எங்கள் பகுதியில் இருக்கும் ஒரு வங்கி. ஒவ்வொருவரும் தங்கள் பணத்தை வங்கியில் செலுத்துவதற்கும் அல்லது தங்கள் சொந்தப் பணத்தை வங்கியில் இருந்து பெறுவதற்கும் வரிசையில் காத்திருந்தனர். வரிசையில் நிற்க வேண்டி வந்து விட்டாலே மக்களுக்கு அதில் ஏதோ சலுகை கிடைப்பது போன்ற எண்ணம் ஏற்பட்டுவிடுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஏற்கெனவே அவர்கள் ரேஷன் கடையிலோ, பாஸ் போர்ட், அமெரிக்கன் விசா, தண்ணீர் லாரி போன்ற க்யூக்களில் நிற்கும் போது ஆதாயம் அடைவதற்காகத்தான் எல்லா சிரமத்தையும் தாங்கிக் கொண்டு நிற்கிறோம் என்ற எண்ணம் வலுவாக ஊறியிருக்கும் அனுபவத்தில் வங்கிகளிலும் நிற்கிறார்கள். அதனால்தான் வங்கி ஊழியர்கள் சலித்துக் கொண்டு பதில் சொன்னாலும் அவர்களுக்குத் தாங்கிக் கொண்டு நிற்க முடிகிறது. ஐந்து நிமிடத்தில் முடிய வேண்டிய வேலை ஒரு மணி நேர வேலையாக மாறினாலும் ஆபீஸுக்கு போன் செய்து பர்மிஷன் போட்டுவிட்டு வரிசை காக்கிறார்கள். ஏடிஎம் அமைப்புகள் வருவதற்கு முன் இது இன்னும் மோசமான நிலைமையாக இருந்தது எல்லோருக்கும் தெரியும்.
இத்தகைய நெரிசலான ஒரு திங்கள் கிழமை காலை நேரம்.
ஏ.சி. ரிப்பேர். ஏ.சி. இருப்பதனால் பேன் வசதி செய்யப்படவில்லை. மக்கள் வெந்து புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மூன்று பேர் வங்கிக்குள் நுழைந்தனர்.
மூன்று பேருமே அரை டவுசர் போட்டிருந்தனர். ஆனால் அவர்கள் மூவரும் இருபத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்களாகத்தான் இருக்க வேண்டும். உயரமும் அகலமும் கொண்டவர்கள். சட்டையில் பட்டன்கள் இருந்தும் அதை போடுவதற்கு உத்தேசமில்லை. பேருக்கு ஒரு பட்டன் மட்டும் போட்டுக் கொண்டு மார்பு, வயிறு பகுதிகளின் ரோம வளர்ச்சியைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். மார்பில் இருக்கும் முடிக்கும் தலையில் இருக்கும் முடிக்கும் சம்பந்தமில்லை. தலைமுடியின் ஒரு பகுதியை தங்க நிறம் போல மாற்றியிருந்தனர். வாயில் சுவிங்கம் அரைபட்டுக் கொண்டிருந்தது. ஒரு ஜதை கம்மல் வாங்கி அதை ஆளுக்கு ஒன்றாக இரண்டு பேர் அணிந்திருந்தனர். கம்மல் அணியாத இன்னொருவனின் கையில் ரப்பர் பந்து.
அந்தக் கூட்டத்தின் நெரிசலுக்கு நடுவே அவன் பந்தை தரையில் ஓங்கி வீசி காட்ச் பிடித்துக் கொண்டிருந்தான். வரிசையில் இருந்தவர்கள் மோசஸுக்கு வழிவிட்ட கடல் மாதிரி இருபக்கமாக ஒதுங்கிக் கொண்டார்கள். எல்லோரும் தங்களுக்கு வழி விடுகிறார்கள் என்ற பிரக்ஞையே இல்லாமல் மூவரும் அடுத்தவினாடி கவுண்டரில் தலையைவிட்டு ஒரு காசோலையை நீட்டினர். கவுண்டரில் இருந்தவர். இரண்டாம் நம்பர் டேபிளில் கொடுத்து டோக்கன் வாங்கி வாருங்கள் என்றார்.
"மச்சி டோக்கன் வாங்கணுமாண்டா''
மூவரும் அருகில் யாருமே இல்லை போல தமக்காக விலகி வழி விட்டவர்களைப் பொருட்படுத்தாமல் கடந்து போய் இரண்டாம் கவுண்டரில் செக்கை நீட்டினர். அடுத்த வினாடி டோக்கன்.
