வேப்பமரத்தடியில் பாடம் படித்த அழகான நினைவுகளைத் தூண்டிய ந முருகேச பாண்டியனின் கட்டுரை அதே நேரத்தில் உணர்வில்லாத இன்றைய கல்வியின் முன் முக்கியமான கேள்வியையும் முன்வைக்கிறது.
பொருத்தமான கதையுடனான சுகுமாரின் கட்டுரை நல்ல பகடி ( பஷிரை இதில் சேர்க்க வேண்டுமா?)
''அந்த இறுக்கமும் முணுமுணுப்பும் தன்னிடம் பிச்சை கேட்கும் ஒருவனிடம் காட்டும் உணர்வாக எனக்குத் தோன்றியது.''
அ ராமசாமியின் கட்டுரை அவசியமான பதிவு.
கழனியூரனின் பாய் பற்றிய பத்தி எளிமையாகவும், சிறப்பாகவும் இருந்தது. அவரிடமிருந்து கிராமத்துக் கதைகளை எதிர்பார்க்கிறேன்.
மேலும் மாயா, மனோஜ், ஜெயந்திசங்கர், வாஸந்தி ஆகியோரின் கட்டுரைகள், கே பாலமுருகனின் சிறுகதை, மற்றும் கவிதைகள் எல்லாமும் சிறப்பு சேர்க்கிறது.
அனுஜன்யா என் கவிதையை அவர் எழுதிய கவிதையுடன் ஒப்பிட்டு எழுதியிருந்தார். என்னுடைய கவிதைகளுக்கான பொருளை பெரும்பாலும் என்னுடைய அன்றாட நிகழ்வுகளிருந்தே எடுக்கிறேன். உயிரோசையில் வெளிவந்த 'ஒரு அதிகாலைக் கனவு' என்ற கவிதையும் அப்படியானதுதான். எனக்கும் நான் தினமும் பார்க்கும் இங்குள்ள க்ரியோல் இனத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் உண்டான ஒரு ஈர்ப்பையே இதில் கையாண்டிருக்கிறேன். சாதாரணமாக பார்த்து, பின் பார்க்கவில்லையென்றால் நினைவு பிறழும் நிலைக்கு வந்துவிட்டதே இனி என்னவெல்லாம் ஆகுமோ? அந்தப் பெண்ணிடம் காதலைச் சொல்லி, சேர்ந்து ஊர்சுற்றுவேனோ? கல்யாணம்கூட இல்லை வேறு எதும் ஆகுமோ? என உண்மையான நிகழ்வைத்தான் கையாண்டிருக்கிறேன். இங்கு எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு சினிமா பார்ப்பது அதையே உவமையாக வைத்து கவிதையை முடித்திருப்பேன். இந்த எண்ணம் எனக்கு ஒரு ஞாயிற்றுக் கிழமை அதிகாலையில் தோன்றியதால் அதையே தலைப்பாக வைத்தேன் உங்களுடைய ப்ளாக்கை உங்களுடைய கடிதம் கண்ட பிறகுதான் வாசித்தேன். உங்களுடைய கவிதையையும், என்னுடைய கவிதையையும் மறுபடியும் ஒரு முறை வெறும் பார்வையாளனாக வாசித்துப் பாருங்கள் அதில் உள்ள வேறுபாடு புரியும். மேலும், நீங்கள் உங்களுடைய கவிதை ப்ளாக்கில் வெளியிட்ட தேதி ஆகஸ்ட் 27. நான் இந்தக் கவிதையை uyirosai@uyirmmai.com க்கு அனுப்பிய தேதி ஆகஸ்ட் 8 ( இந்தத் தகவலை ஆசிரியர் அறிவார்).
மண்குதிரை,
மொரீசியஸ்
உயிரோசையின் துவக்கமும், செயல்பாடுகளும், நோக்கங்களும் மகிழ்ச்சியும், உற்சாகமும் அளிக்கிறது
ச.முத்துவேல்
உயிரோசையின் இரு பதிப்புகளையும் வாசித்தேன். உயிர்மெய்யின் இணையவழிப் பரிணாமத்துக்கு வாழ்த்துகள்!
