
ஒண்டிவீரன் பயணம்

எழுத்துக்களைப் பார்த்தால் போதும்;
வாய்விட்டுப் படிக்கத்
தொடங்கி விடுவாள்,
அப்பொழுதுதான் எழுதப் படிக்க
ஆரம்பித்திருந்த கார்த்திகா.
கடை போர்டுகள், சுவரொட்டிகள்,
பேருந்து வழித்தடங்கள்,
பாறை மேல் ஏசு வருகிறார்
என எல்லாவற்றையும்
உரக்கப் படித்துக்கொண்டே
போவாள் அப்பாவுடன்.
அந்நாளில்
தாமிரபரணியில் குளிக்கப் போகையில்
படித்த
‘கமல்ஹாசன் நடிக்கும் ஒண்டிவீரன்’
சுவர் விளம்பரத்தைக்
கணவனிடம் சொன்னாள்
25 வருஷங்கள் கழித்து.
அப்படி ஒரு கமல் படமா என்று
இணையத்தில் தேடியபோது,
‘ஒண்டிவீரன் கமல்’ என்று
வெளிவராத அப்படப் பெயரில்
‘நெல்லை அப்பன்’ என்கிற நெல்லையப்பனின்
குழுமம் காணக் கிடைத்தது.
‘எங்கள் க்ளாஸ் ‘நெல்’லாகத்தான் இருக்கும்’
என்றாள் தீர்மானமாக.
ராட்டினம் 25 வருஷம் சுற்றி
ஒண்டிவீரன் விளம்பரம்
எழுதியிருந்த சுவர் பக்கமாகத்
திரும்பி நின்றது.
இருக்கை எண் 59.3
மேல் பெர்த்தில் கட்டிய தூளியில்
தூங்கும் குழந்தை.
நள்ளிரவில்
பயணிகள் பட்டியலுடன்
நுழைந்த பரிசோதகர்
57,58,59-ஆம் இருக்கைகளை
சரிபார்க்கையில்,
மெல்ல ஆட்டினார்
சிணுங்கும் தூளியை.
59.1-ஆம் இருக்கையிலிருந்து
59.3-ஆம் இருக்கை வரை
ஊசலாடியது
குழந்தை.
புட்டு ஆச்சி வழிபாடு

தடிவீரன் கோயில் தெருவில்
புட்டு விற்ற ஆச்சி
தன் கடைசி வாடிக்கையாளரிடம்
‘உனக்குத்தான் கடைசி’ என்று சொல்லி
வியாபாரத்தை முடித்துக் கொள்வாள்
அன்றாடம்.
ஒருநாள் கடையை ஏறக்கட்டிவிட்டுப்
படுத்தவள்
தூக்கத்திலேயே இறந்து போனாள்.
அன்று கடைசிப் புட்டை
வாங்கித் தின்ற கார்த்திகா
ஆரம்பித்து வைத்தாள்
புட்டு ஆச்சி வழிபாட்டை.
ஞாபகம்

மலைப்பாதையில்
கட்டுப்பாட்டை
இழந்த லாரி
தடுப்புச் சுவரை
இடித்துக் கொண்டு
பள்ளத்தாக்கில்
பாய்கிறது.
பனி சூழ்கிறது
லாரியை,
ஓட்டுனரின்
கடைசி ஞாபகம் போல.
- முகுந்த் நாகராஜன்
****
காமம்

கிளை
அசைந்தழைக்க
மழை
வந்துவிட்டிருந்தது
காய்ந்தும் காயா
துணிகளையள்ளி
ஈரம் நுகர்ந்து
படியிறங்கையிலேயே
வானம்
சட்டென
வெட்டரித்திருந்தது.
ஆம்...

இனி
நீ இல்லை
என்றீர்கள்.
ஆம் நண்பர்களே
இனி
நான்
இல்லை
இவை மட்டும்தான்.
- நர்சிம்
****
அணிலாடும்...
ஆயுதபூஜைக்கென
அலங்கரித்துக்கொண்டு நின்ற நிலையத்தில்
ரயில் நிற்காமல் கடந்தபோது -
ஊருக்குத் திரும்பிவந்து
உன்னைப் பார்க்கவேண்டும் போலிருந்தது.
செங்கண்மால் தான் கொண்டு போனான்...
கல்யாண வாழையில்
முன்னங்கால்களை எக்கி
நார் உரித்துச் சுவைத்துக்கொண்டிருந்த
மருண்ட ஆட்டுக்குட்டியை
விரட்டிவிட்டுச் சென்றவர் -
செல்ல மகளை வழியனுப்பித் திரும்புகையில்
கண்ணீரைக் கடித்துக்கொண்டு
தேடிப் போனார்
கறுத்து மினுங்கிய கண்கள் கொண்ட
மருண்ட அந்த
சின்னஞ்சிறு ஆட்டுக்குட்டியை.
சிறுபொழுது

மறைந்து கொண்டிருந்த சூரியனை
குறுக்கே கீறி
கடலில் எறிந்து சென்றது
கட்டுமரம் ஒன்று.
உடைந்ததை மீண்டும்
ஒட்டிக்கொண்டு போகவேண்டி
மேற்கேயே தயங்கி நின்றது
பாதி சூரியன்.
மிச்ச சூரியனைக்
கடத்திக்கொண்டு வருவதும்
மீட்டுக்கொண்டு செல்வதுமாய் உள்ளன
சில அலைகளும்
சில அலைகளும்.
ட்ரைடாக்ஸ் ப்ரொகம்பன்ஸ்
காதல்பொங்கிய ஒரு கணத்தில்
காலம் கடத்தாது சொல்லிவிடும்பொருட்டு
கையில் கிடைத்த
காக்கா பூவைக் கொடுத்துச் சொல்லிவிட்டேன்.
‘இது தலைவெட்டிப் பூ அல்லவா?’ என்று நீ
அதன் தலையை வெட்டிப் போட்டுவிட்டாய்;
கூறாய் தோழி யான் வாழுமாறே...
நிமித்தப் புள்
விடைபெறுவதற்கென
சேமித்துவைத்த சொற்களை
ஒவ்வொன்றாகப் போட்டு
உன்னிடம் பேசிக்கொண்டிருந்தேன்
தானியங்கித் தொலைபேசியில்.
சேமித்த வார்த்தைகள்
தீர்ந்துகொண்டிருந்த நொடியில்தான்
விடைபெறும் நேரமும் வந்துவிட்டிருந்தது.
சொல்லிமுடிக்குமுன்
இணைப்பறுந்துபோன தொலைபேசியை
வெறித்துவிட்டு
ஒலிவாங்கியை அமர்த்துகையில்
நாணயங்களைச் சேகரிக்கும் துளையருகே
பறந்தமர்ந்த காகம் ஒன்று
கற்கள் ஏதும் போடாமல்
கரைந்துகொண்டிருந்தது.
க்ராஸ்டாக்கில் யாரேனும்
கேட்டிருக்கக்கூடும்
தாகித்துக் கரைந்த ‘கா-கா’வையோ
துக்கித்து நடுங்கிய ‘பை-பை’-யையோ...
- கார்த்திகா