பந்து வைத்திருந்தவன் டோக்கன் எண் கவுண்டருக்கு மேல் ஒளிரும் வரை இங்கும் அங்கும் அடித்து கேட்ச் பிடித்தபடி இருந்தான். மற்ற இருவரும் யாரையோ நேற்று துரத்தித் துரத்தி அடித்தது பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
வங்கியில் இருந்தவர்கள் ஏதோ பணயக் கைதிகள் போல அதிகமாக பேசாமலும் அதிகமாக நடமாடாமலும் கட்டுப்பட்டு நடப்பவர்கள் போல இருந்தார்கள். பந்து அடித்துக் கொண்டிருந்தவன் தாமதமாவதற்குத் தன் எதிர்ப்புணர்வைக் காட்டும் விதமாக இப்போது தான் இருந்த இடத்தில் இருந்து வங்கியின் சுவற்றில் அடித்து பந்து விளையாட ஆரம்பித்திருந்தான். காத்திருந்த அத்தனை பேருக்கும் முன்னால் இவர்களின் டோக்கன் எண் அழைக்கப்பட்டது. பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்கள் வெளியேறினர்.
வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அனைவரும் இயல்பு நிலைக்குத் திரும்பினர்.
இது ஒரு சாம்பிள்தான். இத்தகையவர்கள் எந்தச் சட்டத்துக்கும் கட்டுப்படாமல் ட்ராபிக் நேரத்தில் இடித்துக் கொண்டு முன்னே போகிறார்கள், தியேட்டரில் க்யூவில் நிற்காமல் டிக்கெட் வாங்குகிறார்கள், நம்முடைய ஓட்டை நம் கண் முன்னாலேயே போடுகிறார்கள், நடுரோட்டில் எதிர்ப்படும் நண்பனுக்காகக் குறுக்காக பைக்கை நிறுத்திவிட்டு குசலம் விசாரிக்கிறார்கள். மேலே தெறிக்கும்படி பான் பராக் துப்புகிறார்கள். காவலர்களே கூட தனியாக இருந்தால் கண்டு கொள்ளாமல் வேறு பக்கம் திரும்பி டீ குடித்துவிட்டுப் போய்விடுகிறார்கள்.
இன்றைய தினமணி (19.07.09)யில் ஒரு செய்தி. 91 சதவீத மக்கள் நீதித் துறையை நாடுவதில்லை என்று தலைப்பு. சொல்லியிருந்தது சுப்ரீம் கோர்ட் நீதிபதி எஸ்.பி. சின்ஹா. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 52 சதவீதம் பேர் பிரச்சனைகளைப் பொறுத்துக் கொண்டு போகிறவர்களாகவும் 30 சதவீதம் பேர் போலீஸ் அல்லது அரசியல் வாதிகளிடம் போவோம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
பொறுத்துக் கொள்கிற 52 சதவீதம் பேரைவிட இந்த 30 சதவீதம் பேரில் எத்தனை சதவீதம் நீதி பெற்றார்கள் என்பதும் எத்தனை பேர் மேலும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள் என்பதும் வேறு விஷயம்.
91 சதவீதத்தில் இன்னும் 9 சதவீதம் பேர் என்ன செய்கிறார்கள் என்பதுதான் திடுக்கிட வைக்கும் வேதனை.
அவர்கள் ரெüடிகளின் உதவியை நாடுவோம் என்று கூறுகிறார்கள்.
பூவை விற்றுவிட்டு அந்தப் பணத்தில் அதைவிட மகத்தான எதை வாங்கிவிடப் போகிறாய்? என்று ஒரு கவிஞன் கேட்டது மாதிரி... ரெüடிகளின் உதவியோடு யாரை வீழ்த்தப் போகிறார்கள்?... நல்லவனையா?
சரி.. இன்னொரு ரௌடியாகவும் இருக்கலாம். ஆனால் இது எவ்வளவு அபாயகரமான உதவி ?
அப்படி மக்களுக்கு உதவுகிற மூன்று பேரைத்தான் நான் வங்கியில் பார்த்ததாக இப்போது தோன்றுகிறது. அந்த உதவிக்கான சன்மானத்தை செக்காகவும் வழங்குகிறார்கள் போலிருக்கிறது.