சிற்றிதழ்கள் மைய நீரோட்டத்தை நெருங்க முடிந்த காலமிது. வெள்ளமாய் வரும் வெகுசன எழுத்துப் பரப்பில் தேர்ந்த எழுத்துகள் தென்படுவதற்கான சாகசத்தை இந்தப் போக்கு சாத்தியமாக்கி இருக்கிறது. உயிர்மையைப் போலவே உயிரோசையின் பயணமும் இலக்கிய விளிம்புகளைத் தாண்டி அரசியல், சமூகத் தளங்களில் தன் விசாலமான பயணத்தை மேற்கொள்கிறது. ஸ்காட்லாந்துக் கவிஞர் ஆலன் ஸ்பென்ஸ்சின் ஹைக்கூ கவிதைகளின் தமிழ்ப் பெயர்ப்போடு ஆங்கில ஆக்கத்தையும் கொடுத்திருப்பது சிறப்பு. எனினும் மொழிகளினூடான பயணத்தில், கவித்துவம் பின்தங்கிவிடுகிறதோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. கந்தர்வனின் கடிதங்கள் அசல் இலக்கியப் பிரதிகளாத் தெரிகின்றன. பல நடுநிலைப் பத்திரிகைகள் செய்ய மறந்த சிறுபத்திரிகைகள் அறிமுகத்தை உயிரோசை தொடர்வது வரவேற்கத் தக்கது. கே.பாலமுருகனின் சிறுகதை, கவிதைகள், சுகுமாரனின் கட்டுரை என சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமில்லை.
அது சரி... அது என்ன உயிரோசையின் இணையப் பக்கத்தின் பின்னணி வண்ணம் முழுக்க காவிமயமாக இருக்கிறது? ஏதோ கேட்கத் தோன்றியது. எப்படியோ, தமிழ் இணையப் பரப்பில் வாரம் ஒரு இலக்கிய இதழ் வாசிக்கக் கிடைத்திருப்பது மகிழ்ச்சியானதே! வளர்க! தொடர்க!
மெ.உலகநாதன்,
சென்னை.
Greetings from a Uyirmmai and Uyirmmai.com's regular reader!
i don't know how to express my gratitude for giving me a wonderful opportunity to read your most valuable and useful website. i feel very proud for being a part of great Tamil literary movement. You and your magazine and website are providing a wonderful platform for excellent as well as promising and emerging writers. i love reading short stories in your magazine and articles on music and literary personalities.
Keep it up!
Please forgive me for not typing in Tamil; i don't have the Tamil font facility in my PC. Soon i will install it.
Paulraj
Hyderabad
உயிரோசை ஒரு நல்ல ஆரம்பம். கட்டுரைகளில் ராமசாமியின் பங்களிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. வாசந்தி அழுத்தமான ஒரு விவாதப் பொருளை மிகவும் மேலோட்டமான முறையில் அணுகியுள்ளார். கட்டுரைகளில் மேலும் நல்ல தரம் தேவை. அதற்கு கவிதைகள் பரவாயில்லை. இந்த இதழுக்கு முத்தைப்பாக அமைந்தது அபிலாஷ் மொழி பெயர்ப்பில் வெளியாகியுள்ள ஆலன் ஸ்பென்ஸ் ஹைக்கூ கவிதைகள்தான். உங்கள் தொடர் முயற்சிக்கு வாழ்த்துகள்.
பாஸ்கர்
டேடிராயிட்
சுகுமாரன் சல்மான் ருஷ்டி பற்றி எழுதியிருந்த குறிப்பு நிலைப்பாடுகளின் முரண்பாடுகளையும் அபத்தங்களையும் சுட்டிக் காட்டுகிறது. பொதுவாகவே கடந்த இரு இதழ்களிலும் சுகுமாரன் எழுதியுள்ள குறிப்புகள் சுவாரசியமானவை மட்டுமல்ல. சித்திக்கத் தூண்டுபவை.
