணையும்; சிரிக்கிற பெண்ணையும் நம்பாதே( எப்போதும் அழுகிற ஆண்; சிரிக்கிற பெண்)
215. அழுகிற பிள்ளையிடம் வாழைப்பழத்தைக் காட்டி ஏமாற்றுவதைப் போல. . . (நகைச்சுவை)
216. அழுகிற வீட்டில் இருந்தாலும், ஒழுகுகிற வீட்டில் குடியிருக்க முடியாது.
217. அழுகை ஆங்காரத்தின் (கோவத்தின்) மேல்; சிரிப்பு கெலிப்பின்(மகிழ்வின்) மேல்.
218. அழுக்கை அழுக்கு கொல்லும் (பழங்காலத்தில் அழுக்கான துணியை வெளுக்க வண்ணான் அழுக்குத் துணியுடன் உவர் மண்ணைச் சேர்த்து அத்துணியை மேலும் அழுக்காக்கிபின் அடித்துத்துவைப்பான். இப்போது துணியில் ஏறிய உவர்மண் என்ற அழுக்குடன் துணியில் ஏற்கனவே இருந்த அழுக்கும் சேர்ந்து ஆற்று நீரோடு போய்விடும். துணி வெள்ளையாய் வெளுத்துவிடும். இங்கு அழுக்கை அழுக்கே கொன்றுவிடுகிறது)
219. அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய் எப்போதும் இருக்காதே! (அவலச்சுவை)
220. அழுத பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும்!