கே. பாபு
லாஸ் ஏஞ்செல்ஸ்
அ.ராமசாமியின் இலவசங்கள் தரும் இழிவுகள் படித்தபோது ஆழ்ந்த வலி எழுந்தது. சமூக நீதி என்பது இதுபோன்ற கருணைகளால் ஒருபோதும் உருவக்கப்படக் கூடியதல்ல என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
திவ்யா நடராஜன்
பெங்களூர்
ஆபிதீனின் நூல் குறித்த விமர்சனம் நூலைப் படிக்கத் தூண்டியது. மனோஜ், மாயா இருவரும் அன்றாடச் செய்திகளின் பின் இருக்கும் உண்மையைத் தேடிச் செல்கின்றனர். உயிரோசை உயிர்ப்புள்ள இதழாக வளர்ந்து வருகிறது. வாழ்த்துகள்.
மகேஷ்
திருத்தணி
உயிரோசையின் கவிதைகள் பலதரப்பட்ட கவிஞர்களை அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சி தருகிறது. றஞ்சனி, செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள் சஞ்சலப்பட வைக்கின்றன. கோகுலன், ரிஷான் ஷெரீப் கவிதைகள் அழகானவை எனினும் ஆழம் தேவை.
ஆர். சண்முகவேல்
தூத்துக்குடி
கீழைத்தேய கலாச்சார வேர்களைத் தொடர்ந்து தேடிச் செல்லும் ஜெயந்தி சங்கரின் எழுத்துகள் இம்முறை சீனத்துக் காலணிகளின் கதையைப் பேசுகிறது. காலணியைச் சுற்றி ஒரு கலாச்சாரத்தின் வரலாற்றையே எழுதிவிட்டார்
பா. தவமணி
பெங்களூர்
உயிரோசை உள்ளடக்கம் வடிவமைப்பு இரண்டிலும் ஜொலிக்கிறது. இணையம் என்றாலே வெற்று அரட்டை self promotion என்ற அவப் பெயரைத் துடைக்கும் வண்ணம் சமூகப் பிரச்சினைகள் மற்றும் பண்பாட்டு வேர்களை இனம் காணும் ஆக்கங்கள் மனதிற்கு நிறைவளிக்கின்றன. இவ்வளவு விரிவான பரிமாணத்துடன் சமீபத்தில் வேறு எந்த இணைய இதழும் வெளிவந்ததில்லை என்றே கூறலாம். உயிரோசை அச்சில் வரும் நாள் எந்த நாளோ?
ஜெஸிந்தா
ஹைதராபாத்
அணு ஒப்பந்தம் குறித்த மனோஜ்ஜின் கட்டுரையும் பீகார் வெள்ளம் குறித்த மாயாவின் கட்டுரையும் உயிரோசை ஒரு சமகாலப் பத்திரிகை என்ற உணர்வைத் தோற்றுவிக்கின்றன. வாஸந்தியின் கட்டுரை நீதிபதிகளுக்குள் செயல்படும் பிற்போக்கு மனோபாவங்களைத் துணிச்சலாகச் சுட்டிக் காட்டுகிறது. நீதிபதிகள் பல சமயங்களில் கடவுள்களாக மாற விரும்புகின்றனர்.
எஸ். அனீஷ்
சென்னை
ந. முருகேச பாண்டியனின் பள்ளி அனுபவங்கள் நம் அனைவரையுமே நமது பால்யத்திற்கு இட்டுச் செல்லக் கூடியவை. அதேபோல பாய் குறித்த கழனியூரனின் பதிவுகள் நாம் இழக்கும் வாழ்க்கை முறை குறித்த சித்திரங்கள். இருவருடைய எழுத்துகளும் உயிரோசைக்கு உயிர் வழங்கும் எழுத்துகள்
கே. மகாதேவன்
ஈரோடு
அ.ராமசாமி நமது பாரம்பரிய ஊர்ச் சிறப்பு வாய்ந்த உணவு முறைகுறித்து எழுதுவதைப் படிக்கும்போது எதன் பொருட்டு எல்லாவற்றையும் இழந்துகொண்டிருக்கிறோம் என்ற ஏக்கம் எழுகிறது. பஷீர் பற்றிய சுகுமாரனின் குறிப்பு சுவாரசியம். சாரு நிவேதிதா, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் எல்லாம் எப்போது உயிரோசையில் எழுதப் போகிறார்கள்?
ராகவன்
மலேசியா